Friday, October 01, 2004

பாம்பாட்டி


Mark Harden

Henri Rousseau வின் 'பாம்பாட்டி' என்ற இந்த ஓவியத்தை எத்தனை முறை நான் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பேன் என்று எனக்கே நினைவில்லை. சில ஓவியர்களின் படைப்புக்களுடன் நாம் நம்மையே அடையாளப்படுத்திக்கொள்வோம், அந்த ஓவியங்களுக்குள் தொலைந்துபோகமாட்டோமா என்றிருக்கும் - பீட்டர் ப்ருகேலின் 'நெதர்லாந்துப் பழமொழிகள்' ஓவியத்தின் அடர்த்தியான கூட்டத்துக்குள்ளும், குஸ்தாவ் க்ளிம்ட்டின் அதி அபரிமிதமாக அலங்கரிக்கப்பட்ட ஆடைகள், ஆபரணங்களுக்குள்ளும் 'தொலைந்துபோகமாட்டோமா என்று யோசித்ததுண்டு' என்று ரொமான்டிக்காக எழுதுவதைக்காட்டிலும், அந்தச் சாத்தியக்கூற்றின் புதிரே, நிலையின்மையே அதீத மயக்கந்தருவது. ரூஸ்ஸோவின் அனைத்து ஓவியங்களும் வெப்பமண்டலக் காட்டுப்பிரதேசங்களை அதீத (நான் 'அதீத' ஸ்பெஷலிஸ்ட் ஆகிக்கொண்டு வருகிறேனோ??) அடர்த்தியுடன் சித்தரிப்பவை - சிலநாள் முன்பு நான் வலைப்பதித்த எர்ன்ஸ்ட்டின் ஓவியமும் இதேபோன்ற அழுத்தத்தையும் அமைதியயும் அடர்த்தியையும் கொண்டது. ஆர்ட்கைவ் வலைத்தளத்தில் ரூஸ்ஸோ பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தியைப் படித்துப் பாருங்கள்: புறநகர (suburban) வாழ்க்கை என்பதன் வசீகரத்தை உணர்ந்ததுண்டா? என் சொந்த ஊரில் கரிசல் மண்ணும் செம்மண்ணும் மாறி மாறிப் பரந்துகிடக்கும் (அல்லது அது என் பிரமையாகக்கூட இருக்கலாம்). இதைப் படித்துவிட்டுக் கீழே தொடர்க.

The profusion of tropical vegetation also reflects another of Rousseau's desires. This impecunious suburbanite, aware that he had led an unadventurous life, was through the evocation of the "incredible floridas" of Arthur Rimbaud's visions to satisfy his own need for dream, for escape the same escape Rimbaud and Gauguin had sought in flight and revolt; that Pierre Loti (whose portrait Rousseau painted c. 1891) was to realize in the conformist career of naval officer and celebrated novelist; that Redon, Gustave Moreau, Fantin Latour, and Stephane Mallarme would find by taking refuge in their inner worlds, Monet beside his pond, Cezanne opposite his mountain.

வீட்டிலேயே அடைந்துகிடக்கும் ஒரு மனப்பரப்பு என்றாவது வீட்டோடு குறுகியதுண்டா? ஒரு சிறிய மழை, நிலத்திலிருந்து கிளர்ந்தெழும் வாசனைகள், தொண்டையில் இறங்கும் தேனீர், புகையும் சிகரெட் - மப்பும் மந்தாரமுமான வானம் - இந்த முப்பரிமாண ஓவியத்துக்குள் பலமுறை அலைந்திருக்கிறேன்; தேவதச்சனின் ஏதோ ஒரு கவிதை, ஓவியத்திலிருக்கும் பறவையின் சிறகுக்கும் ஓவியம் பதிந்துள்ள கான்வாஸுக்குமிடையிலுள்ள இடைவெளியப்பற்றிக் குறிப்பிடும். அந்த இடைவெளி எத்தனை பேர் கண்ணுக்குத் தப்பி என்னை வந்தடைந்ததோ? இந்தப் 'பாம்பாட்டி'யில் மகுடி (அல்லது குழல்) வாசித்துக்கொண்டிருப்பது நான் என்று நானே கூறிக்கொள்கிறேன். புறநகர வாழ்க்கையிலிருந்து ரூஸோ தன் ஓவியங்கள் மூலம் தப்பித்தது போல எத்தனை முறை நிச்சலனத்திலிருந்து தப்பித்துத் தப்பித்து விளையாடிக்கொண்டிருக்கிறேன்? ஒருவகையில் பார்க்கப்போனால், இந்த ஓவியங்களைப் பார்த்து எழுபது பக்கம் எழுதவேண்டும் என்று இல்லாமல், ஆயிரம் முறை அவற்றைக் கடந்துபோய் ஒரு பொறி உராய்ந்தால் போதும் என்பது என் எண்ணம். 'அனைவரும் கதாசிரியனாக, கவிஞனாக ஆசைப்படுகிறார்கள், யாரும் பார்வையாளனாக இருப்பதை விரும்பவில்லை' என்று ஒரு அந்தக வயோதிகர் சொன்னார் - 'நான் பார்வையாளனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்' என்று உலகத்தில் யாராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை! முயன்று வேண்டுமானால் பார்க்கலாம். 'Pedagogical இலக்கியம்' என்பது குறித்து எனக்கு ஆழ்ந்த சந்தேகம் எப்போதும் உண்டு. நீட்ஷே, ஷோப்பனார், உம்பர்த்தோ ஈக்கோ போன்றவர்கள் பல்கலைக்கழகங்களில் படித்ததனால் அவர்கள் எழுதியதை நாம் ஒதுக்குவதில்லை என்றாலும், சமீபத்தில் 'Conversations about the end of time' என்ற புத்தகம் படித்தேன். ஸ்டீஃபன் ஜே கௌல்ட், உம்பர்த்தோ ஈக்கோ, ஷான் க்ளௌத் கரியர் மற்றும் இன்னொருவர் - நால்வரும் Y2K பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு அறிவுத்துறைகள் காலத்தை, காலத்தின் முடிவை எப்படி யூகிக்கின்றன என்று விவாதித்த புத்தகம் - அதின் ஈக்கோ 'Gimme a break' என்ற ரீதியில் சொல்லியிருப்பார் - 'முறையாகப் பயிலாத எத்தனையோஎழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன், என்னதான் மேதாவிகளாக அவர்கள் இருந்தாலும் ஏதோவொன்று அவர்களிடம் குறைவதுபோல் எனக்குப் படும்' என்றிருப்பார்! கிழக்கத்தியத் தத்துவத்துக்கும் ஒரு ம்க்கும் தான். நான் ஏதோ கிழக்கத்தியக் கொடியைத் தூக்கவில்லை. ரோஜாவின் பெயர், ஃபூக்கோவின் பெண்டுலம் இரண்டையும் படித்தபோதிருந்த வசீகரம், 'நேற்றிருந்த தீவு' 'கான்ட் மற்றும் ப்ளாட்டிப்பஸ்' இரண்டையும் படித்தபோது தணியத்தொடங்கி, 'மீயதார்த்ததுடனான பயணங்கள்' மற்றும் இந்தப் புத்தகம் படித்தபோது அதலபாதாளத்துக்கு வந்து நின்றது. தாகூரை போர்கேஸ் 'Well meaning trickster' என்று எந்த அர்த்தத்தில் சொன்னாரோ, அதேபோல்தான் எனக்கும் ஈக்கோவைப்பற்றித் தோன்றியது. தங்கள் புத்தகங்களை விளக்க ஆரம்பிக்கும் எழுத்தாளர்கள் பரிதாபமாக வீழ்கிறார்கள். இப்போது ஈக்கோ என்றால் வெறுமனே ஒரு கிறிஸ்துவ வரலாற்றாளர் - என்றுமட்டும்தான் தோன்றுகிறது. அவரது படைப்புக்கள் அனைத்தும் அறிவைச் சுற்றிக் கட்டப்பட்டவை - அறிவு என்பது வளரும் ஒன்று. எராக்ளிட்டஸின் நதித் தண்ணீர் போல, நாளை அவை பழதே. இங்கே அப்படைப்புக்கள் கூடத் தேயாமலே இருந்துபோவதற்குக் காரணம், ஆவணப்படுத்தல்மேல் மேற்கத்திய சமுதாயத்துகிருக்கும் அலாதிப் பிரேமையே - அமெரிக்க கித்தார் அருங்காட்சியகங்கள் அவற்றுக்குச் சிறு உதாரணங்களே. அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு 'Arrow of time' என்னும் கருத்து இங்கு எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறதென்று தெரியவரும்.

மறுபடியும் திசைதவறிவிட்டது. பாம்பாட்டி மகுடியை வேறெங்கோ பார்த்துக்கொண்டு ஊதினால் இப்படித்தான், பாம்பு தப்பித்துவிட்டது. வெள்ளிக்கிழமை சாயந்தரம் வேறு, தாகம் எடுக்கிறது! மறுபடிப் பார்க்கலாம்?


1 comment:

Anonymous said...

ஃபூக்கோவின் பெண்டுலம் ??

ஈக்கோ??