Saturday, May 07, 2005

இவ்வலைப்பதிவு வேறிடத்துக்கு மாறியுள்ளது

இந்த வலைப்பதிவு இனிமேல் இந்தத் தளத்திலிருந்து இயங்கும். பழைய பதிவுகளைப் படிக்கவேண்டுமெனில் அங்கேயே படிக்கலாம் - இந்த வலைத்தளத்தில் (http://dystocia.blogspot.com) இனிப் பின்னூட்டம் இடுவதைத் தயவுசெய்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.


பழைய ஷூ: ஜோன் மீரோ. படம் நன்றி: மார்க் ஹார்டென்

Thursday, April 21, 2005

புது திரைப்பட வலைப்பதிவு: பயாஸ்கோப்பு

உலகத் திரைப்படங்களைப்பற்றி தமிழ் வலைப்பதிவுகளில் பலரும் எழுதி வருகிறார்கள் - விமர்சனங்களின் இறுக்கத்தையும் தாண்டி தனிப்பட்ட திரையனுபவங்களும் ரசனையை வளர்க்க இன்றியமையாதவை என்பதால் இந்த வலைப்பதிவு தொடங்கப்படுகிறது. இந்த வலைப்பதிவு என்னுடைய தனிப்பட்ட வலைப்பதிவாக இயங்கும்.

திரைப்படங்களைப்பற்றிப் பலரும் எழுதுவதால், எழுதப்படும் பதிவுகள் அனைத்தையும் இங்கு பதிப்பிப்பது, திரைப்படம் தொடர்பாக வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில், திரைப்படங்கள் பற்றி என் கண்ணில் படும் அனைத்து வலைப்பதிவுகளையும் இங்கே சேர்க்க உத்தேசித்திருக்கிறேன்.

1) சேர்க்க உத்தேசித்தாலும், எழுதுபவர்கள் ஆட்சேபித்தால் இங்கே இட உத்தேசமில்லை. மேலும், எழுதுபவர்களின் அசல் வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் இங்கு திசைதிருப்பப்படாமலிருக்க, இந்த வலைப்பூவில் பின்னூட்டமளிக்கும் வசதியை நீக்கியுள்ளேன்.

2) ஒவ்வொரு பதிவின் text ஐ மட்டும், குறிப்பிட்ட வலைப்பதிவுகளிலிருந்து வெட்டி இங்கே ஒட்டுவதாய் எண்ணம். அப்படி ஒட்டிப் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு வலைப்பதிவின் தொடக்கத்திலும் அசல் வலைப்பதிவுக்கான சுட்டி இருக்கும். பின்னூட்டம் அளிக்க விரும்புபவர்கள், அந்த அசல் பதிவுக்குச் சென்று பின்னூட்டம் இடலாம்.

3) தமிழ்ப் படங்களைப்பற்றிப் பேசப் பலரும் இருப்பதால், தமிழ் அல்லாத பிறமொழிப் படங்கள் (இந்திய மொழிகள், அயல்நாட்டு மொழிகள்) குறித்த பதிவுகளை மட்டும் இங்கே இடுவதாய் உத்தேசம். ஒற்றை வரிப் பதிவுகள் என்றில்லாமல், சில பத்திகளாவது எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இங்கே இடுவதாய் உத்தேசம்.

4) அசல் பதிவின் தலைப்பு எப்படியிருப்பினும், இங்கே இடப்படும் பதிவின் தலைப்பு, படிப்போரின் வசதிக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும். உதாரணம் - (Mouna Ragam: மௌன ராகம்)

5) எனக்குப் பிடித்த/பிடிக்காத பதிவுகள் என்பதை இங்கே ஒரு அளவுகோலாக நான் கொள்ளவில்லை. இதற்கு முன் எழுதப்பட்ட பதிவுகளிலும், இனி எழுதப்படும் பதிவுகளிலும் படிக்க நேர்வதை இங்கே இட முயல்வேன்.

6) இந்த வலைப்பூவுக்குப் பின்னூட்டமிட வசதி இராது என்பதால், இதே பதிவை எனது மற்றைய வலைப்பதிவிலும் இடுகிறேன். இதை மேலும் சீர்ப்படுத்தவோ, நன்றாகச் செய்யவோ, தேவையில்லை எனவோ கருத்துக் கூற விரும்புபவர்கள் அங்கே பின்னூட்டமிடலாம். அந்தப் பதிவுக்கும் இந்தத் தளத்தில் இணைப்புக் கொடுக்கப்படுமென்பதால், பின்வரும் நாட்களில் ஆட்சேபணைகள் இருப்பவர்களும் அங்கேயே பின்னூட்டமிட்டால், பயாஸ்கோப்பு வலைப்பூவிலுள்ள பதிவுகளை நீக்கிவிடமுடியும்.

முன்பே இதுகுறித்துப் பேசியிருப்பதால், ஆட்சேபிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில், நாராயணனின் ஒரு பதிவையும், எனது சில பதிவுகளையும் மாதிரிக்கு இடுகிறேன். அதன் textஐ வாசகர்கள் படிக்கமுடியுமே தவிர, அதன் சுட்டிகளை உபயோகிக்கவோ, பின்னூட்டம் இடவோ முடியாது. சுட்டிகளைத் தொடரவேண்டுமெனிலோ, பின்னூட்டம் இடவேண்டுமெனிலோ அசல் வலைப்பதிவுகளுக்குத்தான் வந்தாகவேண்டும். அந்தவகையில், பதிவுகள் வாசிக்கப்படவேண்டும் என்பதே பிரதான நோக்கம், site hit எண்ணிக்கை மட்டும் நோக்கமில்லை எனின், இது ஒரு அனுகூலமே: உங்கள் பதிவு அங்கோ இங்கோ - படிக்கப்பட வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட விருப்பத்தினாலும், பொது உபயோகத்துக்குச் சுலபமாக இருக்குமென்ற எண்ணத்தினாலும் மட்டுமே இதைத் தொடங்க உத்தேசம். மற்றப்படி ஒவ்வொருவருடனும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் இருக்காது என்பதால், உங்களது பதிவுகளை நான் உபயோகித்திருப்பது உங்களுக்கு ஆட்சேபமெனில், எனது அசல் வலைப்பதிவின் சமீபத்தைய பதிவில் பின்னூட்டம் இடவும். மற்றப்படி, இது எந்தவிதத்திலும் யாருடனும் உரசலை ஏற்படுத்தும் என்றால், உடனுக்குடன் கடை இழுத்துச் சார்த்தப்படும் - அதுவரையிலான என் நேர விரயம் தவிர, யாருக்கும் நஷ்டமிராது.

Friday, April 15, 2005

அமெரிக்கா

அமெரிக்கா
-ஆலன் கின்ஸ்பெர்க்

அமெரிக்கா உனக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டேன், இப்போது நானொரு பூஜ்யம்.
அமெரிக்கா இரண்டு டாலர்களும் இருபத்தேழு சென்ட்டுகளும் ஜனவரி 17, 1956.
என் எண்ணங்களை என்னாலேயே சகிக்கமுடியவில்லை.
அமெரிக்கா எப்போது மனிதப் போரை முடிப்போம்?
உன் அணுகுண்டைக்கொண்டு உன்னையே புணர்ந்துகொள் போ.
நானேதும் நன்றாயில்லை என்னைத் தொந்தரவு செய்யாதே.
என் புத்தி தெளிவாயிருக்கும்வரையில் என் கவிதையை எழுதமாட்டேன்.
அமெரிக்கா எப்போது தேவதைத்துவமடைவாய் நீ?
எப்போது உன் ஆடைகளைக் களைவாய்?
எப்போது சவக்குழிகளிவழி உன்னையே பார்த்துக்கொள்வாய்?
எப்போது உனது மில்லியன் ட்ராட்ஸ்கியர்களுக்கு உன்னை நீ தகுதியானதாக்கிக்கொள்வாய்?
அமெரிக்கா உன் நூலகங்கள் ஏன் கண்ணீரால் நிறைந்திருக்கின்றன?
அமெரிக்கா உனது முட்டைகளை எப்போது இந்தியாவுக்கு அனுப்புவாய்?
உனது பைத்தியக்காரத்தனமான நிபந்தனைகள் என்னை வெறுப்படையச்செய்கின்றன.
எப்போது நான் பல்பொருளங்காடிக்குப்போய் என் தோற்றத்தைக்கொண்டு விரும்பியதை வாங்கமுடியும்?
அமெரிக்கா சொல்லப்போனால் நீயும் நானும்தான் துல்லியமானவர்கள் வெளியுலகம் அல்ல.
உனது யந்திரங்களை என்னால் சமாளிக்கமுடியாது.
என்னை ஓர் துறவியாயிருக்க விரும்புமாறு செய்துவிட்டாய் நீ.
இந்த விவாதத்தை முடிக்க வேறொரு வழி இருக்கவேண்டும்.
பர்ரோஸ் டாஞ்சியர்ஸில் இருக்கிறான் அவன் திரும்ப வரப்போவதில்லையென நினைக்கிறேன் அதொரு விபரீதம்
நீ விபரீதமாயிருக்கிறாயா அல்லது இது வெறும் விளையாட்டா?
விஷயத்துக்கு வர முயல்கிறேன்.
என் பிரேமையை உதற மறுக்கிறேன்.
அமெரிக்கா தொந்தரவை நிறுத்து என்ன செய்கிறேனென்பது எனக்குத் தெரியும்.
அமெரிக்கா ப்ளம் பூக்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
செய்தித்தாள்களைப் பலமாதங்களாகப் படித்திருக்கவில்லை நான், கொலைக்குற்ற விசாரணைக்காகத் தினமொருவன் செல்கிறான்
அமெரிக்கா தொழிலாளர்களைக்குறித்து உணர்ச்சிவசப்படுகிறேன்.
அமெரிக்கா சிறுவனாயிருக்கும்போது கம்யூனிஸ்ட்டாயிருந்திருக்கிறேன் அதுகுறித்து நான் வருந்தவில்லை.
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மரியுவானா புகைக்கிறேன்.
நாட்கணக்கில் என் வீட்டிலமர்ந்து என் ஆடையறையிலுள்ள ரோஜாக்களை முறைக்கிறேன்.
சைனாடவுனுக்குப் போகும்போதெல்லாம் குடித்துவிட்டுப் படுத்தெழுகிறேன்.
ஏதோ பிரச்னை வருமென்றுமட்டும் மனம் தீர்மானித்துவிட்டது.
நான் மார்க்ஸைப் படிப்பதை நீ பார்த்திருக்கவேண்டும்.
என் உளப்பகுப்பாய்வாளர் நான் முற்றிலும் சரியானவனேயென நினைக்கிறார்.
கடவுள் பிரார்த்தனை கூறமாட்டேன் நான்.
நான் அனுபவிக்கிறேன் பிரபஞ்ச அதிர்வுகளை உத்பக்கக் காட்சிகளை.
அமெரிக்கா இன்னும் உன்னிடம் நான் சொன்னதில்லை ரஷ்யாவிலிருந்து வந்தபின்பு
மாக்ஸ் மாமாவை என்ன நீ செய்தாயென்று.

உன்னிடம்தான் சொல்கிறேன்.
எங்களது உணர்வுபூர்வ வாழ்க்கையை டைம் பத்திரிகை செலுத்த அனுமதிக்கப்போகிறாயா?
நான் டைம் பத்திரிகைக்கு அடிமை.
ஒவ்வொரு வாரமும் அதைப் படிக்கிறேன்.
மூலை மிட்டாய்க்கடையை ஒவ்வொருமுறை கடக்கும்போதும் அதன் அட்டை என்னை முறைக்கிறது.
பெர்க்லி பொதுநூலகத்தின் கீழ்த்தளத்தில் அதைப் படிக்கிறேன்.
பொறுப்பைப்பற்றியே எப்போதும் எனக்குக் கூறுகிறது அது. வியாபாரஸ்தர்கள் தீவிரமானவர்கள். திரைப்படத்
தயாரிப்பாளர்கள் தீவிரமானவர்கள். அனைவரும் தீவிரமானவர்கள் என்னைத் தவிர.
நான்தான் அமெரிக்கா என்று எனக்கு உறைக்கிறது.
மறுபடியும் என்னுடனே நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கெதிராக ஆசியா எழுகிறது.
ஒரு சீனனின் வாய்ப்புக்கூட எனக்கில்லை.
பேசாமல் பரிசீலனை செய்கிறேன் என் தேசிய வளங்களை.
என் தேசிய வளம் இரண்டு மரியுவானா சிகரெட்டுகளும் மில்லியன் கணக்கிலான இனப்பெருக்க உறுப்புக்களும்
மணிக்கு 1400 மைல்கள் போகும் பதிப்பிக்கமுடியாத தனிப்பட்ட இலக்கியமும்
இருபத்தைந்தாயிரம் மனநோய்க் காப்பகங்களும்.
எனது சிறைகளைப்பற்றியோ என் பூத்தொட்டிகளில் ஐநூறு சூரியன்களின்கீழ்
வாழும் வாய்ப்பற்றவர்களையோ பற்றி நான் ஏதும் சொல்வதில்லை.
ஃபிரான்ஸின் வேசிக்குடிகளை அழித்தாயிற்று நான், மிஞ்சியிருப்பது டாஞ்சியர்ஸ் மட்டுமே.
கத்தோலிக்கனாக இருந்தாலும்கூட ஜனாதிபதியாகிவிடவேண்டுமென்பதே என் குறிக்கோள்.

அமெரிக்கா உனது அசட்டு மனோநிலையிலிருந்துகொண்டு எப்படி நான் ஒரு புனிதத் துதி இயற்றமுடியும்?
ஹென்றி ஃபோர்டு போலத் தொடர்கிறேன் எனது ஈரடித்தாளகதி அவரதளவு தனித்துவமானதே
வாகனங்கள் இன்னும் அதே அவைகளனைத்தும் வெவ்வேறு பால் வேறு
அமெரிக்கா $2500க்கு உனக்கு ஈரடித்தாளகதிகளை விற்கிறேன், பழையதைக் கொடுத்தால் $500 தள்ளுபடி
அமெரிக்கா டாம் மூனியை விடுதலைசெய்
அமெரிக்கா ஸ்பானிய அபிமானிகளை விடுதலைசெய்
அமெரிக்கா சாச்சோ வன்ஸெட்டி இறக்கக் கூடாது
அமெரிக்கா நான் ஸ்காட்ஸ்பரோ பதின்மர்கள்.
அமெரிக்கா என் அம்மா கம்யூனிஸ்டுக் கூட்டங்களுக்கென்னை அழைத்துச்சென்றபோது என் வயது ஏழு அவர்கள் ஒவ்வொரு சீட்டுக்கும் கைப்பிடியளவு கொண்டைக்கடலை விற்றார்கள்
ஒரு சீட்டின் விலை ஐந்து சென்ட்டுகள் அங்கே
பேச்சுக்கள் இலவசம் அனைவரும் தேவதைத்துவத்துடன் தொழிலாளர்களின்மீது
அக்கறையுடன் அதெல்லாம் மிக ஒழுங்காயிருந்தது 1935ல் கட்சி எவ்வளவு நன்றாயிருந்ததென உனக்குச் சுத்தமாக விளங்காது ஸ்காட் நியரிங் ஒரு மூதாதையாயிருந்தார் அசல் கௌரவத்துடன்
ப்ளூரால் அழுதேன் ஒருமுறை இஸ்ரேல் ஆம்ட்டரை நேரில் பார்த்தேன். அனைவருமே
உளவாளிகளாயிருந்திருக்கவேண்டும்.
அமெரிக்கா நீ போருக்குப் போவது உசிதமல்ல
அமெரிக்கா கெட்டவர்கள் ரஷ்யர்களல்ல.
அந்த ரஷ்யர்கள் அந்த ரஷ்யர்கள் பிறகந்த சீனர்கள். பிறகந்த ரஷ்யர்கள்.
அந்த ரஷ்யா நம்மை உயிருடன் விழுங்கமுயல்கிறது. அந்த ரஷ்யா ஆதிக்க வெறிபிடித்தது. நமது கார்களை கராஜிலிருந்து பெயர்க்கமுயல்கிறது.
அவள் சிகாகோவைச் சுருட்டமுயல்கிறது. அவளுக்கொரு சிவப்பு ரீடர்ஸ் டைஜஸ்ட் தேவை. அவள் நமது வாகன ஆலைகள் சைபீரியாவிலிருக்க விருப்பம். அவன் பெரும் அதிகாரவர்க்கம் நமது பெட்ரோல்நிலையங்களை நடத்தியவாறு.
அது சரியில்லை. சே. அவன் இந்தியன்களுக்கு எழுதப்படிக்கக் கற்பிக்கிறான். அவனுக்குத்தேவை பெருத்த கருத்த கறுப்பர்கள்.
ஹா. அவள் நம்மைத் தினமும் பதினாறுமணிநேரம் வேலைசெய்ய வைப்பது. உதவி.
அமெரிக்கா, இது உண்மையில் தீவிரமான விஷயம்.
அமெரிக்கா தொலைக்காட்சியில் பார்ப்பதில் இப்படித்தான் எனக்குப் படுகிறது.
அமெரிக்கா இது சரியா?
உடனே நான் பேசாமல் வேலையில் இறங்குகிறேன்.
ராணுவத்தில் சேரவோ நுணுக்கப்பாகத் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் லேத்துகளைத் திருப்பவோ எனக்கு விருப்பமில்லை என்பது நிஜமே,
எப்படியிருப்பினும் எனக்குக் கிட்டப்பார்வை மனநோய்.
அமெரிக்கா எனது மறைகழன்ற கைகளை ஸ்டியரிங் சக்கரத்தில் வைக்கிறேன்.

தமிழில்: மாண்ட்ரீஸர்

*ஈரடித்தாளகதி - strophe என்னும் வார்த்தைக்குச் சரிநிகர் தமிழ் வார்த்தை? இசைப் பரிச்சயம் உள்ளவர்கள் உதவலாம்.
*spanish loyalists என்பதன் அரசியல் சரிநிகர் வார்த்தை குறித்த நிச்சயமின்மையால் அபிமானிகள் என்று இட்டிருக்கிறேன். லாயலிஸ்ட்டு என்று கூட இருக்கலாமென்று நினைக்கிறேன்.
*queer shoulders - கைகள் என்று போட்டிருப்பது பொருந்துமென்றே நினைக்கிறேன்.

வெள்ளிக்கிழமை ஆசுவாச/அவசரத்தில் பெயர்த்த அரைவேக்காடு எனினும், கின்ஸ்பர்கின்(ஒருவகையில் கம்யூனிஸ்ட்டு அனுதாப) கவிதையை மொழிபெயர்த்ததற்கு ஏதும் சட்டம் பாயாது என்று நம்புகிறேன்!! ஜனநாயகத்தின் மேலுள்ள நம்பிக்கை தான் :-) போன கவிதையில் 'tiles' என்பதைச் சரிவர யோசியாமல், ஆகாயத்தைப் பார்க்காமல் தரையைப் பார்த்துக்கொண்டு :-( அபத்தமாக மொழிபெயர்த்தது மாதிரி (திருத்தியாயிற்று, நன்றி பெயரிலி) ஏதாவது பெரும் தவறுகளிருப்பின் குறிப்பிடவும்!!

'அமெரிக்கா' ஆங்கில வடிவம். கின்ஸ்பெர்கின் Howlஐத் தமிழில் கொண்டுவரவேண்டுமென்பது நெடுநாளைய விருப்பம், முடிவதில்லை!!

Thursday, April 14, 2005

கல் கிராமங்கள்

கல் கிராமங்கள்
-ஜோஸஃப் ப்ராட்ஸ்கி

கற்களால் கட்டப்பட்ட இங்கிலாந்துக் கிராமங்கள்.
மதுச்சாலையொன்றின் ஜன்னலுக்குள் அடைபட்டவொரு கதீட்ரல்.
வயல்வெளிகளில் திரிந்துகிடக்கும் பசுக்கள்.
அரசர்களுக்கான நினைவுச்சின்னங்கள்.

பூச்சி அரித்த மேலங்கியணிந்த ஒரு மனிதன்
இங்கே அனைத்தையும்போலவே கடலைநோக்கிச் செல்லும் ரயிலுக்கு விடையளிக்கிறான்,
கிழக்குநோக்கிச் செல்லும் தன் மகளைநோக்கிப் புன்னகைத்து.
விசில் ஊதப்படுகிறது.

பெருகும் பறவையின் பாடல் நிரப்புகையில் நீலமாகிறது
ஓடுகளுக்கு மேலுள்ள முடிவற்ற வானம்.
பாடல் தெளிவாகக் கேட்கப்படக் கேட்கப்பட
சிறிதாயிருக்கிறது பறவை.

தமிழில்: மாண்ட்ரீஸர்

ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவம்

Monday, April 11, 2005

தலைகீழ்

தலைகீழ்

ஒற்றைக் கையில் ஊன்றித்
தலைகீழாய் நின்று முகம்புதைக்கிறான்
கவிழ்ந்த நிலவுகளுள் உதிர்ந்த நட்சத்திரங்களுள்
பற்களில் அரைத்த
நட்சத்திரப் பொடிகளைக் கோப்பைக்குள் தூவி
விளிம்புவரை ஊற்றுகிறான்
உன் இதயத்தை அறுக்கும் குடியென்கிறான்
சிலநிமிடத் துன்பமே
தவிர்
தவிரென்பது உன் கோப்பைக்கும்
கழுத்துக்குமிடையில் அசையும் தளை
நீ அறுக்கவேண்டியது அதுவே என்கிறான்

கோப்பையை உயர்த்திக் குடிக்கிறேன்
தலைகீழாய்த் தொங்கித் துடித்தசையும்
கரும்பச்சை நாளங்கள்
கறுப்புத் தலைமயிர்க் கற்றைகள் பார்த்தவாறு
ஒவ்வொரு மிடறும் ஒவ்வொரு புன்னகை
ஒவ்வொரு புன்னகை ஒவ்வொரு துகள்
தொண்டை கிழிப்பதும்
குடலைக் கிழிப்பதும் என் இதயம் கிழிப்பதும்
எனது தேர்ந்தெடுப்பின் துகள்களே

தலைகீழாய் நிற்கும் அவன் கைகள் தலைகளினூடாய் நுழைந்து
நீலத் தார்ப்பாலின் வைக்கோல் மணம்வீச என்னை நெருங்கும் விசித்திர மிருகம்
புன்னகைத்து என் உதட்டில் உறைந்திருக்கும்
துகள்களை ரத்தத்தை நக்குகிறது
நாவைச் சுழற்றிப் புன்னகைக்கிறது
மண்படிந்த தனது பாதங்காட்டிப் பெருமூச்சிடுகிறது
உள்ளங்கையில் நெரிபடும் சீனிக்கற்களுடன்
கோப்பையை நொறுக்குகிறேன்
பொடித்த கோப்பையை விதைத்த இடத்தில்
நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருப்பதே
நெல்மரங்கள் நிறைந்த காடு.

-மாண்ட்ரீஸர்

Sunday, April 10, 2005

சின் சிட்டி

க்வென்டின் டாரன்டினோவின் முந்தைய அனைத்துப் படங்களுக்கும் (Reservoir dogs, Pulp ficiton, Jackie Brown, Kill Bill Volume I&II) பெரும் விசிறி நான். வன்முறையைத் தூக்கிப்பிடிக்கும் படங்கள் என்று விமர்சனங்கள் இருந்தாலும்கூட, வெளிப்படையான வன்முறை என்பதை, வன்முறை தரும் அதிர்ச்சியையும் தாண்டி ஒரு குரூர நகைச்சுவை போலச் சித்தரிப்பதில், படு நக்கலான வசனங்களில், மிக அசலான soundtrack களில் என்று அனைத்துப் படங்களும் ரசிக்கத்தக்கவகையில் இருக்கும். தமிழில்-அல்லது, இந்திய மொழிகளில் எனில், ராம்கோபால் வர்மாவை ஒரு ஒப்புமையாகச் சொல்லலாம். ரெசர்வார் டாக்ஸில் போலீஸ்காரனொருவன் காதை அறுப்பது, பல்ப் ஃபிக்-ஷனில் (ஃபிக்ஷன் ஃபிக்ஷன் ஆக்ஷன் என்று 'கதாகாலக்ஷேபம்' ஸ்டைலில் எ-கலப்பையில் வருவதை யாராவது சரிசெய்தால் நன்றாயிருக்கும்...) பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டும் கொலைகாரர்கள், மூன்று தலைமுறைகளின் ஆசனத்துளைகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருந்து (முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் யுத்தம்) சிறுவனாயிருக்கும் ப்ரூஸ் வில்லிஸுக்கு பரம்பரைக் கடிகாரம் வந்து சேர்வதில் என்று காணக்கூடிய எள்ளல்; கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் இரட்டைத்துரோகிகள் (double-crossers?) 'கீழ்ப்பிறவிகள்' என்று நான்கே நான்கு படங்கள் மூலமாக டாரன்டினோ கடைவிரித்த உலகத்தைப்போலவே இன்னொரு புறமும் ஒரு உலகத்தை விரிக்கமுயன்றுகொண்டிருந்த ராபர்ட் ரோட்ரிகஸின் (Robert Rodriguez), சில முயற்சிகள் தடுமாற்றங்களுக்குப்பின் வந்திருக்கும் Sin City யைக் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பார்த்தேன். ரோட்ரிகஸின் முந்தைய El Mariachi படங்களும் Spy Kids படங்களும் இங்கே மிகவும் பிரபலமானவை எனினும், ஸ்பை கிட்ஸ் படத்தை முழுக்க டிஜிட்டல் முறையில் படம்பிடித்ததையும்ம், சினிமா என்பதை சட் சட்டென்று சுருக்கமாக ஒரு குடிசைத்தொழில் மாதிரி வெகு குறைந்த பணத்தில் எடுக்கமுடியும் என்று ரோட்ரிகஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருப்பதையும் திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர்கள் பார்க்கவேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு டாரன்டினோவையும் இழுக்க முயற்சிக்கும் ரோட்ரிகஸ், இந்தப் படத்தில் சில பகுதிகளை டாரன்டினோவை விட்டு இயக்கச்செய்திருக்கிறார். டாரன்டினோ குறித்துத் தனியாக ஒருதரம் எழுத நோக்கமிருப்பதால், இப்போது சின் சிட்டி குறித்து...

ஃப்ராங்க் மில்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட Sin City என்ற Graphic novel தொடரின் மூன்று கதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது இந்தப் படம். ஓய்வுபெறச் சில நாட்களே இருக்கும் காவல்துறைத் துப்பறிவாளன் கார்டிகன் (ப்ரூஸ் வில்லிஸ்), தன்னுடன் ஒரு இரவைக் கழித்த, தான் மிகவும் நேசித்த ஒரு வேசியைக் கொலைசெய்துவிட்டவர்களைத் தேடிச் செல்லும் வழியிலெல்லாம் முரட்டுத்தனமான அழிவை விசிறிவிடும் மார்வ் (மிக்கி ரூர்க்), ஒரு முரட்டுத்தனமான போலீஸ்காரனைக் கொன்றுவிட்டு, 'பழைய நகரம்' என்றழைக்கப்படும் விபச்சாரத் தொழில்நிறைந்த புறநகர்ப் பகுதியில் தன் தோழிகளான வேசிகளின் துணையுடன் அதை மறைக்க முற்படும் முன்னாள் புகைப்படக்கலைஞன் ட்வைட் (க்ளைவ் ஓவன்) மூவரின் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கதைகள் - ஃப்ராங்க் மில்லரின் அசல் கதைகளான Sin City, The Big Fat Kill மற்றும் That Yellow Bastard மூன்றையும் அடிப்படையாகக் கொண்டவை. புத்தகங்களை நான் வாசித்ததில்லை.

சிறிது காலம் முன்புவரை, மோனிகா பெல்லுச்சி நடித்த Irreversible என்ற ஃபிரெஞ்சுப் படம்தான் சமீபத்தைய நினைவுக்குத் தெரிந்தவரையிலான குரூர வன்முறையின் உச்சம் என்று நினைத்துக்கொண்டிருந்தது (அதாவது, ரத்தம் தெரிவதுதான் வன்முறை என்ற ரீதியில் அன்றி), சின் சிட்டியைப் பார்த்ததும் புஸ்ஸென்று போயிற்று. கொ...யைக் கழற்றுவது என்று பேச்சுவழக்கில் எத்தனையோ முறை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், படத்தின் இறுதியில் Yellow bastard பாத்திரத்தின் விரைகளை, மஞ்சள் கிழங்கை மண்ணுக்குள்ளிருந்து உருவுவதுபோல ப்ரூஸ் வில்லிஸ் உருவுவதையெல்லாம் பார்க்க மனோதிடமற்றவர்கள், படம்பார்க்கப் போவதற்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்தல் நலம்!! துப்பாக்கியால் சுட்டாலும் தொடையிடுக்கில்தான் சுடுகிறார்கள், உடம்பெல்லாம் பிளாஸ்திரிகள் ஒட்டிய - கிட்டத்தட்ட பழங்கால Boris Karloff மாதிரி ஃப்ராங்கென்ஸ்டீனிய மார்வ், குழந்தைமுக நரமாமிசத்தின்னி கெவினை (Lord of the Ringsல் ஃப்ரோடோவாக வரும் எலிஜா உட்) அடித்துத் துவைத்து, கைகால்களை வெட்டியெறிந்து மீதியிருக்கும் முண்டத்தை நாயைவிட்டுத் தின்னவிடுகிறான், முரட்டுப் போலீஸ்காரனின் துப்பாக்கி பின்புறமாக வெடித்து, துப்பாக்கியின் குழாய் நெற்றியைத் துளைத்துக்கொண்டு நிற்கிறது....

வன்முறை என்பதற்கு இவ்வளவும். இதைத் தாண்டி, சில தருணங்களைத்தவிர கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒளிப்பதிவு, இசை, கொடூரக் கார்ட்டூன்தனமான பாத்திரங்களை hyperbolize செய்வது இவற்றிலெல்லாம் எங்கேயோ போய் நிற்கிறது. இந்தியாவுக்கு வந்தால் எவ்வளவுதூரம் கத்திரிக்கப்படும் என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படியேவும் திரையிடப்படலாம், தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், படத்தின் பின்பாதியில் வேகம் குறைந்தமாதிரிப் பட்டாலும், கிட்டத்தட்ட கரிக்குச்சி (charcoal stick) தீற்றல் சித்திரங்கள்போல, ஏதோ நமது கணிப்பொறியில் ஃபோட்டோஷாப்பில் செதுக்கப்பட்ட படங்கள்போலப் படுமளவுக்கு அற்புதமான ஒளியமைப்புக்கள், காட்சியமைப்புக்கள்.

Film-noir என்றவகையிலான அடிதடி, குற்றப் படங்களில் இதுபோன்ற அதிதீவிரமான வன்முறையை வெளிப்படையாகக் காட்டும் படங்களும் உண்டு, அல்லது Fargo போல, வன்முறையை வெகு நாசூக்காக, போகிறபோக்கில் சொல்வதுமாதிரி ஏமாற்றும் அற்புதமான படங்களும் உண்டு. இரண்டுக்கும் இடைப்பட்டமாதிரி வெகு நளினமாகச் சொல்லும் கில் பில் போன்ற படங்களும் உண்டு. குப்பை இலக்கியம் (trash literature/trash fiction) என்பது தன்னளவில் துடைத்தெறியப்படவேண்டியதாகக் கருதும்போது, அந்தக் குப்பைப் புனைவுகளையே வேறொரு விதத்தில் திரித்துப் படமாக்கி, "குப்பையைப்பற்றிப் படமாக்கியது குப்பையில்லை" என்ற ரீதியில் படம் பார்ப்பவனையும் படத்தையும் prisoner's dilemma போன்றவொரு கதியில் இயங்கவிட சில இயக்குனர்களாலேயே முடியும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு முறையும் க்வென்டின் டாரன்டினோ ஜெயிக்கும்போது ராபர்ட் ரோட்ரிகஸ் சற்றுப் பின்தங்கியிருப்பதாகவே படும். இந்தமுறையும் அப்படித்தான் பட்டது. மூன்று கதைகள், ஒரு பிணத்துடன் காரில் பயணம் என்று பல்ப் ஃபிக்-ஷனின் பல தடங்கள் இருந்தாலும், இதுகுறித்த விமர்சனங்கள் இருதிசைகளிலும் இருந்தாலும், நான் கொடுத்தால் 'one thumb up' மட்டும்தான் கொடுக்கமுடியும். கார்ட்டூன்களின் வன்முறை, தவிர்க்கவேண்டிய வழிகள், நமது கலாச்சாரத்தில்.... என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கலாம். யோசிக்கையிலேயே ஏதோ க்ளிஷேக் கடலுக்குள் குதிக்கப்போவதுபோலிருப்பதால், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். மதி தனது வலைப்பதிவில் இதுகுறித்தும் எழுதியிருந்தார். படம் வெளியாகியும் அசட்டையாக இருந்து, தற்செயலாக அதைத் திரும்பப் படித்ததாலும், என் இன்னொரு நண்பனும் தூண்டியதாலும், ரோட்ரிகஸின் சில படங்களைப் பார்த்திருப்பதால், சரி, இதிலாவது டாரன்டினோவின் நிழலிலிருந்து வெளிவந்திருக்கிறாரா என்றும் பார்ப்பதற்காகப் போன படம். ம்ஹூம். நிழல் மிகப் பெரிதாக விழுந்திருக்கிறது என்பதுதான் சங்கடமான உண்மை. படத்திலேயே மிக சுவாரஸ்யமான பாத்திரமான மார்வ் வை விளம்பரங்களில் எங்கும் பார்க்கமுடியவில்லை...

படம் நன்றி:ஆமஸான்

Tuesday, April 05, 2005

Disgrace

ஐம்பத்திரண்டு வயது, இரண்டு முறை விவாகரத்தான வெள்ளைக்காரப் பேராசிரியர் டேவிட் லூரீ, வெள்ளை ஆட்சியிலிருந்து மண்டேலா தலைமைக்கு மாறிய தென்னாப்பிரிக்காவில் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆட்சி மாற்றத்தின்பின், பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தாலும், முன்னமிருந்த உயிர்ப்பில்லாததுபோல் தோன்றினாலும், பொறுப்பாகவே வகுப்புக்களை நடத்தி வருகிறார். வதங்கிக்கொண்டிருக்கும் இளமையைக்குறித்தா அல்லது சுற்றியுள்ள சூழல்மாற்றம் திணித்த வெறுமையா அல்லது பெரும்பாலான குட்ஸீ புத்தகங்களிலும் வரும் "அவன்"களிலுள்ள உள்ளார்ந்த அகன்ற (detached), அபத்தத்தின் விளிம்பில் நின்று சாவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு அ-பிரக்ருதியின் சுவாரஸ்யமின்மை என்றோ விளக்கமுடியாத நியதிச்சக்கரத்தின் ஒரு பல்லாகத் தினமும் சுழன்றுகொண்டிருக்கிறார். சொராயா என்னும் விலைமாதுவுடன் பொழுதைக் கழிக்கையில், "சின்ன அறுவைசிகிச்சைதான்: மிருகங்களுக்குத் தினமும் செய்கிறார்கள், சின்ன வருத்தத்தைத்தவிர பெரும்பாலும் அவை நல்லபடியாகவே தொடர்கின்றன. முடிச்சுப் போடுதல், கத்திரித்தல்: வலிநீக்கி மருந்து, நடுங்காத கை, பாடப்புத்தகங்களிலிருந்துகூடச் செய்துவிடலாம். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதன் தனதைத் தானே அறுத்துக்கொள்வது: அசிங்கமான காட்சி, ஆனால், ஒருவகையில் பார்க்கையில், அதே மனிதன் தன்னை ஒரு பெண்ணுக்குள் செலுத்திக்கொள்வதைவிட அசிங்கமானதொன்றுமல்ல" என்று தன்னைத்தானே காயடிப்பதைப்பற்றி யோசித்துக்கொள்கிறார். தற்காலிகமாகப் பிடிப்புவைத்திருக்கும் சொராயா, தனது கணவனுடன் வேற்றிடம் போகிறாள். லூரீ தொலைபேசியில் அவளைப் பிடிக்க, குடும்பத்துடனிருக்கும்போது லூரீ அழைத்துவிட்ட அருவருப்பு அவள் குரலில் தெரிய, திரும்பி வருகிறார்.

நகரத் தெருக்களில் போய்க்கொண்டிருக்கும்போது மரூன் நிற குட்டைப்பாவாடை மஞ்சள்நிற மேல்சட்டை என்று நடந்துபோய்க்கொண்டிருக்கும் மெலனி ஐஸாக்ஸ் என்ற தனது மாணவியொருத்தியைச் சந்திக்கிறார். பின் அவரது வீட்டில் அவர்கள் உணவருந்திவிட்டு காஃபியில் சிறிது விஸ்கியை ஊற்றி அருந்திக்கொண்டிருக்கும்போது லூரீ கூறுகிறார்: "இரு. இரவை என்னுடன் கழி"
"ஏன்?"
"அப்படித் தான்"
"ஏன் அப்படித் தான்?"
"ஏனா? ஏனென்றால் ஒரு பெண்ணின் அழகு அவளுக்குமட்டும் உரித்தானதல்ல. உலகுக்கு அவள் கொண்டுவரும் செல்வங்களுள் அதுவுமொன்று. அதைப் பகிர்ந்துகொள்வது அவள் கடமை."
"அதைப் பகிர்ந்துகொள்வதென்றுவிட்டால்?"
"இன்னும் ஆவேசமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும்"
அன்றைய இரவு கழிகிறது. அடுத்த சில இரவுகளும் பகல்களும். உன்னுடனே வந்து தங்கிவிடட்டுமா என்கிறாள் மெலனீ ஒரு நாள். சற்றுத் தயக்கத்துடன் சரி என்கிறார் ஒருநாள். அவரது முந்தைய மனைவியின் படம் இருக்கிறதா என்கிறாள் மெலனீ. "படங்களைச் சேகரிப்பதில்லை. பெண்களைச் சேகரிப்பதில்லை" என்கிறார் லூரீ.
"என்னைச் சேகரிக்கவில்லையா நீங்கள்?"
"இல்லை"

அவள் வெளியேறிப்போக, அடுத்த நாள் லூரீயின் அலுவலகத்துக்கு மெலனியின் நண்பன் வருகிறான்.
"ஆகவே, நீங்கள்தான் அந்தப் பேராசிரியர்" என்கிறான். "பேராசிரியர் டேவிட். உன்னைப்பற்றி மெலனீ என்னிடம் சொல்லியிருக்கிறாள்"
"அப்படியா. என்ன சொல்லியிருக்கிறாள்?"
"அவளை நீ செருகிக்கொண்டிருக்கிறாயென".
அவர் நடத்தி, மெலனீ ஆஜராகும் வகுப்பறைகளுக்குள் அவளது நண்பனும் வந்து அமர்ந்துகொள்ளத்தொடங்க, பிறருக்கும் விஷயம் கசிந்திருக்க, வகுப்பறைக்குள் தொடர்ந்து சங்கடமான இறுக்கம் நிலவுகிறது. வகுப்பறைக்கு அவள் வராமல் போக, அவள் எழுதாத பரீட்சைக்கும் மதிப்பெண் போட்டு வைக்கிறார் லூரீ. சற்று நாள் கழித்து கல்லூரிக்குள் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது, குள்ளமான, ஒல்லியான, தோள்க்கூனலுடன் சிகரெட் வாசனையுடன் தனது அளவைவிடப் பெரிதான சூட் ஒன்றைப் போட்டுக்கொண்டிருக்கும் மெலனீயின் தந்தையைச் சந்திக்கிறார். "நீங்கள் படித்திருக்கலாம், அது இதுவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் செய்தது சரியில்லை." தலையைக் குலுக்கிக்கொள்கிறான். "சரியில்லை". பிள்ளைகளை உங்களை நம்பி அனுப்பிவிட்டுப் போனால் இப்படியா என்று சீறுகிறான். பல்கலைக்கழகத்திடம் புகார் பதிக்கப்படுகிறது. பல்கலைக்கழக விசாரணைக் குழு லூரீயை விசாரிக்கிறது. எழுதாத பரீட்சைக்கு மதிப்பெண் போட்டதைக்கூட. எதையும் படித்துக்கூடப் பார்க்காமல், "மெலனீ சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் ஒத்துக்கொள்கிறேன்" என்கிறார் லூரீ. குழுவினர் திகைக்கின்றனர். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று. முதலில் ஒரு மன்னிப்புக் கடிதம், பிறகு தன்னிச்சையான ராஜினாமா என்று நேர்க்கோட்டில் ஒரு வீழ்ச்சி நிகழவேண்டாமோ? குழு உறுப்பினர் ஃபரோடியா ரசூல் கூறுகிறாள்: "ஒப்புக்கொள்வதற்குமுன் படித்துப்பார்ப்பது புத்திசாலித்தனமில்லையா?"
"புத்திசாலித்தனமாக இருப்பதைவிட முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன" என்கிறார் லூரீ.

வெளியே போகையில் பத்திரிகையாளர்கள், இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்கிறார்கள். "Enriched" என்றுவிட்டுப் போகிறார். "Enriched" என்று மறுநாள் பத்திரிகைகள் வீறிடுகின்றன.

* * *

நாட்டுப்புறத்தில் ஒரு சின்ன நகரத்தில் பண்ணை வீடொன்றில் விவசாயம் பார்த்துக்கொண்டு ஒண்டிக்கட்டையாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன் லெஸ்பியன் மகள் லூசியுடன் வாழச் செல்கிறார் லூரீ. நாட்டுப்புறம் நகரத்தைவிட வித்தியாசமாக இருக்கிறது. கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமிடையிலான இடைவெளி அதிகத்துக்குச் சுருங்கியிருக்கிறது. லூரீ தூங்கப்போகிறார். இரவின் மத்தியில் ஏகப்பட்ட குலைப்புக்கள் அவரை எழுப்புகின்றன. ஒரு நாய், குறிப்பாக, இயந்திரத்தனமாக இடைவெளியேயின்றிக் குரைத்துக்கொண்டிருக்கிறது; பிற நாய்கள் அவ்வப்போது சேர்ந்துகொள்கின்றன, நிசப்தமாகின்றன, பின்பு தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி மறுபடியும் சேர்ந்து குரைக்கத் தொடங்குகின்றன.
"ஒவ்வொரு இரவும் அப்படித்தானா?" என்கிறார் லூரீ, தன் மகளிடம்.
"பழக்கமாகிவிடும். மன்னிக்க" என்கிறாள். தலையை உதறிக்கொள்கிறார் லூரீ.

பிராணிகள் நலக் கூட்டமைப்பு ஒன்றை நடத்தும் பெவ் ஷா என்ற தன் கறுப்பினத் தோழியிடம் லூரீயை அழைத்துச்செல்கிறாள் லூசி. அவர்கள் செய்யும் மிருகசேவையைப் பற்றிச் சிலாகித்தவாறே வரும் லூசியிடம், "பாராட்டத்தக்கதுதான். நீ செய்வது, அவள் செய்வது எல்லாம்; ஆனால், மிருகசேவகர்களும் ஒருவகையில் கிறிஸ்துவர்கள் போலத்தானென்று நினைக்கிறேன். அனைவரும் களிப்புடனும் வெள்ளை மனதுடன் இருப்பதைப்பார்த்துச் சற்றுக்காலம் கழித்து சில வெறியாட்டங்களும் கற்பழிப்புக்களும் செய்யலாமென்று அரிப்பு எடுக்கும். அல்லது ஒரு பூனையை எத்தலாம்" என்று குரைக்கிறார்.

அப்போது, நான் வாழ்க்கையில் இன்னும் முக்கியமான விஷயங்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கவேண்டுமென்று நினைக்கிறாய் நீ. ஓவியங்கள் வரைவது, ரஷ்யமொழி கற்றுக்கொடுப்பது - இந்த மாதிரி. மேம்பட்ட வாழ்க்கை அல்ல அது, ஏனெனில் மேம்பட்ட வாழ்க்கை என்று ஒன்று இல்லை. இங்கிருக்கும் வாழ்க்கை இதுதான். பிராணிகளுடனான வாழ்க்கை. பெவ் இதைத்தான் நிறுவமுயல்கிறாள், அதைத்தான் நானும் தொடரவிரும்புகிறேன். நமது சில மனித சௌகரியங்களை மிருகங்களுடன் பகிர்ந்துகொள்வதை. மற்றொரு பிறப்பின் ஒரு நாயாகவோ பன்றியாகவோ நமக்கடியில் பிறக்க விரும்பவில்லை - என்கிறாள் லூசி. மௌனமாக வீட்டுக்குத் திரும்புகிறார்கள். பிறகு லூரி, பெவ்வுக்கு உதவிப் பணி புரிய ஒத்துக்கொள்கிறார்.

பெவ் லூரீயிடம் கேட்கிறாள், மிருகங்கள் உங்களுக்குப் பிடிக்குமா திரு லூரீ?
"எனக்கு மிருகங்கள் பிடிக்குமாவா? நான் அவற்றை உண்கிறேன், அதனால் அவற்றை நான் விரும்பியாகவேண்டும், சில பாகங்களையாவது" என்கிறார்.

* * *

லூரீ, லூசி இருவரைநோக்கியும் இரண்டு கறுப்பின ஆண்களும் ஒரு சிறுவனும் வருகிறார்கள். அவர்களை லூசியும் அதற்குமுன் பார்த்ததில்லை. "பெட்ரஸ்" என்று தன் உதவியாளனை அழைக்கிறாள் லூசி. அவன் இல்லை. காட்டுக்குள் குடியிருப்பவர்களென்றும், ஒரு விபத்து நடந்துவிட்டதென்றும் கூறி, தொலைபேசி செய்துகொள்ளவேண்டுமென்று உதவி கேட்கின்றனர். லூரி வெளியே நிற்க, லூசி அவர்களை வீட்டுக்குள் அழைக்கிறாள். இருவரும் புகுந்துகொள்ள, கதவு சாத்தப்படுகிறது. "பெட்ரஸ்" என்று உரக்க அழைத்தவாறு லூரீ, வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுகிறார். பின்னங்கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைய, உச்சந்தலையில் அடித்து வீழ்த்தப்பட்டு பாத்ரூமுக்குள் அடைக்கப்படுகிறார். அவரது கார் சாவிகள் பிடுங்கப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அத்தனை நாய்களும் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. பாத்ரூம் கதவு திறக்கப்பட, வெளியே வரும் லூரீ, தரையில் சிந்தியிருக்கும் திரவத்தில் வழுக்கி விழுந்து தலைமுதல் கால்வரை நனைகிறார். தீக்குச்சி கொளுத்தப்பட்டு எறியப்பட்டு, பாத்ரூமுக்குள் மறுபடி உதைத்துப் பூட்டப்படுகிறார். தலையின் பின்புறம் பற்றி எரியத்தொடங்கி முடி பொசுங்கும் வாசம் மூக்கிலேறுகிறது. கழிப்பறைத் தொட்டிமுன் தொங்கி நின்றுகொண்டு தண்ணீரை வாரி வாரி ஊற்றி பொசுங்கும் தலையின் தீயை அணைக்கிறார். தலையின் மேல்பக்கம் முழுவதும் எரிந்துபோய் மெதுமெதுப்பாக இருக்கிறது.

"லூசி, இருக்கிறாயா அங்கே" என்று கூவுகிறார். இருவருக்கிடையிலும் நசுங்கித் திமிறும் லூசியின் பிம்பம் அவர்முன் கடந்துபோகிறது. நெளித்துக்கொண்டு அந்தப் பிம்பத்தைத் துடைத்தெறிய முயல்கிறார். லூசி வெளியே இருக்கிறாள். வீடு அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தொலைபேசி உட்பட. மிச்சமிருக்கும் காரின் டயர்கள் துளைத்தெறியப்பட்டிருக்கின்றன. அருகிலிருக்கும் ஜெர்மானிய வயோதிகன் எட்டிங்கர் வருகிறான் உதவிக்கு. "இதனால்தான் எனது பெரட்டா இல்லாமல் எங்கும் போவதில்லை" என்று துப்பாக்கியைத் தொட்டுக்காட்டுகிறான் எட்டிங்கர். லூசி, இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லக் கேட்டுக்கொள்கிறாள். போகும் வழியில், "போலீஸிடம், உனக்கு நேர்ந்ததை நீ சொல், எனக்கு நேர்ந்ததை நான் சொல்லிக்கொள்கிறேன்" என்கிறாள். போலீஸிடம் திருட்டு குறித்துச் சொல்லிவிட்டு, மறுபடியும் பண்ணைக்கே போகலாம் என்கிறாள். வீட்டிற்கு வந்ததும் லூரீயும் லூசியும் பேசிக்கொள்கிறார்கள். லூசி சொல்கிறாள்: "நான் ஏன் ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டை போலீஸிடம் வைக்கவில்லை என்று தெரிந்துகொள்ள உனக்கு இஷ்டம். என்னைப் பொறுத்தவரையில், எனக்கு நிகழ்ந்தது ஒரு மிகத் தனிப்பட்ட விஷயம். வேறொரு காலத்தில், வேறொரு இடத்தில் இது பொது விஷயமாக இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில், இந்த நேரத்தில், அப்படி இல்லை. அது என்னுடைய விஷயம் மட்டுமே"
"இந்த இடம் எனில்?"
"இந்த இடம் எனில் தென்னாப்பிரிக்கா"
மேலும் சிறிது நேரம் விவாதித்தபின்பு லூரீ, "அப்படியானால் என்ன? ஏதாவது தனிப்பட்ட பிராயச்சித்தமா? தற்காலத்தில் வேதனைக்குட்படுத்திக்கொள்வதன்மூலம் கடந்தகாலத்தின் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யலாமெனப் பார்க்கிறாயா?"
"இல்லை. என்னைத் தப்பாகவே புரிந்துகொள்கிறாய். குற்றவுணர்ச்சியும் பிராயச்சித்தமும் குணரூபமானவை. குணரூபங்கள்வழி நான் நடப்பதில்லை. அதை நீ உணரமுயலும்வரை, என்னால் உனக்கு விளக்கமுடியாது" என்கிறாள் லூசி.

* * *

பண்ணை வீட்டைவிட்டு வெளியேறுமாறு லூசியைக் கேட்டுக்கொள்கிறார் லூரீ. ஒப்புக்கொள்ளமாட்டேனென்கிறாள். கற்பழிக்கப்பட்டபோது அவர்களிடம் வெறுப்பை மட்டுமே உணர்ந்தேன் என்கிறாள் லூசி, பின்னொரு தருணத்தில்: "வெறுப்பு... டேவிட், ஆண்களையும் உடலுறவையும் யோசிக்கும்போது எதுவும் என்னை ஆச்சரியப்படுத்துவதில்லை. நீ ஒரு ஆண், உனக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஏதோ வேற்றுமனுஷியுடன் உடலுறவு கொள்ளும்போது - அவளை மடக்கும்போது, உனக்கடியில் வீழ்த்தும்போது, உன் பாரமனைத்தையும் அவள்மேல் கிடத்தும்போது - அதுவும் ஓரளவு கொலை மாதிரியே இல்லை? ஒரு கத்தியைச் சொருகுதல்; பின்பு உருவியெடுத்தல், ரத்தக் குளத்தில் உடலை மட்டும் விட்டுவிட்டு - கொலைபோலத் தோன்றுவதில்லை அது? கொலைசெய்து தப்பிப்பதுபோல் தோன்றுவதில்லை?"

தன்னைத்தானே குத்தி ரணமாக்கிக்கொள்வதென்று லூரீக்குத் தோன்றுவதை லூசி அதற்குமேல் விளக்கவோ, நியாயப்படுத்தவோ முயற்சிப்பதில்லை. தொடர்ந்து பெவ் ஷாவின் மிருகசேவைச்சாலைக்குச் சென்று, வேதனையில் வாடும் நாய்களை கருணைக்கொலை செய்ய உதவுகிறார் லூரீ. கட்டையாக, குட்டையாக, கறுப்பாக இருக்கும் அவளுடனும் உறவுகொள்கிறார். சம்பவங்கள் கல்லின்மேல் நீர்த்துளிகள்போல் உருண்டு ஓடுகின்றன. பத்தொன்பதாம் அத்தியாயத்தில், மெலனீயின் தகப்பனாரை மறுபடித் தேடிச்செல்கிறார் லூரீ. இந்த அத்தியாயத்தை விவரிப்பது அதன் இறுக்கத்தைக் குலைத்துவிடுமென்பதால் அப்படியே விடுகிறேன். தன் மகள் கற்பழிக்கப்பட்டபின், தான் 'சீரழித்த' பெண்ணின் தகப்பனிடம் போவது, இறுதியில் 'மன்னிப்பு' என்னும் வார்த்தையை உபயோகப்படுத்துவது என்று இருக்கும் இந்த அத்தியாயம், பெரும்பாலும் பாவமன்னிப்பு என்ற ரீதியில் இல்லாமல், பாவமன்னிப்பை இன்னும் இழிவுபடுத்திச் சாக்கடையில் தள்ளுவது போலவே இருக்கிறது. சாக்கடைக்குள் விழுந்தபின் மேலும் சாக்கடைக்கழிசல்கள் கொட்டப்படுவதுபோல, மெலனீயின் தந்தை "கடவுள் என்ற பதத்தை உபயோகிக்கட்டுமா" எனக் கேட்டு ஒரு பிரசங்கம் நிகழ்த்துகிறான்/ர் (He என்பதை அவன் என்று மொழிபெயர்ப்பதா அவர் என்று மொழிபெயர்ப்பதா என்று குழப்பம். அவன் அவர் என்பதிலுள்ள வெளிப்படை Heயில் இல்லாததாலேயே இம்மாதிரி எழுத்துக்களிலும், பழைய இருத்தலியல் எழுத்துக்களிலும் ஆங்கிலத்தில்/ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போது உணரமுடியும் உள்ளார்ந்த வெறுமையைத் தமிழுக்குக் கடத்தமுடியாமற்போகிறது. மரியாதையற்ற ஒரு ஜனரஞ்சகப் பதம் கண்டுபிடிக்கப்பட்டுப் புழக்கத்தில் வரும்வரை இதுமாதிரியான எழுத்துக்களை மொழிபெயர்க்கும்போது அவன்/அவரிலேயே தடுக்கி விழுந்து பாதிப் பற்களைப் பெயர்த்துக்கொள்ளவேண்டியதிருக்குமென்று நினைக்கிறேன். இந்தப் பதிவில் லூரீயை மற்றும் "அவர்" என்பது வேண்டுமென்றே செய்யப்பட்டது. அதிலும் ஒரு உள்ளர்த்தத்தைப் பார்க்கமுடியும்படி ;-) மெலனீயின் தகப்பன், 'அவன்' ஆகவே நின்றுபோவது, புத்தகத்தின் உரைநடையுடன் பார்க்கும்போது சரியாகவே இருக்கும், ஆனால் அதில் political correctness இருக்கிறதா, என்றால் கிடையாது).

* * *

லூசி கர்ப்பமடைகிறாள். அந்தக் கர்ப்பத்தைத் தொடர்ந்து சுமக்கப்போகிறேன் என்கிறாள். அவளைப்பொறுத்தவரையில், நிகழ்ந்த கற்பழிப்பு, கிட்டத்தட்ட வட்டி வசூலித்த மாதிரி. "I am marked" என்கிறாள். எனக்காக அவர்கள் மறுபடி வருவார்கள் என்கிறாள். வராவிட்டாலும், கற்பழித்த மூவரில் ஒரு சிறுவன், லூசியின் உதவியாளன் பெட்ரஸ் வீட்டிலேயே வந்து தங்குகிறான். பெட்ரஸ், அவனைச் சொந்தக்காரன் என்கிறான். இறுதியில், பெட்ரஸ் ஒரு தீர்மானத்தைச் சொல்கிறான். கறுப்பினப் பெட்ரஸ், லூசியைத் தனது மூன்றாவது மனைவியாக ஏற்றுக்கொள்வதான அபிப்ராயத்தை முன்வைக்கிறான். அவனுக்குத் தனது பண்ணை மேல்தான் கண் எனும் லூசி, அதற்கு ஒத்துக்கொள்கிறாள். அந்தத் 'திருமணம்' அவளுக்கு ஒரு அரண் போல இருக்கும், என்பதை இறுதியில், ANCயினால் 'இனவெறி வாதம்' என்று குற்றம்சாட்டப்பட்ட பின்வரும் உரையாடல்களில் (பக்கம் 205) பேசிக்கொள்கிறார்கள். லூசியைப்பற்றிக் கூறுகையில்
"எவ்வளவு அவமானகரமானது" என்கிறார் லூரீ "எவ்வளவு உயர்ந்த நம்பிக்கைகள், இப்படித்தான் முடியவேண்டுமா"
"ஒத்துக்கொள்கிறேன், அவமானகரமானதுதான். ஆனால், முதலிலிருந்து தொடங்குவதில் ஒரு நல்லதும் இருக்கக்கூடும். ஒருவேளை அதைத்தான் நாம் ஒத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். முதலிலிருந்து தொடங்குவது. ஒன்றுமில்லாததிலிருந்து. ஒன்றுமேயில்லாததிலிருந்து. ஆயுதங்களின்றி, சொத்தின்றி, உரிமைகளின்றி, மரியாதையின்றி"
"ஒரு நாயைப் போல"
"ஆம், ஒரு நாயைப் போல"

* * *

ஒரு வெள்ளைக்காரனும் அவனது bleeding heart மகளும் செயற்கையாக முன்வைக்கும் 'தியாகக் கீற்றுக்களுக்குள்'ளும், குட்ஸீக்குள்ளும் ஒளிந்திருப்பது "ஆப்பிரிக்கர்கள் வன்முறையால் வெள்ளையர்களை நசுக்குகிறார்கள்" என்ற அடிப்படைவாத வெள்ளை இனவெறி என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு 1999ல் குட்ஸீக்கு வழங்கப்பட்டபோதுகூட தாபோ பெகி தலைமையிலான ANC அரசு அதை உற்சாகமாக வரவேற்கவில்லை என்றும், "நோபல் பரிசு, வெள்ளையர்களின் கலையுணரும் தன்மையை அளவுகோலாகக் கொண்டு அளிக்கப்படுவதால் அதற்குத் தரப்படும் மரியாதை அர்த்தமற்றது" என்ற ரீதியிலும் விமர்சனங்கள் இருந்தன. நோபல் பரிசு கிடைத்த காலகட்டத்தில் குட்ஸீ ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துவிட்டார். பேட்டிகளே பெரும்பாலும் அளித்திராத, வெகு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த குட்ஸீயும் பேராசிரியராக வேலைபார்த்தவர் என்பதால், லூரீயே குட்ஸீதான் எனப்படும் விமர்சனங்களும் தவிர்க்கமுடியாமல் இருக்கின்றன. சமீபத்தில் இதைத் திரும்பப் படித்ததால் கோர்வையாக எழுதமுடிந்தது, Waiting for the barbarians, Life and times of Michael K போன்றவற்றையும் திரும்பப் படித்து இதனுடனான கோர்வையாக எழுதினால் நல்லபடியாக இருக்குமென்று நினைப்பதுண்டு - தினமும் ஒருமணிநேரம் படிப்பது நன்றாகவே இருந்தாலும், அங்கங்கே குறித்து வைத்ததை வைத்து இந்தமாதிரி கோனார் நோட்ஸ் பதிப்பிப்பதற்குத் தட்டச்சுவதுதான் மகா கடியாக இருக்கிறது. நான் வாசித்த சில படைப்புக்களையும் கட்டுரைகளையும் வைத்து குட்ஸீயிடம் தென்படுவது conservatism என்பதைவிட, ஒரு placid narration என்ற ரீதியில்தான் இருக்கிறது. இந்தமாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத இறுக்கமான எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம், இந்த வெற்று எளிமை எத்தனை கட்டங்களில் நம்மை முட்டாளாக்குகிறதோ என்ற ஐயம் ஏற்படுத்தும் ஈகோ அரிப்பு தவிர்க்க இயலாதது. என் பார்வை வேறாக இருக்கலாம். சிலசமயம் "பாத்திர வார்ப்பு சரியாகத் திரண்டு வரவில்லை" என்ற ரீதியிலான குட்ஸீயின் சில ஈய விமர்சனங்களையும் படித்து வந்திருப்பதால், ஒரு அபிப்ராயம் உருவாக்குவதைவிட, புத்தகத்தைச் சுருக்கமாக அறிமுகமாவது செய்யலாம் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு. முன்பு வெங்கட்டின் பதிவு ஒன்றின் பின்னூட்டத்திலும் இதைக் குறிப்பிட்டிருந்தேன். ருஷ்டீயின் Moor's Last Sigh புத்தகத்தைப்பற்றிய கட்டுரையொன்றில் குட்ஸீ, "பால் தாக்கரே போன்ற கோமாளிகளைத் தவளை அரசன் என்று, Raman Fielding" என்று நக்கலடித்திருப்பதும், பம்பாய் அரசியல் நிலவரம் பற்றியும் படிக்கும் மேற்கத்திய வாசகன் அதில் எவ்வளவு தூரம் ஆழமுடியும் என்று தெரியவில்லை" என்றிருப்பார். வெளிநாட்டுப் படைப்புக்கள் பெரும்பாலானவற்றுக்கு அதே நிலைமைதான் எனினும், ருஷ்டீ அதில் Madhuri Dickshit என்று மாதுரி தீட்சித்தை நக்கலடித்திருப்பார் - வெளியாட்களுக்கு மாதிரி தீட்சித் என்ன முக்கியம் எனினும், அனைத்தும் கலாச்சாரமே. ருஷ்டீயிடம் மிகத் திறமையாக வெளிப்படும் palimpsesting போன்ற பல்வேறு அடுக்குக் கதைகள் மீது குட்ஸீக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருப்பதாக நான் படித்தவரையில் தெரியவில்லை. "நல்ல அபிப்ராயம்" என்பது எனது சோம்பலில்/தூக்கத்தில் வரும் வார்த்தைகள் - வேறு உபயோகித்துக்கொள்ளவும். ஒன்றிரண்டு பேராவது இப் புத்தகத்தைப் படித்துப்பார்த்தால் ஏதோ எழுதியதற்குப் பிரயோஜனமிருக்கிறதென்று நினைத்துக்கொள்ளலாம். முடிந்தமட்டும் சொந்த அபிப்ராயங்களைத் தவிர்க்க முயன்றிருக்கிறேன். அதுதாண்டியும் ஏதாவது துருத்திக்கொண்டிருந்தால் கண்டுகொள்ளாதீர்கள், Goodnight!!

Disgrace - J.M.Coetzee, Penguin Books 1999, 220 பக்கங்கள்.
படங்கள் நன்றி: நோபல், Topwritercorner

Friday, April 01, 2005

ஒரு கதை, ஒரு யோசனை...

திண்ணையில் முதல் பரிசு பெற்ற அறிவியல் புனைகதை: சேவியரின் ஏலி ஏலி லாமா சபக்தானி. காலப் பயணம் என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதைக் கிறிஸ்துவின் கடைசி நாளுடன் இணைத்து எழுதப்பட்ட கதை. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது - வாய்ப்பிருப்பின் கட்டாயம் படித்துப் பார்க்கவும். கதையை இன்னும் எத்தனைபேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாததால், இங்கே முழுதாக விவரிப்பதைத் தவிர்க்கிறேன்.

சற்று நாள் முன்பு, ஒரு பதிவில் பார்த்த திருக்குறளின் 134வது அதிகாரம் என்ற மின்னஞ்சல் நகைச்சுவையைப் பார்த்ததும், ஏன் இதைக்கூட ஒரு சீரியஸான கதையாக யாராவது எழுதினால் நன்றாயிருக்குமே என்றுதான் அப்போது தோன்றியது. கற்பனையாக ஒரு அதிகாரம், பத்து குறள்கள், அந்தப் பத்துக் குறள்களால் இதுவரையிலான திருக்குறள் மீதான அனைத்து விமர்சனங்களும் தலைகீழாகப் புரட்டிப் போடப்படுகின்றன/மாறுபடுகின்றன என்ற ரீதியில். தோன்றினால் யாராவது எழுதுங்கள்... சுவாரஸ்யமாக இருக்கும்!!

Monday, March 28, 2005

சுனாமி அபாயம்

இந்தோனேசியாவில் முந்தைய சுனாமி உருவான இடத்திலேயே மற்றுமொரு நிலநடுக்கம், 8.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டிருப்பதாகவும், மற்றுமொரு சுனாமி உருவாகும் அபாயமிருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
ஏபிசி செய்திகள்
யாஹூ
பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம்
சி என் என்

இலங்கையில் அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டு கடலோர மக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்களென்று படித்தேன் - உறுதியாகத் தெரியவில்லை

Sunday, March 27, 2005

பிறழ்ந்தகுறிப்புக்கள்

பிறழ்ந்தகுறிப்புக்கள்
-மாண்ட்ரீஸர்

"கோரைமுடி உனக்குப் பிடிக்குமா?" என்றேன். ஜூன்'கோ, கோக்கை உறிஞ்சியவாறு சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டு "ம்; சற்றுநாள் நானும் சிவப்புச்சாயம் அடித்திருந்தேன் முடிக்கு" என்றாள். ஆவணப்படம் திரையிட இன்னும் இருபது நிமிடங்கள் மிச்சமிருக்க, அறை முழுதும் வாசனையின்மை நிரம்பியிருந்தது. எனக்கும் ஜூன்'கோவிற்கும் இடையில் ஏழு நாற்காலி தூரம் என்பதால் நான் சத்தமாகவே பேசவேண்டியிருந்தது. அவளும் சத்தமாகப் பேசுவதில்லை என்பதைச் சற்று நேரத்தில் புரிந்துகொண்டு அந்த ஏழு நாற்காலி தூரத்தைக் குறைக்க நானோ அவளோ முயலவில்லை.

"இந்தப் பெண்ணைப்பற்றி உனக்கு முன்னமே தெரியும் என்றா சொன்னாய்?" என்றாள் ஜூன்'கோ. அன்றைய ஆவணப்படம், 1946ல் இந்தியாவில் பிறந்த ஒரு பெண்ணைப்பற்றியது. அப்பெண்ணின் தந்தையின் சில ஆங்கிலேய நண்பர்கள், 1946லிருந்து கிட்டத்தட்ட 1953 வரை அவளைப்பற்றி ஏராளமான குறும்படங்களைத் தயார் செய்திருந்தனர். அவையும், அதன்பிறகு அப்பெண்ணின் தந்தையும் பிற உறவினர்களும், மருத்துவக்குழுவினரும் எடுத்த படங்கள், ஆராய்ச்சிக்குறிப்புகள் அனைத்தும் 1999 வரை வெகு ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டன. 1999லிருந்துதான் அவளது குடும்பத்தினர் அவளைப்பற்றிய தகவல்களை ஊடகங்களுக்குக் குறிப்பிட்ட அளவு கொடுக்கவும், அவற்றை ஊடகங்கள் செய்திகளுக்கு உபயோகித்துக்கொள்ள அனுமதியளிக்கவும் செய்திருந்தனர். அவளை ஆராய கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யுட், ஸூரிக், ஹார்வர்டு, கெட்டிங்கன், கோப்பன்ஹேகன், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக உயிரியல் நிபுணர்கள் பல்வேறு கட்டங்களில் சேர்ந்து உருவாக்கிய, இப்போதுவரை 536 மில்லியன் டாலர்களை விழுங்கியுள்ள, 1966ல் தொடங்கிய ஆராய்ச்சித்திட்டம், 2005ல் நிறைவுபெற வேண்டுமென்பது குறிக்கோள். இதுவரையிலான ஆராய்ச்சித் தகவல்கள் முறைப்படித் தொகுக்கப்பட்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டும் வந்திருந்தாலும், ஆராய்ச்சியின் முடிவென்ற புள்ளியை 2005ல்தான் நிர்ணயிக்க முடியுமென்று மத்தியாஸ் ஹைடல்பெர்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அறிவித்துவிட்டிருந்தது.

"ஆமாம், தெரியும், அவள் பெயர் வெகு நீளமானது. சுருக்கமாக சுபா என்று வைத்துக்கொள்ளலாம். அவளது மகன் எனது கல்லூரித்தோழன்" என்றேன் நான்.

ஊடகங்களில் கேள்விப்பட்டதையும், சித்தார்த்தன் தனது அம்மாவைப்பற்றிக் கூறியதையும்வைத்தே நான் இதையெல்லாம் சொல்கிறேன். தவறுகள் இருப்பின் அவை என்னிடமிருந்தோ சித்தார்த்தனிடமிருந்தோ, ஊடகங்களிலிருந்தோ அல்லது சுபாவிடமிருந்தோகூட கிளைத்திருக்கக்கூடும். இதை நான் முதலிலேயே கூறியிருந்தால் ஒருவேளை இது உங்களுக்கு இன்னும் சுவாரஸ்யமாயிருந்திருக்கும்! 1946ல் சுபா பிறந்தபோது அவளது தந்தை ஒரு ஐசிஎஸ் அதிகாரி. பிரசவ அறைக்கு வெளியே காத்திருந்த மனோரஞ்சனையும் உறவினரையும் நோக்கி வந்த டாக்டரின் மேலங்கியின்மேலும் கையுறைகளின் மேலும் திட்டுத் திட்டாக ரத்தம். அனைவரின் முகத்திலும் பீதி சரசரவென்று ஏறியது. டாக்டர் மனோரஞ்சனை மட்டும் அறைக்குள் அழைத்துப் போனார்.

களைத்த போர்க்களம் போலிருந்தது அந்த அறை. மூன்று செவிலிகள் மயங்கிக் கிடந்தனர். மனோரஞ்சனின் மனைவி அறுவைசிகிச்சைப் படுக்கையின்மேல் இறந்துகிடந்தாள். அவளைச்சுற்றிலும் தேங்கியிருந்த ரத்தக்குளத்தின் கரைகள் ஏற்கனவே உறையத்தொடங்கியிருக்க, அறுவைசிகிச்சைக் கருவிகள் அறைமுழுதும் சிதறிக்கிடந்தன. டாக்டர் மனோரஞ்சனின் தோளைப் பிடித்துக்கொண்டு தள்ளாடினார். கட்டிலின் வலது மூலைக்கருகில் கட்டிலின் விளிம்பைப் பிடித்தவாறு ஒரு கிழவி தரையில் அமர்ந்திருந்தாள். அவளின் நீண்டு சொதசொதத்த தலைமுடியும் அவள்மேல் பரவியிருந்த ரத்தமும் அவளது நிர்வாணத்தின் ஆழமும் மனோரஞ்சனை மூச்சடைக்கச் செய்தன.

"அதுதான் இப்போது பிறந்த உங்கள் மகள், மனோரஞ்சன்" என்றார் டாக்டர், மூலையில் அமர்ந்திருந்த கிழவியைக் காட்டி. அந்தக் கணம் ஸ்தம்பித்து நின்றது.

* * *

மனோரஞ்சன் குடும்பத்தின் கதவுகள், நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும்தவிர பிறருக்கு இறுக மூடப்பட்டன. அவரது நெருங்கிய நண்பர் சார்ல்ஸ் டட்டன் மட்டும் அவரது விருப்பப்படி மனோரஞ்சனின் மகளை ஆவணப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். வெளியே கசிந்த தகவல்கள், அவளை இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கவேண்டுமென்று அப்போதைய அரசாங்கம் மனோரஞ்சனை மிரட்டுமளவு போய்ச்சேர்ந்தது. சுபா என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண்ணைப்பற்றிய விஷயங்களை அவர்கள் தொகுக்க வெகுகாலமாகவில்லை. பிறக்கும்போது அவளுக்கு அறுபது வயதென்று தீர்மானித்திருந்தார்கள் நிபுணர்கள். நாளாக நாளாக அவளது வயது குறைந்துகொண்டிருந்தது. பிறந்தபோது அவள் வயது 60, மனோரஞ்சனின் வயது 28 என்றிருக்கையில், 1962ல் இருவருக்கும் வயது 44 ஆக இருந்தது. அதற்குப்பின் அவளது வயது இன்னும் குறையத்தொடங்கியபோதுதான் அந்தப் பெரும் கேள்வி எழுந்தது. கிழவியாக இருந்து வயது குறைந்து இளம்பெண்ணாக மாறிப் பின்னும் வயது குறைந்து சிறுமியாகிப் பின்னும் வயது குறைந்து குழந்தையாகிப் பின்னும் வயது குறைந்து.....?

அதற்கு மேலும், முந்தைய நாள் நடந்ததெல்லாம் மறுநாள் அவளுக்கு நினைவிருப்பதில்லை என்பதைப் பின்புதான் கண்டுபிடித்தார். ஆனால்...என்று யோசிக்கையில் அவருக்குக் குழப்பம்தான் எழும். இவளின் இப்போதைய வாழ்வை இன்று என்பதா, நேற்று என்பதா, நாளை என்பதா. பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கும் அவளது வசீகர வாழ்க்கையின் விஸ்தீரணம். நியதிகளின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து முறித்துக்கொண்டு வந்துவிட்ட இவளை உலகத்தின் எந்தக் கணத்தில் வைப்பது. எதிரெதிர் பாதைகளில் அவர்கள் பிரயாணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு சாதாரண வாக்கியம். அவளது இன்று என்பது அவருக்கு இன்றா நேற்றா நாளையா என்று அவருக்குத் தெரியவில்லை.

முந்தைய நாள் நடந்ததெல்லாம் அவளுக்கு மறுநாள் நினைவிருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் தனித்தனியாக வாழ்ந்தாள். ஒரு பெண்... அதை எப்படிச் சொல்வது. அவள் மூளை இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அன்றைக்கு மட்டும். அடுத்த நாள் அந்த நினைவுகளை அழித்துவிட்டு, ஆனால் பிழையின்றி இயங்கத்தொடங்கியது. இது மேஜை, இது நாற்காலி, இது ஆண், இது பெண், இது அப்பா என்று நினைவு வைத்துக்கொள்ள முடிந்ததே தவிர, அப்பா நேற்று நம்முடன் பேசிக்கொண்டிருந்தார், நாய்க்குட்டி காலை நக்கியது போன்ற விஷயங்கள் அவளுக்கு நினைவில் இல்லை. இதன் சூட்சுமங்களை விஞ்ஞானிகளாலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு நாள் நேராகக் கழிகிறது அவளுக்கு. காலையில் விடிகிறது, மதியம் வெயிலடிக்கிறது இரவில் குளிரடிக்கிறது... இத்தனையையும் அனைவரையும்போலத்தான் உணர்ந்தாள் அவள். இருந்தாலும், அவளின் வயது குறைந்துகொண்டிருக்கிறதென்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டபோது இந்தக் கேள்வி எழுந்தது. ஒரு நாள் உலகத்தில் கழிகிறது. அதன்படி அவளும் ஒரு நாள் வாழ்கிறாள். ஆனால் அவள் வினோதக் கணக்குப்படி ஆயுளில் ஒருநாள் பின்னோக்கிச் சென்று, குறைகிறது. இது எதில் சேர்த்தி என்பதை வல்லுநர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை. உறவுமுறைகளை அவளுக்குப் பரிச்சயப்படுத்த அவர்கள் பட்ட கஷ்டம் சற்றில்லை. அப்பா என்பவர் தன்னைப் பெற உதவிசெய்பவர், அம்மா தன்னைப் பெற்றெடுப்பவள், மாமா, அத்தை இன்னபிறவர்களெல்லாம் சொந்தக்காரர்கள் என்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவர்களைக்குறித்த சம்பவங்கள் மட்டும் அவளுக்கு நினைவிருப்பதில்லை. வயது குறையக் குறைய, ஒரு கட்டத்துக்குப்பின் இந்த உறவுமுறைகள் அனைத்தும்கூட மறந்துபோயிருக்கும் என்பதும் மனோரஞ்சனுக்குத் தெரிந்தது. அப்போது நிகழக்கூடியதெல்லாம் நமக்குப் புரியாத, குழந்தைகளின் அடையாளங்கண்டுபிடிப்பு யுக்திகள்தான். இருந்தாலும், முதல்நாள் காய்ச்சல் குணமாகி மறுநாள் காய்ச்சல் தொடங்குவது போன்றெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

அவளைத் தெய்வம் என்றனர், பிசாசு என்றனர், உலக அழிவின் குறியீடு என்றனர், மனிதகுலத்தின் அடுத்த சாத்தியம் என்றனர். சொர்க்கங்களையும் நரகங்களையும் எதிர்த்திசையில் சமைத்தனர். உலகம் முழுவதும் இப்படிப்பட்ட பிற குழந்தைகளின் பிறப்பு எதிர்நோக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவு இப்படிப் பிறந்த குழந்தைகளையெல்லாம் உடனுக்குடன் கொன்றுவருவதாகவும், அதுகுறித்த தகவல்கள் ஆழப் புதைக்கப்பட்டுவிடுவதாகவும் தகவல்களோ புரளிகளோ வந்தவண்ணமிருந்தன. போலிக் 'குழந்தைகள்' உலகம் முழுவதும் பிறந்தன. நான்கைந்து வருடங்களில் அவர்கள் வயது குறையாததால், புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். மனோரஞ்சனின் மனைவியின் உடல் எரிக்கப்பட்டுவிட்டதால், அதன்மேல் ஆராய்ச்சி நடைபெறவில்லை. அதுவே மிகப்பெரிய இழப்பு என்றனர் ஆராய்ச்சியாளர்கள். நிஜத்தில், சுபாவுக்குப் பிறகு அப்படி யாரும் பிறந்ததாகத் தெரியவில்லை, பிறந்திருந்தாலும் தகவல்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

* * *

"அப்படியானால் எப்படி அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்?" என்றாள் ஜூன்'கோ.

"டொமினிக் டட்டனுக்கும் சுபாவுக்கும் பிறந்தவன்தான் என் கல்லூரித் தோழன் சித்தார்த்தன். சார்ல்ஸ் டட்டனின் குடும்பம் இந்தியாவிலேயே தங்கிவிட்டது. அவன் பிறந்தபோது சுபாவுக்கு 24 வயது. அதாவது, 1982ம் வருடத்தில். சித்தார்த்தனை அவளிடமிருந்து பிரித்தே வளர்த்தார்கள். அவனுக்குப் ஐந்து வயதாகும்போதுதான் அவளிடம் கொண்டுசென்றார்கள். அப்போது அவளுக்குப் பத்தொன்பது வயது. இப்போது அவளுக்கு ஒரு வயது. இப்போது அவள் முழு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், அவனும் அவளுடனேயே இருக்கிறான். ஒரு வயது என்பதைவிட, துல்லியமாகச் சொல்லப்போனால், ஒன்பதரை மாதங்கள் அவள் வயது. குறைந்துகொண்டேயிருக்கிறது. அவளது வயது 0 நாள் ஆகும்போது என்ன ஆகுமென்பதுதான் இப்போதைய கேள்வி" என்றேன் நான்.

"அதை நானும் யோசித்துப் பார்த்திருக்கிறேன். இப்போது அவளைச் செயற்கைக் கருப்பைக்குள் வைத்திருக்கிறார்கள் இல்லையா"

"ஆமாம். அதுதான் ஏகப்பட்ட பணத்தை விழுங்கியிருக்கிறது. மனோரஞ்சனையும் சித்தார்த்தனையும் நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவர்களது மொத்த வாழ்க்கையும் கேள்விகளுடனும் ஆய்வுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனுமே கழிந்துவிட்டிருக்கிறது." என்றேன், சிறிது கழிவிரக்கத்துடன். அவள் மௌனமாக இருந்தாள். அரங்கம் இப்போது கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. எங்கள் பல்கலைக்கழகத் திரைப்படத்துறை மாணவர் முழுவொன்றின் ஆவணப்படம் இது. சுபாவின் நான்கு வயதிலிருந்து இரண்டு வயது வரை எடுக்கப்பட்ட காட்சித்தொகுப்புக்கள், ஹைடல்பர்கர், மனோரஞ்சன், சித்தார்த்தன், டொமினிக் டட்டன் போன்றவர்களின் பேட்டிகள், பிற அறிவியல் வல்லுநர்களின் கருத்துக்கள், மதத்தலைவர்களின் கருத்துக்கள் என்று ஒரு 'தரமான' டாக்குமெண்ட்டரியின் அனைத்து அம்சங்களுடனும் இருந்தது அது. முன்பே இரண்டுமுறை இதைப் பார்த்திருக்கிறேன் - டோக்கியோவில் ஒருமுறையும் ஔரங்காபாதில் ஒருமுறையும். குறுகிய காலத்தில் மிக அதிக முறை திரையிடப்பட்ட ஆவணப்படம் இதுவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். இல்லை, இது தான். நேற்று வளாகம் முழுதும் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்புகளும் அப்படித்தான் சொன்னன. ஒரு வருடத்தில் 59 முறை என்றால்...கிட்டத்தட்ட வாரத்துக்கொரு திரையிடல். தெரியவில்லை, ஒருவேளை சுபா பற்றிய திரைவடிவம் பெறாத ஆவணப்படங்களில் மிகவும் வெற்றிகரமானது இதுதானென்று நினைக்கிறேன். ஹைடல்பர்கர் குழுவினர் 2006ல் வெளியிடப்போகும் 60 மணி நேர டிவிடி தொகுப்புதான் சுபா குறித்த படங்களிலேயே மிகவும் வெற்றிகரமானதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

படம் தொடங்கியது. கெண்டால் முன்வரிசைக்குச் சென்று ஒலிபெருக்கியைப் பிடித்தவாறு சுபாவைப் பற்றியும், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகளைப்பற்றியும், சமூக, இறையியல் தளங்களில் சுபாவின் நிகழ்வு எழுப்பியுள்ள கேள்விகளைப்பற்றியும் ஒரு சுருக்கமான அறிமுகம் கொடுத்தான். கணிசமானவர்கள், கையிலிருந்த தகவற்பிரசுரத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். விளக்குகள் அணைந்ததும் பேச்சுக்குரல்கள் உடனடியாக அமிழ்ந்துபோயின. படம் ஓடத்தொடங்கியது.

சுபாவின் வெவ்வேறு வயதுப் புகைப்படங்கள், பின்னணி வர்ணனைகள். மூன்றாவது முறையாக இதைப் பார்ப்பதால் அப்போதே ஒருவிதமான அசிரத்தை வந்துவிட்டிருந்தது. ஆனாலும், சுற்றுப்புறங்களில் இந்தப் படம் எங்காவது திரையிடப்பட்டால் மறுபடிப் போய்ப் பார்ப்பேன் என்பதில் சந்தேகமில்லை. மனோரஞ்சனின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்கையில் ஒருவிதத்தில் எரிச்சலடைந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். தான் தொலைத்த பரிமாணங்களை வேறு பரிமாணங்களைக்கொண்டு நிரப்பக் கடந்த சில வருடங்களாக மனோரஞ்சன் முயன்றுகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது பேட்டிகளில் ஒருவித செயற்கைத்தன்மை வந்துவிட்டிருக்க, அவர் கூறும் சில விஷயங்களும் மிக சிறுபிள்ளைத்தனமாக, அளவுக்கதிகமாய் இழுத்து விரித்துச் சட்டமடிக்கப்பட்டதாக இருப்பதாக உணர்ந்தேன். குறிப்பாக, நான் இதுவரை பார்த்த ஆவணப்படங்களில் இதில்தான் அவரது உளறல் அளவுக்கதிகமாய் இருந்தது. ஒருவேளை அவருக்கு எண்பது வயதுக்கு மேலாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். கேளுங்கள்:

"சிலசமயம் என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ள நானும் சுபாவும் எங்களுடன் கடந்த ஐம்பது அறுபது வருடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வீணோ என்று தோன்றும். எங்கள் இந்தக் குமிழிவாழ்க்கையினால் நாங்கள் பெற்றதைவிட இழந்ததே அதிகம். அவள் இருந்த, புழங்கிய அறைகளுக்குள் போய் அமர்ந்திருக்கும்போதெல்லாம், அவள் தொட்ட பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம், அவளது ஒவ்வொரு நினைவும் மறுபடி என்முன் விரியும்போதும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. என் மகளை மரணத்துக்கு இழப்பது என்ற விஷயம் இதைவிட எவ்வளவோ ஆசுவாசமானதாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது. நானும் அவளும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தேர்ந்தெடுப்பட்ட கருவிகள்தான் என்று புரிந்துகொண்டபின்தான் அறிவியலை நுழைய அனுமதித்தேன். எனக்கு அதன் முடிவுகளில் ஆர்வமில்லை எனினும், மனித மனத்தின் முயற்சிகளுக்குத் தடைபோடுவது என்பது அர்த்தமற்றது என்று உணர்ந்ததாலேயே விஞ்ஞானிகள் வசம் அவளை ஒப்படைக்க நேர்ந்தது." மெலிதாக நடுங்கும் தனது கைகளால் கண்ணாடியைக் கழற்றி விழியோரம் இருந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். நான் நாற்காலியில் நெளிந்தேன். ஜூன்'கோவைப் பார்த்தேன். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள், திரும்பி என்னைப் பார்த்தாள். மறுபடிப் படத்தைப் பார்க்கத் தொடங்கினோம். கண்ணீர் ஒத்திகையாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. பல குறும்படங்களில் வெவ்வேறு வயதுகளில் அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொள்வதைப் பார்த்ததால் இருக்கலாம். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். "எங்கள் வீடே வரவர ஒரு கோட்டை மாதிரி ஆகிப்போய்விட்டது. சிலசமயம் அவளது சில பொருட்களைத் தேடுவேன், கிடைக்காது. அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு சதுரங்கப்பலகை, சில காலணிகள், பட்டாம்பூச்சிவடிவ தலைமுடிக் க்ளிப்புகள் சில, முப்பத்திநான்கு வயதுக்கும் இருபத்திரண்டு வயதுக்குமிடையில் அதிகமுறை அவள் கட்டிய ஒரு மயில்துத்த நிறச் சேலை - அவளே பலமுறை இவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்த சில தந்தச் சீப்புக்கள் இரண்டே மாதத்தில் காணாமற்போயின. இதெல்லாம் பொருட்கள் என்றமட்டில் ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும்கூட, நினைவுகளைப் பொறுத்தவரை விலைமதிப்பற்றவை என்பதால் சொல்கிறேன்..." அவர் குரல் நிதானமாகத் தொடர்ந்துகொண்டேயிருந்தது.

நான் மெதுவாக வெளியே நடந்து வந்தேன். எத்தனை முறை இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது? வெளியே வந்து, அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். திறந்தே கிடந்த கதவு வழியாக ஹைடல்பர்கரின் குரல் மெதுவாகக் கசிந்து வந்துகொண்டிருக்க, மனப்பாடமாயிருந்த அவரது வாக்கியங்களை அவரது குரலுடன் சேர்ந்து சொல்லிக்கொண்டிருந்தேன். "தத்துவார்த்தமான விவாதங்களுக்குப் போக தற்போது எங்களுக்கு நேரமில்லை. 2005 எங்களுக்கு ஒரு முக்கியமான வருடம். சூபாவுக்காகத் தயார்செய்திருக்கும் செயற்கைக் கருப்பையில் முற்சோதனைகள் செய்வதற்கேற்ற மாதிரிகள் இல்லாததால், நேரடியாக அவள் உள்ளே போகவேண்டியிருக்கும். எந்த நாளில் அவளை உள்ளே செலுத்தவேண்டுமென்பதை எங்களால் மிகத் துல்லியமாக நிர்ணயிக்க முடியாவிட்டாலும், அவளது 278ம் நாளில் கருப்பைக்குள் அவளைச் செலுத்தத் தீர்மானித்திருக்கிறோம். அது சரியான நாள் என்று எங்களால் நிச்சயமாகக் கூறமுடியாது எனினும், கணக்கற்ற மாதிரிச்சோதனைகள் (simulations) மூலம் தீர்மானிக்கப்பட்ட நாள் என்பதால், அதன்மேல் எங்களுக்குக் குறிப்பிடத்தகுந்த அளவு நம்பிக்கை உள்ளது...ளுளூழுழூஊஊழிழீஈஈஈஈஈஈ......"

கட்டிடத்துக்கு வெளியே வந்தேன். இப்போது சுபா கருப்பைக்குள் இருப்பதால், குறிக்கப்பட்ட தேதி சரியாகவே இருந்ததெனக் கூறிவிடமுடியும். அதுவே ஹைடல்பர்கர் குழுவினருக்குப் பெரிய வெற்றி எனப்படும் பிற்காலங்களில். நாளாக நாளாக அவள் கருப்பைக்குள் சுருங்கிக்கொண்டே போனால்...எந்தக் கணத்தில் செல் குவியலாக மாறுகிறாளோ, அப்போதிருந்து அவளது பின்வளர்ச்சியைத் தொடர அதே கருப்பைக்குமேல் ராட்சத ஊடுருவி மைக்ரோஸ்கோப்புகள் பொருத்தப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரங்களில் கருப்பையின் குறிப்பிட்ட பாகங்களைப் பார்க்கவும், சினையாக்கப்பட்ட அண்டத்தைப் பின்தொடரவும் பார்வையிடவும், கருப்பைக்கு உள்ளேயும் வெளியேயுமாக கிட்டத்தட்ட தொள்ளாயிரம் நுண்ணிய ஒளிநெளிக் காமெராக்களும் (diffraction cameras) பொருத்தப்பட்டிருந்தன. சினையாக்கப்பட்ட அண்டம் பின்னோக்கிச் செல்லும்போது, அதிலிருந்து சினைமுட்டையும் விந்தணுவும் பிரியும் என்பதுவரை விஞ்ஞானிகளால் யூகிக்க முடிந்தது. அந்தக் கணம்தான் உயிரின் அசலான பிருஹத் சரீர வடிவம் என்றனர் சிலர், புடுக்கு சரீர வடிவம் என்றனர் சிலர். விஞ்ஞான யூகம், கருப்பையின் ஃபாலோப்பியன் குழாயின் எந்த ஸ்தலத்தில் சினைமுட்டையாகவும் விந்தணுவாகவும் சினையாக்கப்பட்ட அண்டம் பிரியும் என்பதுவரை நீண்டுவிட்டிருக்க, அந்த இடத்தைநோக்கி மட்டும் கிட்டத்தட்ட நூற்றைம்பது காமெராக்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து பொருத்தப்பட்டிருந்தன. இவ்வளவு பிரயத்தனங்களிலும் ஏதோவொரு இடத்தில் ஏதோவொரு தவறு நிகழ்ந்திருக்க அளவற்ற வாய்ப்புகள் உள்ளன என்றபோதிலும் எந்தத் தவறும் நிகழ்ந்திராதது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எந்தத் தவறும் நிகழாது என்றே நினைக்கிறேன். வேறு ஏதோ ஒரு உணர்வு குறுகுறுவென்று உணர்த்திக்கொண்டே இருந்தது, ஆனால் என்னவென்று பிடிபடவில்லை. ஆழ்மனத்தில் அறிவியல் தோற்கவேண்டுமென்று எனக்குள் எழுந்த எதிர்ப்புணர்வாக இருக்கலாம் என்றாலும், அறிவியலில் தோல்வி என்று எதுவும் கிடையாது என்பதையும் உணர்ந்திருந்தேன்.

* * *

வேலை மும்முரத்தில் அதைப் பின்பு மறந்துவிட்டேன். இரண்டு வாரங்கள் கழித்து, பக்கத்து நகரத்தில் அதே குறும்படம் திரையிடப்படுகிறதென்ற அறிவிப்பைப் பார்த்தேன். ஒருமணி நேரப் பிரயாணமென்பதால் கிளம்பிவிட்டேன். வழியெல்லாம் Hell's bells பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு போகையில் மனது சிறிதாகப் புலனாய்வு செய்து பார்த்தது. கடந்த மூன்று முறையும் இதே படத்தைப் பார்க்கும்போது எதையோ தவறவிட்டுவிட்டதுபோல் தோன்றியது. அதை இந்த முறை கண்டுபிடித்து விடுவேனென்றும் பட்சி உரத்துக் கூவியது.

பெருத்த ஏமாற்றமடைந்தேன். படம் திரையிடப்படவே இல்லை. கெண்டால் தனது அதே முன்னுரையை இங்கும் கூறி முடித்ததும் படம் திரையில் தொடங்கவில்லை. ஏதோ ப்ரொஜக்டரில் சிக்கல் என்றனர் என்று நினைவு. அவர்கள் கொண்டுவந்திருந்த ஒரு உபரிப் பிரதியை ஓட்டமுயன்றபோதுதான் சிக்கல் தெரிந்தது. திரையில் படம் ஏதும் வரவில்லை. பிற பிரதிகளை ஓட்டிப்பார்த்தபோது, ப்ரொஜக்டரில் இல்லை சிக்கல் என்று தெரியவந்தது. நேரம் ஆக ஆக கூட்டம் கலைந்துபோகத் தொடங்கியது. டையைத் தளர்த்தியவாறு கெண்டால் செல்ஃபோனில் யாருடனோ பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தான். நேரம் சரியில்லை என்று கிளம்பி வந்துவிட்டேன். பின்பு பல மாதங்களுக்கு அதுகுறித்து மறந்துவிட்டேன். சுபாவினது 0 நாளும் கழிந்தது. நான் எதிர்பார்த்ததுபோல, அந்த நாளில் அத்தனை காமெராக்களும் விஞ்ஞானிகளும், தங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைச் சொல்ல இயலாதவர்களாகவே இருந்தனர். சினையாக்கப்பட்ட அண்டம் எங்கே போனதென்று தெரியவில்லை. விந்தணுவும் சினைமுட்டையையும்கூட காமெராக்கள் படம்பிடித்திருக்கவில்லை. நான் களைப்பாக உணர்ந்தேன். சிலசமயம் முடிவுகள் நமக்குத் தெரிந்தும் அதன் வழிமுறையைக் கண்டுபிடிப்பதிலேயே காலத்தைச் செலவழிக்கிறோமென்று தோன்றியது. அந்த விஷயத்தைப் பலநாட்களுக்கு மறந்துவிட்டேன்.

* * *

எங்கெங்கோ சுற்றிவிட்டு அன்று இரவு வெகு தாமதமாக வீட்டுக்குத் திரும்பினேன். உறைகலனிலிருந்து வாட்காவை உருவி ஷாட்கிளாஸில் ஊற்றிக்கொண்டு மின்னஞ்சல்களைத் திறந்து மேய்ந்தேன். புதிதாக வந்திருந்த பத்துப்பதினைந்து மின்னஞ்சல்களுக்கு நடுவில் ஜூன்'கோ கோமியாமா என்று ஒரு பெயர். மூளையைக் கசக்கிக்கொண்டு திறந்தால்... ஓ!

"ஹலோ மாண்ட்ரீஸர், பாஸ்டனில் சந்தித்தோம், நினைவிருக்கிறதா?

"அன்றைக்குப் பார்த்த அந்த விவரணப்படத்தை மறுபடி ஒருமுறை ஓக்கினாவாவில் பார்த்தேன். வேறு சில விவரணப்படங்களையும் பார்த்தேன். சில விஷயங்களைக் கூறுகிறேன், நீ என்ன நினைக்கிறாய் என்று சொல். இங்கே டோக்கியோ பல்கலைக்கழகத்தில் என் நண்பன் ஒருவனும் சுபா குறித்த விவரணப்படமொன்றைத் தயாரித்திருக்கிறான். இப்போதைக்குக் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகின்றன. தனிப்பட்ட திரையிடல்கள் மட்டுமே. இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கே திரையிட முயன்றபோது திரையில் படம் எதுவும் வரவில்லை. சொல்லப்போனால், அந்த விவரணப்படம் ஒரு நேர்த்தியற்ற தயாரிப்பு - வெறுமனே சில புகைப்படங்கள், செய்திக்கத்திரிப்புகள், சுபா வேஷத்தில் எங்கள் தோழி ஒருத்தி என்று. அதை அத்துடன் அவனும் விட்டுவிட்டான். ஆனால், வேறு சில விவரணப்படங்களும் அதே கதிக்கு ஆளாயின. அவை வேலைசெய்யவில்லை. இது ஏதோ புரளி என்று நினைத்தேன். இங்குள்ள செய்தி ஊடகங்களுக்கு இது தெரியுமென்றாலும், வெளியிடத் தயங்குகிறார்கள். இன்னும் சற்றுநாட்களில் புரளி தானாகக் கலைந்துவிடும் என்பது அவர்கள் எண்ணம்.

"உன் நண்பன் சித்தார்த்தனுடன் பேச முயற்சிசெய்தேன், சுத்தமாகப் பேச மறுத்துவிட்டான். இன்னும் சில மாதங்களில் ஹைடல்பெர்கரை ஐரோப்பிய யூனியன், அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் நெருக்கத் தொடங்குவதைப்பற்றி உனக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். அவ்வளவு பணத்தை விழுங்கிய ஆராய்ச்சியில் அவர்களிடம் மிச்சமிருப்பது கடைசி இரண்டு மாதத்துக்குள்ளான தகவல்களே"

என் மூச்சு அடைத்தது. இவளை நான் சந்தித்ததே ஒருமுறைதான், இதையெல்லாம் எவ்வளவு தூரம் நம்புவது என்று தெரியவில்லை. அவள் பத்திரிகைத்துறையில் இருப்பதாகச் சொன்னதாக நினைவு. தொடர்ந்து படித்தேன்.

"இதைத்தான் என்னால் நம்பமுடியவில்லை. தாள்கள் காணோம் என்கிறார்கள், கணிப்பொறிகளில் சேமிக்கப்பட்ட தகவல்களும் படங்களும் காணோம் என்கிறார்கள், இதெல்லாம் உண்மையா ஏதும் சதியா என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டில் பொருட்கள் காணாமற்போயிருக்கின்றன, தகவல்கள் காணாமற்போயிருக்கின்றன என்று புரளி... இது இப்போதில்லை, கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடந்து வருவதாகக் கூறுகிறார்கள், இதற்கு முன்பு ஆராய்ச்சி இயக்குனர்களாக இருந்த எரிக் சிங்க்ளேர், நரஹரி இருவருக்கும்கூட இந்தத் தகவல்மறைப்பில் பங்குண்டு என்கிறார்கள்.

"இதுகுறித்துத் தகவல்கள் திரட்டிக்கொண்டிருக்கிறேன். சொன்னால் ஆச்சரியப்படுவாய், எத்தனை தகவல்கள் இதுவரை காணாமற்போயிருக்கின்றன தெரியுமா? புகைப்படங்கள், கையெழுத்துப்பிரதிகள், ஓவியங்கள், விவரணப்படங்கள், ஒலிப்பதிவு நாடாக்கள், குறுந்தகடுகள்... நான் ஜப்பானை இன்னும் தாண்டவில்லை. எனக்குச் சில ஊகங்கள் உள்ளன. எனக்கு மட்டும்தான் இந்தச் சந்தேகங்கள் உள்ளன என்று நான் நம்பத் தயாரில்லை. உன்னுடன் பேசவேண்டும்; சரியான சந்தர்ப்பங்கள் என்னவென்று பதிலிட்டு, தயவுசெய்து உன் தொலைபேசி எண்ணையும் தருவாயானால் உன்னைத் தொலைபேசியில் அழைக்கிறேன்.
-ஜூன்'கோ".

நான் கணிப்பொறித் திரையைப் பார்த்துக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தேன். வாட்கா பாட்டிலின்மேல் உறைந்திருந்த பனிக்கட்டித் துகள்கள் கரைந்து வழியத் தயாராயிருந்தன. என் தொலைபேசி எண்ணை அவளுக்குத் தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலில் மேலும் இரண்டு வரிகளும் எழுதினேன்.

"அங்கே உனக்குத் தெரிந்து வேலைசெய்யாமல் போன விவரணப்படங்கள், திரையிடப்பட்ட எத்தனாவது தடவையில் வேலைசெய்யாமல் போயின என்றுமட்டும் விசாரித்து எனக்குச் சொல். இரவு ஒன்பதிலிருந்து பன்னிரண்டு வரையிலும் எந்த நேரத்திலும் நீ என்னைக் கூப்பிடலாம்.
-மாண்ட்ரீஸர்"

(திண்ணையில் அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் வந்துவிட்டன: இந்தக் கதையை அனுப்பியிருந்தேன். Busted என்பதால், சரி, ரிலீஸ் செய்துவிடலாம் என்று இங்கே இடுகிறேன்!! எழுத்துருச் சிக்கல்களைத் தவிர்த்து அனுப்ப உதவிய பி.கே.சிவக்குமாருக்கு நன்றி.)

Wednesday, March 23, 2005

பூமியின் எதிர்ப்பதம்

பூமியின் எதிர்ப்பதம்

கரும்பலகைக்கு முன்னிருந்து
பொன்னையா சாரின் நரைமுடி எங்களைப் பார்த்தது
பிரம்பும் எங்களைப் பார்த்தது
நாங்கள் கணுக்கள் செதுக்கிய பிரம்பு

எதிர்ப்பதங்கள் நெளிந்தன எங்கள் கால்சராய்களுக்குள்
மயிர்முளைக்கா கெண்டைக்கால் சதைகளில்
நாற்காலிகளின் மரக்கிறீச்சிடல்களில் டிஃபன்பாக்ஸ்களில்

பூமியின் எதிர்ப்பதம் என்ன எனக்
கேட்டிருந்தார் பொன்னையா

ராயப்பன் ஒரு பருக்கையை உருவிக்காட்டினான்
யோசேப்பன் நரகம் என்றான்
பின்பு குழம்பி, சொர்க்கம் என்றான்
நான் யோசித்தேன்,
பூமி என்றேன்

இருக்கலாம் என்றார் பொன்னையா
ஆனால் நான் பதம் என்றேன் என்றார்
பதத்துக்குப் பதம் மட்டுமே எதிரா என்றேன்
ஆம் என்றார், மேலும்
உனது பதில் நாடகீயமானதென்றார்
எங்களில் அலுப்படைந்தார்

சரி உங்களுக்குச் சில
சுலபமான கேள்விகளென்றார் பொன்னையா
நில் என்பதன் எதிர்ப்பதமென்ன?
உட்கார் என்றோம்
உட்கார் என்பதன் எதிர்ப்பதமென்ன?
நில் என்றோம்
பிரம்பு அசைந்தது

குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படம்

ராகேஷ் ஷர்மா என்ற இயக்குனரின் குஜராத் மதக்கலவரம் குறித்த Final Solution என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இதைத் திரையிடுவது குறித்த மின்னஞ்சல் அறிமுகத்தில், //Final Solution is a study of the politics of hate. Set in Gujarat during the period Feb/March 2002 - July 2003, the film graphically documents the changing face of right-wing politics in India through a study of the 2002 genocide of Moslems in Gujarat. It specifically aims political tendencies reminiscent of the Nazi Germany of early/mid-1930s. Final Solution is antihate/violence as "those who forget history are condemned to relive it"// என்றிருந்ததில், Final Solution என்பது, யூதர்களைக் கொல்ல நாஜிகள் வடிவமைத்த திட்டத்தின் பெயர் என்பது, பல மாணவர்களைச் சங்கடப்படுத்தியதால், படத்தைத் திரையிட அனுமதி மறுக்க மின்னஞ்சல் அனுப்புமாறு ஒரு கோரிக்கை வந்தது. அதை எத்தனை பேர் கண்டுகொண்டார்கள் என்று தெரியவில்லை. படத்தைப் பார்க்காமலே எதிர்ப்புக்குரலோ ஆதரவுக்குரலோ கொடுக்கக்கூடாதென்பதால் நான் எதுவும் எழுதவில்லை. படம் பார்த்தேன். சுமாரான கூட்டம். நிறைய இந்தியர்கள், சில பாகிஸ்தானியர், பல வெளிநாட்டவர் என்று கிட்டத்தட்ட நூறு பேர். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஓடிய படம். இந்தியாவில் தணிக்கைக்குழுவால் பொதுவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டு, பொதுவில்தானே திரையிடக்கூடாது, தனிப்பட்ட முறையில் திரையிடலாமென்று தனிப்பட்ட முறையில் திரையிட்டு, மேலும் piracy என்பதையே ஒரு உத்தியாக, ஒருவனுக்கு இலவச விசிடி கொடுத்தால் அவன் மேலும் ஐந்து பேருக்கு அதைப் பிரதி எடுத்துக் கொடுக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட 12000 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டுப் பார்க்கப்பட்ட ஆவணப்படம். சுருக்கமாக, நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு, கோத்ராவைத் தொடர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை எப்படி மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரித்தது, அடுத்த சட்டசபைத் தேர்தலில் கோத்ராவையே எப்படி மையமான ஒரு விஷயமாக்கி ஜெயித்தது என்பதை, நரேந்திர மோடியில் "கௌரவ யாத்திரை" துணையுடன் காட்டியது. கலவரம் நிகழ்ந்த நேரத்தில் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, 'இந்து' வின் முதல்பக்கத்தில் கொலைகாரர்களிடம் கண்ணீரோடு கைகளைக் கூப்பிக்கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதினனின் படம் மனத்தைப் பிசைந்ததுண்டு. இந்தப் படம், எதிர்-பாஜக நிலைப்பாட்டுடன், பெரும்பாலும் முஸ்லீம்கள் பார்வையில், அவ்வப்போது சில இந்துக்களின் பார்வையில் சொல்லப்பட்டிருந்ததென்பதால், நடந்த கற்பழிப்புக்கள், நினைவு தப்பும்வரை ஒருவனை அடித்துப்போட்டு எரியும் டயரை அவன்மேல் வைத்துவிட்டுப் போவது, பெண்களின் கருப்பைக்குள்ளிருக்கும் குழந்தைகள் உருவிக் கொலைசெய்யப்படுவது, குடும்பத்தோடு பத்துப் பேர் இருபது பேர் என்று கொலைசெய்யப்படுவது என்று எடுக்கப்படும் பேட்டிகளுடன், ஒரு முஸ்லிம் சிறுவனிடமும் ஒரு இந்துச் சிறுமியிடமும் எடுக்கப்பட்ட பேட்டிகள்தான் இன்னும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. படத்தை எடுத்த ராகேஷ் ஷர்மா, அந்த முஸ்லிம் பள்ளிச்சிறுவனிடம் (ஆறேழு வயதிருக்கும்) கேட்கிறார்: "பெரியவனாகி என்ன செய்வாய்?" "Soldier ஆவேன்."
"ஆகி?"
"இந்துக்களைக் கொல்லுவேன்."
"ஏன்?"
"இந்துக்கள் எங்கள் குடும்பத்தினரைக் கொன்றார்கள்"
"நானும் ஒரு இந்துதான். என்னை விட்டுவிடுவாயா?"
பையனுக்கு சிறிதுநேரம் குழப்பம். அங்குமிங்குமாகப் பார்க்கிறான்.
"ஆமாம். விட்டுவிடுவேன்"
"ஏன்? நானும் ஒரு இந்து தானே?"
"இல்லை, நீ ஒரு முஸ்லிம்".

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் சாமியார்களின், மோடியின் பேச்சையும், பிரஹலாத் சாஸ்திரி என்ற பேச்சாளருடனான (ஐக்கிய நாடுகளின் சட்டங்களிலிருந்து சடசடவென்று உடைந்த ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டும், விஷங்கக்கும் பேச்சாளரொருவர். "இந்து அடிப்படைவாதம் இதுவரை உருவாகவில்லை; ஆனால் உருவானால், பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும்" ரீதியில்...) நேர்முகங்கள், குஜராத் மாநில ஆதிவாசிகள் விஹெச்பியினரால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆள்திரட்டுவது (சொல்லும் காரணம்: Abstination: மது, சிகரெட் இதெல்லாம் இங்கே சேர்ந்தபின் கிடையாது. முஸ்லிம்கள் இதையெல்லாம் காட்டி ஆளை மயக்கி, வீட்டைவிட்டு இந்துப் பெண்களை அழைத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். நாம் மரியாதையுடன் பிழைக்கவேண்டாமா?) என்றும், எப்படி சிறுபான்மையினர் ghettoisationக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்றும், மிக வலிமையான சில நேர்முகங்களுடன் இருந்த படம். என் மகளின் மார்பை அறுத்தார்கள் என்றும், ஒரு கையில் மொபைல் ஃபோன் மறுகையில் வாளுடன் தான் எங்களை வெகு திட்டமிட்டுத் தாக்கினார்கள், குடும்பத்தோடு மொத்தமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள், வா வந்து கற்பழிப்பதைப் பாரு என்று எக்காளமிட்டுக்கொண்டே பெண்களைக் கற்பழித்தார்கள் என்று முஸ்லிம்களும், இந்துக்களாவது கம்பு வாள் கொண்டு தாக்கினார்கள்; இந்த முஸ்லிம்களுக்கு ஆயுதங்களெல்லாம் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை என்றுகொண்டு இந்துக்களும் என்று இருபக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள். அடுத்து ஆகாஷ்தர்ம் கோவிலில் கமாண்டோப் படையினரால் சுடப்பட்டு இறந்த தீவிரவாதிகள் இருவரைப்பற்றியும், அது எப்படி அரசியலாக்கப்பட்டது என்றும், தேர்தலில் ஜெயித்தபிறகு அத்வானி "கோத்ரா பற்றிப் பேச்செடுக்காமலே தேர்தலில் ஜெயித்தோம். It is remarkable" என்றும், hate mandate எப்படி பாஜக மறுபடி ஆட்சிக்கு வர உதவியதென்றும் கூறுகிறது இரண்டாம் பாகம். கண்ணுக்குக் கண் என்று அனைவரும் களத்தில் இறங்கினால் உலகமே குருடாகிவிடும் என்று காந்தி சொன்னதைத்தான் நினைவுகூரவேண்டியிருக்கிறது. பேட்டிகாணப்பட்டவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தார், காங்கிரஸ் பாஜக முஸ்லிம் இந்து என்று அரசியல் சித்துவிளையாட்டுக்களில் பொதுஜனங்கள் மாட்டிக்கொண்டு சாகிறார்கள் என்ற ரீதியில் கருத்துக் கூறினார்கள்.

மேலும், என்னளவில் விமர்சனமென்று ஒன்று வைக்கவேண்டுமெனில், சங்பரிவார், விஹெச்பி, பாஜக இந்தப் பிரச்னையில் உபயோகித்த காட்டுமிராண்டித்தனம் மேலான இந்த ஆவணப்படத்தின் நியாயமான விமர்சனத்தைத் தவிர்த்து, தெற்காசிய மதநிலவரங்களைப்பற்றித் தெரியாத ஒரு நடுநிலைப் பார்வையாளனுக்கு (neutral foreign spectator), இந்தப் படம் மட்டும், தன்னளவில் இந்துக்களைப்பற்றி என்ன உணர்வுகளை அளிக்குமென்றுதான் யோசிக்கத் தோன்றியது. இண்டியானா ஜோன்ஸ் அண்டு த டெம்பிள் ஆஃப் டூம் பார்த்துவிட்டு அம்ரீஷ்புரி ரீதியிலும், ISKCON ரீதியிலும் அபிப்ராயம் வைத்திருப்பவர்களிடம், இந்துமதம் குறித்த எந்தவித அபிப்ராயம் கொடுக்கும் என்று யோசித்தபோது, படம், குஜராத் கலவரத்தில் தொடங்கி, குஜராத் கலவரத்தில் முடிகிறதால், "இந்து" என்பவன் இவ்வளவுதானா என்ற ரீதியில் அடங்கிப் போகிறதா என்று கேட்டேன். மழுப்பலான ஏதோ பதில். செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு மெல்லிசாக மீசை, நீளமான தாடி என்று இருந்தாலே இஸ்லாமியத் தீவிரவாதி என்று சந்தேகத்துடன் பார்ப்பதுபோன்ற மடத்தனமான பார்வையை மேற்கத்திய உலகம் வரித்துக்கொண்டுவிட்டதுபோல, "இந்துக்கள் அனைவரும் பாஜக, விஹெச்பி பூட்ஸுக்குப் பாலிஷ் போட்டுக்கொண்டு, பிற மதத்தினரை வெட்டிக் கொல்பவர்கள்" என்ற ரீதியில் மொட்டையாக சித்தரித்திருக்கிறீர்களே என்று சில கேள்விகள். கிடைத்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. சரி, "இந்துக் காட்டுமிராண்டிகள்" (மேற்கண்ட பூட்பாலிஷ் ரீதியில்...) திருந்துவோமென்று முடிவெடுத்து, இந்துமதத்தை அடியோடு வேரறுத்துவிட்டு சீனா போல அதிகாரபூர்வமான இறைநம்பிக்கையின்மையைத் (atheism) தழுவினால் அதன்பிறகு அதன் எதிர்காலம் எப்படியிருக்குமென்று ஊகிக்க முடியுமா உங்களால் என்று ஒரு கேள்வி. பதில் திருப்தியளிக்கவில்லை. சர்வதேசத் தளத்தில் இந்தப் பிரச்னை என்று இயக்குனர் சொல்ல, தற்போதைய சூழ்நிலையில் மதச்சார்பின்மை குறித்து இந்தியாவுக்கு அறிவுரை சொல்லுமளவு பிறமதத் துவேஷமில்லாத "முன்னேறிய நாடுகள்" இருக்கின்றதா என்று கேட்டதற்கு, "Nation state குறித்த எனது கருத்தாக்கம் வேறுபட்டது. என்னை ஒரு தேசத்துக் குடிமகனாக குறுகிய கண்ணோட்டத்தில் நான் கருதுவதில்லை" என்ற ரீதியில் ஒரு பதில். குஜராத் பள்ளிக்கூடங்களில் ஹிட்லர் பற்றிய ஒரு வரி "தன் இனத்தவரைப் பெருமைகொள்ளச்செய்து தன்னம்பிக்கையூட்டினார்" என்று புகழ்ந்து எழுதப்பட்டிருப்பதை, சிறுபான்மையினர் தனியாகப் பிரித்து வைக்கப்படுவதையும் படம் குறிப்பிடுகிறது.

ஷ்யாம் பெனகலிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் விபரங்கள் அறிய அவரது தளத்தைப் பார்க்கவும். இந்தப் படத்தின்மீது தனிப்பட்ட விமர்சனங்கள் இருப்பினும், நிஜத்தின் குரூரமுகத்தை நெருக்கத்தில் காணக்கிடைத்த வாய்ப்பு என்ற ரீதியில், ஒரு நினைவில் தங்கும் அனுபவம்.

Sunday, March 20, 2005

Fanny and Alexander

வசனங்கள், மிகையுணர்ச்சிகள், தத்துவங்கள், பிரலாபங்கள், ஒப்பாரிகள், சோகங்கள், மகிழ்ச்சிகள் என்று அனைத்தும் இருந்தும், மூன்று மணி நேரப் படத்தைப் பார்த்து முடித்தும், எதையோ தவறவிட்டுவிட்டோமே தவறவிட்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நினைக்கவைத்த படம் இங்மார் பெர்க்மனின் ஃபானி அண்ட் அலெக்சாந்தர் (Fanny and Alexander). மூன்று நாட்களில், துண்டு துண்டாகப் பார்த்தேன். கதை எனில்: உப்சலா என்னும் ஸ்வீடன் நகரத்தில், 60களில் வாழ்ந்ததாகச் சித்தரிக்கப்படும் ஏக்தால் (Ekdahl) குடும்பத்தினரைப்பற்றிய கதை. நாடக நிறுவனமொன்றை நிர்வகிக்கும் அக் கூட்டுக்குடும்பத்தின் மூத்த மகன் ஆஸ்கார் (Oscar Ekdahl), ஒரு திறமையான நிர்வாகி, வெகு சாதாரணமான நடிகன். அவனுக்கொரு மனைவி, ஃபானி, அலெக்ஸாந்தர் என்று இரண்டு குழந்தைகள். ஆஸ்காரின் சகோதரர்களில் ஒருவன் திறமையான வியாபாரி (குஸ்தாவ் அடால்ஃப் - Gustav Adolf), மற்றொருவன், இன்னும் ஸ்வீடிஷ் மொழியை ஒழுங்காகக் கற்றுக்கொண்டிராத ஜெர்மானியப் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்துகொண்டும், வறுமையில் உழன்றுகொண்டுமிருக்கும் ஒரு பேராசிரியர் (கார்ல் - Carl). இவர்களது மனைவி, குழந்தைகள், ஏக்தால் சகோதரர்களின் தாய் - முதுபெண் ஹெலனா ஆகியோருடனாக கூட்டுக்குடும்பம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் படம் தொடங்குகிறது. ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய்; அனைவரும் குடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும், ஆஸ்கார், தனது நாடகக் கம்பெனியாருக்கு கிறிஸ்துமஸ் நாளன்று நன்றி சொல்லிக்கொண்டும்.

கார்ல், கூடியிருக்கும் சிறுவர்களையெல்லாம் அழைக்கிறார்: "வாருங்கள் குழந்தைகளே, மெழுகுவர்த்திகளை எடுத்துக்கொண்டு வாருங்கள், உங்களுக்கு பெரும் வாணவேடிக்கை காண்பிக்கிறேன்" என்று. மாடியின் ஒதுக்குப்புறமாகக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போய், காற்சட்டையை கழற்றிவிட்டு, உட்காற்சட்டையுடன் மெழுகுவர்த்திகளுக்கு மேலாகத் தன் புட்டங்களை வைத்து ஒரு பெரும் வெடி(!!) போட்டு அவற்றை அணைக்கிறார்; படத்தின் மத்தியில், எப்போதும் ஒரு வேலைக்கார மனப்பான்மையுடனேயே இருக்கும் தனது ஜெர்மானிய மனைவியைக் கடிந்துகொண்டும் கோபித்துக்கொண்டும் தனது கடனாளி நிலையை நினைத்து சுய இரக்கத்தில் அழுதுகொண்டும் இருக்கிறார்.

குஸ்தாவ் அடால்ஃப் ஒரு ப்ளேபாய். விந்தி விந்தி நடக்கும் மாய் (Maj) என்னும் வேலைக்காரப் பெண்ணுடன் தொடர்பு. அவரது மனைவிக்குத் தெரிந்தும், அவள் கண்டுகொள்வதில்லை. கட்டிலின் மேல் படுத்துக்கொண்டு, அன்றிரவு கட்டிலை முறிக்கிறார்கள். தான் தானாக இருக்கவிரும்பும் மாய் மீது தேவையற்ற அன்பைப் பொழிந்து, "உனது பெயருக்கு சில சொத்துக்களை எழுதிவைக்கிறேன்" என்று வெகு தீவிரமாகச் சொல்லி அவளையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்.

ஹாம்லெட் நாடக ஒத்திகை நடக்கிறது. ஆஸ்காரும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு வசனத்தைப் பேசி முடித்தவுடன், அடுத்து என்ன செய்யவேண்டுமென்று மறந்துபோகிறது. என்ன செய்யவேண்டும் நான் என்று சக நடிகனைக் கேட்கிறார். "உன் வசனம் முடிந்தது. இப்போது நீ மேடை பின் நடுப்பக்கமாக வெளியேறவேண்டும்" என்கிறான் அவன். ஆஸ்கார் சரிந்து விழுகிறார். மருத்துவர்கள் வருகிறார்கள். உயிர் பிரியுமுன் ஃபானியையும் அலெக்ஸாந்தரையும் பார்க்க ஆஸ்கார் பிரியப்படுகிறார். வரவே மறுக்கும் அலெக்ஸாந்தரை கட்டாயப்படுத்தி இழுத்து வருகிறார்கள். அலெக்ஸாந்தர் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு விகாரமான மூச்சிரைப்பு, இழுப்புடன் ஆஸ்காரின் உயிர் பிரிகிறது, மரணத்தின் வாசனையை அலெக்ஸாந்தரின்மேல் தெளித்துவிட்டு.

நாட்கள் நகர்கின்றன. ஆஸ்காரின் மனைவி எமிலி, மறுமணம் செய்துகொள்கிறாள். இந்தத் தடவை திருமணம் செய்துகொண்டது, எட்வர்ட் வெர்கிரஸ் என்ற ஒரு கிறிஸ்துவப் பேராயரை. அலெக்ஸாந்தரும் ஃபானியும் தங்களது மாற்றாந்தந்தை எட்வர்டின் வீட்டுக்குக் குடிபோகின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, ஜன்னல்களுக்குக் குறுக்காகக் கம்பிகளடிக்கப்பட்ட, கிட்டத்தட்ட தேவாலயம் போலவே இருக்கும் அந்த வீட்டின் வேலைக்காரிகள், செயலற்ற எட்வர்டின் சகோதரி, மற்றொரு சகோதரி, தாய் அனைவரும் கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிகளைக்கொண்டு பிறரைப் பிணைக்கும் ஒரு இறுக்கத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். அலெக்ஸாந்தர் மேல் எட்வர்டுக்கு இருக்கும் வெறுப்பு சொல்லி மாளாது. அறநெறிப் போதனைகள் உதவியுடன் தன் இழுப்புக்கு அலெக்ஸாந்தரை வளைக்க முயலும் எட்வர்டுக்கு ஒவ்வொரு முறையும் தோல்வியே நிகழ்கிறது. நிகழ நிகழ, வன்மம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அலெக்சாந்தரின் தாய் எமிலிக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலை - மகனிடம், "எனக்கு இன்னும் சற்று நேரம் கொடு, அனைத்தையும் சீராக்க முயல்கிறேன்" என்கிறாள். அந்த வீட்டினுள் நடமாடும்போதெல்லாம் தன் தந்தையின் ஆவியைக் காண்கிறான் அலெக்சாந்தர். அந்த வீட்டு வேலைக்காரி ஒருத்தி, எட்வர்டின் பழைய மனைவிகளைக்குறித்து அலெக்சாந்தரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். "பழைய மனைவிக்கு இரண்டு பெண்குழந்தைகள். பக்கத்து ஆற்றில்தான் விழுந்து உயிர்விட்டார்கள். என்ன நினைத்துக்கொண்டிருந்தார்களோ தெரியவில்லை, ஒருவரையொருவர் அவ்வளவு இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டு இறந்துகிடந்தார்கள். ரம்பத்தால் அறுத்துத்தான் அவர்களைப் பிரிக்கவேண்டிவந்தது" என்கிறாள். தனது கற்பனைத் திறனைத் துணைக்கழைத்து, எட்வர்ட் தான் அந்த மூன்று பேரையும் ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக கூறுகிறான் அலெக்சாந்தர். மேலே விசாரணைக்கு அழைக்கப்பட்டு, காற்சட்டை இறக்கப்பட்டு, முறுக்கப்பட்ட பிரம்பைக்கொண்டு வெளுத்து எடுக்கிறார் எட்வர்ட். அலெக்ஸாந்தர், தனியறை ஒன்றில் அடைக்கப்படுகிறான்.

மறுபடிக் கர்ப்பமடைகிறாள் எமிலி. தனது முன்னாள் மாமியார் ஹெலனா மீது உள்ள அபிமானத்தால், அவளுடனும் பேசி வருகிறாள், தொடர்பு வைத்திருக்கிறாள். ஹெலனாவுடன் பேசிவிட்டு வீடுதிரும்பும் எமிலி, அலெக்சாந்தர் தனியறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உக்கிரமடைகிறாள். எட்வர்டின் உணவில் வழக்கத்தைவிட அதிகளவில் தூக்கமாத்திரை கலந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, ஹெலனாவுடன் சேர்ந்துகொள்கிறாள். பின்பு அவர்களைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள், "எட்வர்டின் செயலிழந்த சகோதரி அருகிலிருந்த மெழுகுவர்த்தி கீழே விழுந்து துணிகளில் தீப்பற்றி அவள்மேலும் தீப்பற்றி, அவள் பின்பு ஓடி வந்து எட்வர்ட் மேல் விழுந்து இறுகப் பற்றிக்கொண்டதால், எட்வர்டும் கருகி இறந்துவிட்டார்" என்ற துக்ககரமான செய்தியைச் சொல்கின்றனர். ஹெலனாவும் எமிலியும் நாடக நிறுவனத்தைச் சேர்ந்து நிர்வகிப்பது என்ற முடிவுக்கு வருகின்றனர். அகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்கின் ஒரு நாடகத்தை ஹெலனாவிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறாள் எமிலி. பிஸ்கெட்டுகளை எடுக்கவரும் அலெக்ஸாந்தர், தடுக்கிக் கீழே விழுகிறான். எழுந்திருக்க முயல்பவனின் பிடரியை வெகு அழுத்தமாக ஒரு கை இறுக்கிப் பிடிக்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான். எட்வர்ட், "உன்னை விடுவதில்லை" என்றுவிட்டு நடந்து போகிறார். சுதாரித்து எழுந்து வரும் அலெக்ஸாந்தர், நாடகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் பாட்டி ஹெலனாவின் மடியில் படுத்துக்கொள்வதுடன் படம் முடிகிறது.

ஒருசில படங்களில், ஒளிப்பதிவாளர் என்பவர் அந்தப் படங்களுக்குக் கிடைத்த வரம் என்று தோன்றும். பழைய 'நெஞ்சில் ஓர் ஆலயம்' அ.வின்சென்ட் (சரியா?) போல. பெர்க்மனின் அனைத்துப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஸ்வென் நிக்விஸ்ட்டின் (Sven Nykvist) ஒளிப்பதிவு, படத்தின் வெவ்வேறு பக்கங்களை வெகு துல்லியமாகப் பிரித்தும் இணைத்தும் காட்டுகிறது. கிட்டத்தட்ட மறுமலர்ச்சி ஓவியர்களின் ஓவியங்கள், அலங்காரங்களைப்போன்ற வெகு நளினமான, வண்ணமயமான நாடக்கார ஏக்தால் குடும்பத்தின் வீடு; எந்தவித அலங்காரமுமற்ற, மத, அறநம்பிக்கைகளே சுவற்றின் சுண்ணாம்பாக வெளுத்துப்போய் உயிரற்று - ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்ற பழம்பெருமையுடன் ஓங்கி எழுந்து நிற்கும் எட்வர்டின் வீடு, மற்றும் அங்கிருந்து தப்பித்து ஃபானியும் அலெக்ஸாந்தரும் தங்கவைக்கப்பட்டிருக்கும் யூத வியாபாரி ஈசாக்கின் வீட்டினுள் காணும் எண்ணற்ற நிறங்கள், பொருட்கள், அமானுஷ்ய சக்திகள்கொண்டதாகக் காட்டப்படும் இஸ்மாயில் போன்றவற்றை, படம் பார்க்கும்போது உறுத்தலில்லாமல் காட்டி, படத்தைப் பார்த்து முடித்து எப்போதோ யோசிக்கையில், சம்பவங்களை நினைவுகூரையில், சம்பவங்களுடனே நிறங்களையும் குழைத்து நினைவுகளுள் பரவவிடும் மாயம், ஸ்வென் நிக்விஸ்ட் போன்ற வெகு சில ஒளிப்பதிவாளர்களுக்கே வாய்த்த வரம். படத்தைப் பார்க்கும்போது உணர்வீர்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு ஓவியம்போல இருப்பது - முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்ட Girl with a pearl earring போலவே.

சிறுவன் அலெக்சாந்தர், இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டபின்பு மாய லாந்தரில் (magic lantern) படம் காண்பிப்பதும், நிஜ வாழ்வில் பெர்க்மனுக்கு மிகவும் கண்டிப்பான பாதிரியார் தந்தை இருந்ததையும் இன்னும்பலவற்றையும் கொண்டு, இதில் ஓரளவு பெர்க்மனின் சுயசரிதைத்தமை இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுவன் அலெக்சாந்தரின் பிடரியில் அழுந்தும் எட்வர்டின் கையின் பிடி, சிறுவனைச் சிலையாக்கி, அனைத்து அதிகாரங்களையும் ஒற்றைப் பிடரி அறையில் அலெக்சாந்தரின் தலைக்குள் இறக்குகிறது. துக்கக் காட்சிகளை எவ்வளவு உன்னதமாக அமைக்கமுடியுமென்பதற்கொரு சாட்சியம், ஆஸ்கார் இறந்த அன்று இரவில், குழந்தைகள் ஃபானியும் அலெக்சாந்தரும் ஒரு பெரும் ஓலக் குரலைக் கேட்டு எழுவது. சிறிதே திறந்திருக்கும் கதவு வழி, சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஆஸ்காரின் பிணம் தெரிகிறது; குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு, திரும்பத் திரும்ப எமிலி ஓ ஓ என்று கத்திக்கொண்டிருக்கிறாள். கண்ணீர் வருவதாகத் தெரியவில்லை; ஆனால் நெஞ்சின் ஆழத்திலிருந்து புறப்படும் அந்த ஓலத்தில், வெறுமனே துக்கத்தைத் தாண்டியும் வேறேதோ இருப்பதை - அது ஆங்காரமா, இயலாமையா, எதிர்பாராத கணத்தில் எனக்கெப்படி இப்படி நிகழலாம் என்ற வாழ்வின்மீதான வன்மமா - என்ன சொல்லி அந்த நடிகையை இவ்வளவு தெளிவாக உணர்ச்சியை வெளிப்படுத்தச் செய்திருப்பார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை வோட்கா துணையுடன் பார்த்ததால் ஓவர் செண்டிமெண்டலாகி, பெர்க்மன் படமென்றால் பாராட்டித்தான் தீரவேண்டுமென்று என்னை நானே படத்துக்குள் புகுத்திக்கொண்டேனோ என்னமோ. பின்பு நிதானமாக யோசித்துப் பார்த்தாலும், அப்படியேதும் தோன்றவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் இந்தக் காட்சியை நினைவுகூர்ந்தும், படத்தை இனிமேல் பார்ப்பவர்கள் இதைக் கவனித்தும், நான் சொல்வது சரியா இல்லையா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தில் வந்து போகும் பிற பாத்திரங்கள் - நிழல்கள் போல வந்து மறைந்துபோகும் வேலைக்காரிகள், சமையற்காரிகள், பெரும்பாலும் ஏதும் பேசாத, அகன்ற கண்களையுடைய சிறுமி ஃபானி... காலரீதியில், இந்தப் படம் சில வருடங்களையே மையமாகக் கொண்டு, The Seventh Seal போன்ற "பிரம்மாண்டமான" தத்துவ அலசல்கள் ஏதுமின்றி இயங்கினாலும், அதுபோன்ற படங்களுக்கும் எந்தவிதத்திலும் குறைவில்லாததாகவே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் டிவிடி இரண்டு வகைகளில் கிடைக்கிறது: நான் பார்த்த மூன்று மணி நேர திரையரங்கு வடிவமாகவும், மற்றும் ஐந்து மணி நேர Director's cut ஆகவும். ஐந்துமணி நேர வடிவம் எப்படியிருக்கிறதென்று தெரியவில்லை. ஃபானி & அலெக்சாந்தர், பெர்க்மனின் படைப்புக்களிலேயே மிகச் சிறந்தது என்கிறார்கள்; தனிப்பட்ட முறையில் எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை எனினும், மிக நல்ல படம்.

படம் நன்றி: ஆமஸான்

Saturday, March 19, 2005

கருணைக் கொலை

நிறையப் பேர் இந்த வழக்கைக் கவனித்துக்கொண்டு வந்திருப்பீர்களென்று நினைக்கிறேன். ஒரு கணவன், ஒரு மனைவி. மனைவி நோயில் விழுகிறாள்; உயிரோடு இருந்தாலும், persistent vegetated state எனப்படும் வதங்கிய நிலையில்தான் இனி வாழ்வு முழுதும் இருக்கமுடியும். "பிறரைச் சங்கடப்படுத்தியோ, செயற்கையாகவோ உயிருடன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என் காலம் முடியும்போது நான் போய்விடவேண்டும்" என்று சுயநினைவுடன் இருக்கும்போது கணவனிடம் சொல்லியிருப்பதாக கணவனும், வேறு இரண்டு சாட்சிகளும் சொல்கிறார்கள். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற, மனைவியை உயிருடன் வைத்திருக்கும் உணவுக்குழாயை நீக்கவேண்டும் என்றும், உனக்குப் பிரச்சினை வேண்டாம் - அதேசமயம் அவளது உணவுக்குழாயை நீக்கி அவள் உயிரை அகற்றவும் வேண்டாம் - எங்களிடம் கொடுத்துவிடு, நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென்று பெற்றோர்களும் விவாதித்து, பல வருடங்களாக நீதிமன்றத்தில் வாதாடி,நேற்று, நீதிமன்றம், உணவுக்குழாயை நீக்கலாமென்று தீர்ப்பளித்திருக்கிறது.

ஃப்ளோரிடாவில் டெர்ரி ஷியாவோ (Terry (Theresa) Schiavo) என்ற அந்தப் பெண்ணுக்கு, நேற்று மதியம் வாக்கில் உணவுக்குழாய் நீக்கப்பட்டது. அவரது பெற்றோருடனான ஒரு பேட்டியில், "ஏன் அவரது கணவர் அவளது உணவுக்குழாயை நீக்கவேண்டுமென்று தலைகீழாக நிற்கிறார்" என்று கேட்கப்பட்டதற்கு, "தெரியவில்லை: அதுதான் அவள் விருப்பமென்று சொல்கிறார். அப்படியே சொல்லியிருந்தாலும் எங்களுடன் டெர்ரி இருந்துவிட்டுப் போவதில் என்ன நஷ்டம் இருந்துவிடப்போகிறது" என்கிறார்கள். டெர்ரியைப் பராமரித்து வந்தாலும், டெர்ரியின் கணவர் மைக்கேல் ஷியாவோ, வேறொரு பெண்ணுடனும், அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளுடனும் தற்போது வாழ்ந்து வருகிறார். பொதுவாக, இந்தச் செய்தியைப் படிக்கும்போது டெர்ரியின் பெற்றோர் போலவே எனக்கும் புதிராகத் தோன்றியது. ஏன் இந்த ஆசாமி டெர்ரியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டுத் தன் வாழ்க்கையைத் தொடரக்கூடாது என்றுதான் தோன்றியது. போதாக்குறைக்கு, சில நாள் முன்பு ஒரு பணக்காரர் வேறு, பெற்றொரிடம் டெர்ரியை ஒப்படைத்துவிட்டால் ஒரு மில்லியன் டாலர்கள் தருவதாகக் கூறியும், "நான் செய்வது பணத்துக்காக இல்லை" என்று மைக்கேல் ஷியாவோ மறுத்துவிட்டார். இவ்விடத்தில், இதற்குமுன்பு டெர்ரிக்கு நடந்த சிகிச்சையில் சிகிச்சைத்தவறு நஷ்ட ஈடு (malpractice settlement)ஆக ஏகப்பட்ட பணமும் டெர்ரி-மைக்கேலுக்குக் கிடைத்திருக்கிறது. அதையும், "முதன்முதலில் டெர்ரி மயக்கமடைந்து விழுந்தபோது என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது" என்று என்றும், டெர்ரி வெறும் 115 பவுண்டு எடைதான்; மைக்கேல் ஆறரை அடி உயரம், கிட்டத்தட்ட 250 பவுண்டு எடை; ஒரு நிலையான வேலையில் தொடர்ந்து இருக்கவில்லை என்ற ரீதியில், மைக்கேலுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்குமாறு கூறப்படும் கற்பிதங்கள். ஃப்ளோரிடா ஆளுநர் ஜெப் புஷ் இயற்றிய விசேஷ அதிகாரம், அமெரிக்க காங்கிரஸ்முன் டெர்ரி வரவேண்டும் (வரவேண்டிய அவசியமிருப்பதால் உணவுக்குழாயை நீக்கமுடியாது என்ற ரீதியில்) என்று, பெரும்பான்மக் கட்சித்தலைவர் Tom DeLay போன்ற வலதுசார்புடைய குடியரசுக் கட்சியினர் முயன்றும், நீதிபதி ஜார்ஜ் க்ரியர் (George W. Greer), உணவுக்குழாயை நீக்குமாறு தீர்ப்புக் கொடுத்துவிட்டார். ஏற்கனவே பொதுஜனத் தளத்தில் அந்த நீதிபதியைக் 'கொலைகாரன்' என்ற ரீதியில் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள், இப்போது கொலைமிரட்டல்கள் வேறு வருகின்றதென்கின்றனர். இந்த நீதிபதி, டெர்ரி ஷியாவோவை ஒருதடவைகூட நேரடியாகப் பார்த்ததில்லை என்பதையும் குற்றச்சாட்டாகச் சொல்கின்றனர் சிலர். சில நாட்களுக்கு முன்புதான் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியையும், சில போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுவிட்டு ஒரு குற்றவாளி தப்பித்து ஓடிப் பிடிபட்டான்.

பெற்றோர் மற்றும் அவர்களது பக்கம் பேசுபவர்கள் சொல்வது: எங்களுடன் டெர்ரியை அனுப்பிவிடுங்கள். PVS என்று சொல்லப்படும் அளவுக்கு வதங்கிய நிலையில் டெர்ரி இல்லை, எங்களை அடையாளம் கண்டுகொள்கிறாள். அவளுக்கு ஒன்றும் இல்லை. இந்தமாதிரி உணவுக்குழாயை உருவி, பசிக்கவைத்துக் கொல்வது காட்டுமிராண்டித்தனம்.

மைக்கேல் ஷியாவோ (Michael Schiavo) சொல்வது: அவள் என்னிடம் சொன்னது இதுதான் - "நான் யாருக்கும் சுமையாக இருக்கவோ, வதங்கிய நிலையில் வாழ்ந்திருக்கவோ விரும்பவில்லை. என் நேரம் வரும்போது இறக்கவே விரும்புகிறேன் (technically சரியான வார்த்தைப்பிரயோகமில்லை, பெரும்பாலானோருக்கு இது ஏற்கனவே தெரிந்திருக்குமாகையால் மேற்கொண்டு விபரமாகச் சொல்வது தேவையில்லையென்று நினைக்கிறேன்)". அதனால் அவளது உணவுக்குழாயை நீக்குவதே உசிதம். நான் டெர்ரியை மிகவும் நேசிக்கிறேன், அவளது விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமை. மேலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்தில் அரசாங்கம் மூக்கை நுழைப்பதை நான் எதிர்க்கிறேன். எனக்கு என்ன வைத்தியம் தேவை, தேவையில்லை என்று தீர்மானிக்க நோயாளிக்குத்தான் உரிமையுள்ளது. அரசாங்கத்தின் அறவியல் கோட்பாடுகளுக்கு அந்தத் தீர்மானம் ஒத்துப் போகவில்லை என்பதால் அந்தத் தீர்மானத்தை நிராகரிக்கவோ மறுக்கவோ உரிமையில்லை. இது என் தனிப்பட்ட விஷயம் என்கிறார். அப்போது டெர்ரி எழுதிக் கையெழுத்துப் போட்டது ஏதாவது இருந்தால் சரி, அதுதான் இல்லையே என்கிறார்கள். லாரி கிங்கின் நிகழ்ச்சிக்குப் பேட்டிக்கு வந்த ஒருவர், "அறவியல் படி..." என்று தொடங்க, கிங், "உமது அறவியல் வேறாக எனது அறவியல் வேறாக இருக்கலாம், அதல்ல பிரச்னை" என்று கத்திரித்தார். பின்பு "டென் கமாண்ட்மெண்ட்ஸில் சொல்லியிருப்பது போல..." என்று தொடங்க, மறுபடி "நீதிமன்றம் சட்டத்தை வைத்து இயங்குவது, வேதாகமங்களைக் கொண்டு அல்ல" என்று மறுபடிக் கத்திரித்தார். உண்மை, உண்மை (லாரி கிங் யூதர் என்பதை ஒரு விமர்சனமாக வைக்கலாம்; ஆனாலும் அவர் சொன்னது உண்மையே).

கருணைக் கொலை என்பதுபற்றி யோசிக்கச் சந்தர்ப்பங்கள் எழுந்ததில்லை. உயிர் போகும் நிலையில், வேதனையை முடித்துவைக்க வாயில் பால் ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன் - அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், கணவர் பக்கமா பெற்றோர் பக்கமா என்று பார்த்தால் - பெற்றோர் பக்கம்தான் சாயத் தோன்றுகிறது. உணவுக்குழாயை நீக்குவதுதான் இறுதிக் கட்டம், உயிர்நீக்கம் என்று நினைத்தால், அதற்குப்பதில் பெற்றோரிடம் டெர்ரியை ஒப்படைத்துவிட்டு, அதுவும் ஒரு உயிர்நீக்கம்தான் என்று கொள்ளலாமே - தன் மனைவி இப்படி செயலற்றுக் கிடப்பதைப் பார்த்து மைக்கேல் அடையும் வேதனைக்கு சமாதானம் கூறுவது யாராலும் இயலாத காரியம் எனினும். "டெர்ரிக்குப் பதிலாக யார் வருவார்கள்? இதைவைத்து ஓட்டு ஆதாயம் தேடப்பார்க்கும் ஜெப் புஷ் போன்ற அரசியல்வாதிகளா?" என்கிறார் மைக்கேல். தனிமனித சுதந்திரம் என்பதுதான் இப்போது பிரச்னையாக இருக்கிறதோ என்னமோ இவர்களுக்கு. "விசாரணை" கதையிலாவது படுக்கை வரையில்தான் அதிகாரிகள் வருகிறார்கள், ஆனால் போகிறபோக்கில் பார்த்தால், கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் பெண்களின் கருப்பைக்குள்ளும் அரசாங்கத்தின் கை பாய்ந்துவிடும் போல்தான் இருக்கிறது.

அனைத்துத் தகவல்களும் தெரிந்திராததால், பல விஷயங்கள் விடுபட்டிருக்கலாம்... கவனிக்கத்தக்க வழக்கு. திங்கட்கிழமை காங்கிரஸில் புதிதாக சட்டம் ஏதும் இயற்றப்படுகிறதா என்று எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம். முன்பொரு முறை, நீக்கிய உணவுக்குழாயை மறுபடிப் பொருத்தியிருக்கிறார்கள். இந்தத் தடவையும் அதுமாதிரிச் செய்து பாவம் உணர்வற்றுக் கிடக்கும் அந்தப் பெண்ணுடன் சடுகுடு விளையாடி அவமானப்படுத்தாமலிருந்தால் சரி.

Tuesday, March 15, 2005

அசோகமித்ரன்

அசோகமித்திரனின் கதைகளிலுள்ள காஃப்காவின் தாக்கம் பற்றிய தமிழவனின் சிறு குறிப்பு. பெரும்பாலும் கவனிக்கப்படாமலே விட்டுவிட்ட அசோகமித்திரனின் 'ஒற்றன்' பற்றித் தமிழவன் குறிப்பிட்டிருந்ததைப் படித்து ஆச்சரியமடைந்தேன். ஒற்றன் படித்தபோது நான் உணர்ந்ததும் அதுவே. Kafkaesque என்று. இதில் தமிழவன் குறிப்பிடும் காஃப்கா கதைகளில், பேசித் தீர்த்துவிடப்பட்ட உருமாற்றம் (The metamorphosis) தவிர்த்த சிறுகதைகளான தீர்ப்பு (The Judgment) மற்றும் நாட்டுப்புற வைத்தியன் (The country doctor) இரண்டும், படித்த காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. குறிப்பாக, நாட்டுப்புற வைத்தியன் கதையைத் தனிப்பட்ட உபயோகத்துக்காகச் சொந்தமாக மொழிபெயர்த்ததுண்டு - காஃப்காவின் கதைகளிலேயே உனக்குப் பிடித்தது எது என்று கேட்கப்படும்போதெல்லாம் பட்டென்று இந்தக் கதையையே சொல்லியிருக்கிறேன். ஐந்தாறு பக்கங்கள்தான் இருக்கும் - உண்மையில், கல்லூரிக்காலத்தில் பெருமளவு பாதித்த கதை அது. போர்ஹேஸுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் காஃப்கா; அசோகமித்திரனைப் படிப்பவர்கள் போர்ஹேஸைப் படிப்பது சிரமம் என்ற ரீதியிலும் தமிழவன் சொல்லியிருக்கிறார். ஒரு தளத்தில் இது உண்மை எனினும், போர்ஹேஸின் Secret Miracle ஐ அடிப்படையாகக் கொண்டு அசோகமித்திரனும் ஒரு கதை எழுதியிருப்பார் (ஏதோ ஒரு தினமணி தீபாவளி மலரில் வந்ததென்று நினைக்கிறேன்). அதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில், அந்தக் கதையிலேயே Secret Miracle பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். உண்மையில், 'யதார்த்தத்தை விண்டு காட்டிய' என்ற ரீதியிலேயே அசோகமித்திரனைப்பற்றிய பொதுப்படையான வாசகப் பார்வை முடிவுற்றுவிட்டதோ என்று தோன்றுகிறது (அதே எண்ணத்தில் நானும் பலகாலம் இருந்ததுண்டு என்றாலும்). அசோகமித்திரனின் 'ஒற்றன்' போல நகுலனின் கடைசி நாவலும் (சை, பெயர் மறந்துவிட்டேன்; கதாநாயகன் பெயர் ராஜசேகரன் என்று நினைவு), ஏமாற்றுகிறதா ஏமாற்றவில்லையா என்ற அளவிலேயே கடைசிவரை புதிராக இருந்தது... இந்தவிதமான Kafkaesque தன்மை பலமா பலவீனமா என்று தெரியவில்லை என்கிறார் தமிழவன்...

வாய்ப்பிருப்பின் தமிழவனின் குறிப்பைத் தீராநதியில் படித்துப் பார்க்கவும்.

Sunday, March 13, 2005

விரற்கடை

விரற்கடை

"இதோ வருகிறான் சொப்பனக்காரன்"
-ஆதியாகமம் 37:19

நாக்கில் படும் மாமிசம் நாக்கில் தங்கித் தவழ்ந்து கடிபட்டு உள்ளேசென்று மறையுமுன்பு, வெகு நேர்த்தியாக வெட்டப்பட்ட ஒன்றரை அங்குலத் துண்டுகளாக அப்பழுக்கற்ற பீங்கான் தட்டுக்களில் வைக்கப்பட்டிருக்கும். நாகரிகம் முன்னேறியிராத அக்காலங்களில் தட்டச்சு செய்யப்பட்ட தாள்கள் அதே நேர்த்தியுடன் பேனாக்கள் பென்சில்கள் அழிப்பான்கள் சிவப்பு நீலக் கரும் மைக்குடுவைகளுடன் அவற்றினருகில் அமர்ந்திருக்கும் மோனத்தில். வட்ட மேஜையைச்சுற்றி நின்றிருக்கும் தலைகளனத்தும் குவிந்து உருவாகும் கூம்பின் மத்தியின் அமர்ந்திருக்கும் யுதிஷ்டிரனின் நடுங்காக் கையிலிருக்கும் பிடிப்பான், சதையிழைகள் அலுங்காமல் மாமிசத்துண்டைப் பிடித்தெடுக்கும். மெதுவாகத் திறக்கும் யுதிஷ்டிரனின் வாய் அண்ணாரும்போது கூம்பின் உச்சிவழி வரும் வெளிச்சங்களுடன் சேர்ந்து மாமிசத்துண்டு உள்ளே போகும். சுழற்றிப்பார்க்கும் நாக்கின் வழுக்கும் பரப்பில் மாமிசத்துண்டு அதன்பிறகு தன் இழைகள் குறுக்காயிருக்குமாறு பற்களிடையில் அமர்ந்து கடிபடும். வெள்ளிக் காப்புவளையம் அசையும் யுதிஷ்டிரக் கைகள் தாள்களில் குறிப்பெழுதி மதிப்பிடும்.

அன்று அவனை அழைத்துச்செல்லக் காருடன் வந்திருந்தார்கள். யுதிஷ்டிரனது சட்டையின் ஒளிவீசும் நிறங்களின் வெளிச்சப்பிரதிபலிப்பு கண்களைத் தாக்கிக் கூசாமலிருக்கத் தங்கள் குழிந்த உள்ளங்கைகளைப் புருவங்களுக்கு மேலாக வைத்துக்கொண்டு அவனைப்பார்த்துச் சங்கடத்துடன் சிரித்தனர். தனிப்பட்ட வேலை அது. ஒழுங்குடன் எதையும் கற்றிராததால், அவர்களுடன் செல்வது சட்டபூர்வமானதா என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் தந்தையின் கார் சவாரி தப்பிப்போவதை விரும்பாத யுதிஷ்டிரனின் மகன் தொந்தரவு செய்தான். இப்படியாகத்தான் முன்பணம் பெற்றுக்கொண்டு ஒத்துக்கொண்டான் யுதிஷ்டிரன். ஒன்றரை அங்குலக் கறித்துண்டங்களின் சாறுகளின் ஆயிரக்கணக்கான உச்சங்களைப்பார்த்திருந்த அவனது ரோஜாநிற நாக்கு மூடிய உதடுகளுக்குப்பின் மெதுவாய் அசைந்தது, குத்தும் பெண்ணின் மெல்லிய முஷ்டியில் சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்குமிடையில்துருத்தும் கட்டைவிரல்போல்.

கார்சவாரி பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம். ஜன்னலோரமாக அமர்ந்துகொண்டு, குளிர்ந்த நாளொன்றுக்குப் பிரமாதமான உணவாயமையக்கூடிய ரோஜாநிறத் தசைகளாலான தெருவில் வேகமெடுத்த காரின் கண்ணாடி ஜன்னல்களுக்குவெளியில் நிறங்கள் சிதறிச் சீறின. திடீரென்று சோகவுணர்வு யுதிஷ்டிரனைப் பற்றிக்கொள்ள, உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் குனிந்து சக்கரங்களைப் பார்த்தான். சாதாரணமாகவேயிருந்து, சாலைக்கு நான்கு விரற்கடை மேலாக ஓடியபடி. திருப்தியடைந்தவனாக, இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். நீண்ட இமைமயிர்களுக்குக்கீழ் விழிக்கோளம் துடிப்புற்றது, தாங்கமுடியான பிரகாசங்கொண்ட நட்பான திரையில், களைத்த கண்கள்முன் அவாழ்க்கையின் சுழன்ற பாதைகள் விரிந்தன. சதைகளுடனான நெடும்பயணம் அது, தன் வேட்கைகொண்ட கணவனுடன் கசங்கிய படுக்கைவிரிப்பு வெளிச்சங்குறைந்த அறைகழித்த நாட்களைவிட அதிகமானவை அவற்றின் மென்மை, சாற்றுத்தன்மை, மணம், நிறங்களை அளந்துகழித்த காலங்கள். ஆயிர வாசனைகள், சுவைகளை, குரூரமான புன்னகைநிறங்களையென்று அனைத்தையும் மறந்திருந்தான். எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. தூக்கமற்ற இரவுகளில் பல்லோரு தருணங்களில் அவனை மிரட்டியிருக்கின்றன அவை. அவர்களது தனிப்பிரதேசத்துக்குள் சந்திரவொளி நுழைவதை விரும்பியிருக்கவில்லை அவனது கணவன். ஆயிரமாமிசத்துண்டங்களை வருடியிருந்த அவனது நாக்கு உணர்வற்றிருந்ததிப்போது... அதைக்குறித்துக் கூறவிரும்பவில்லை இப்போது. அவனது நாக்கின் தீர்ப்புக்கள் பழங்காலத்தைப்போலிருப்பதில்லையென்று புகார்கூறப்பட்டன. கருணைமேலீட்டால் அவனது சகாக்கள் அவனது திறமைக்கசிவை எங்கும் குறிப்பிடவில்லை. அதையும் உணர்ந்துகொண்ட அவனது நாக்கு புனிதச் சீற்றத்துடன் அக்கூற்றுக்களை எதிர்த்தது.

மூன்று அல்லது நான்குவயதுக் குழந்தையாக அவனிருந்தபோது தொடங்கியது அதனைத்தும். அவனது கிராமத்தின் பின்புறத்தில் ஒரு ஆறு எரிந்துபோயிருந்தது. அப்போது நீரற்றுக் களைத்திருந்த பழுப்புப் பொடிமணலில் விளையாடிக்கொண்டிருந்தபோது சப்பாத்திக்கள்ளிகள் அடர்ந்திருந்த புதர்களுக்குள் ஒரு பெரும் பிணத்தைக் கண்டுபிடித்தான். பார்க்கும்தூரம்வரை யாருமற்றிருக்க அதை வெறித்துக்கொண்டிருந்தான் வெகுநேரம். கொடூரமான அதிர்ச்சியொன்றில் விரிந்துறைந்த கண்களுடன் அனைத்துத் துவாரங்களிலும் வழிந்து உறைந்திருந்த ரத்தத்துடன் இறந்துபோயிருந்தது மிருகம். கரையோர மரங்களிடையில் சிதிலமடையும் மௌனமாகத் தன் கட்டமைப்புக்களுடன் பிடிவாதமான கண்களுடன் கோவில் சம்பவத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. யுதிஷ்டிரன் பிணத்தருகில் முழந்தாளிட்டு மெதுவாக அதை ஆராய்ந்தான். நிலைத்திருந்த இமைகளை மூடமுயல, காய்ந்த நீரோடைமணற்கோடுகளில் சரிந்துவந்த அனல் பிணத்தைத்தழுவி ரோமங்களை நிமிர்த்திச்சென்றது. அடர்த்தியான குத்துச்செடிக்குள் கல்கத்தி கிடந்தது; தன் சிறு கைகளைக்கொண்டு பிணத்தை அறுக்கத்தொடங்கினான். தன் சிறு கைகளால் பிணத்தின் தோலையுரித்துக்கொண்டு வெகுநேரம் மணலில் அங்கே செலவழித்தான், காய்ந்திருந்த ரத்தம் வழியமறுத்தது. பொழுதுசாயும் நேரம் அவனின்மை கிராமத்துள் நுழைந்தது. தேடல் தொடங்கியது, ஆழ்ந்து இருண்ட கிணறுகளுக்குள் லாந்தர்கள் சென்றன, ஒருசிலர் கோவிலில் தேடச்சென்றனர், ஆட்டுப்பட்டிகளுக்குள், மாட்டுவண்டிகளுக்குக்கீழ், மடத்தின் சிதிலமடைந்த மாடாக்குழிகளுக்குள், எட்டுத்திசைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் தூண்களின்பின்னென்று தேடினர். பின்பு, சரிந்து வழியும் காற்றின் சப்தத்தில் அதிர்ந்துகொண்டிருந்த மௌனத்தில் நீரோடையின் மணற்பரப்பில் நடுங்கும் லாந்தர் சுடருடன் அவனைக் கண்டனர், மிருகத்தின் முன்னங்காலொன்றை ஏற்கனவே அவன் தீர்த்திருக்க, மாமிசத்துண்டுகள் வழக்கம்போல் அவனது வாய்க்கடைவாயோரம் ஒட்டிக்கொண்டிருந்தன.

பின்பு, நீரோடைக்குத் தேடிச்சென்றவர்களிலொருவனாயிருந்த கிராமத்து முதியவனொருவன் சிறுவன்முன்பு மண்டியிட்டு அவனது பாதங்களைப் பற்றினான். ஒரு சிறு அசைவுமற்று முகத்தில் சிறுவன் நின்றிருந்தான் சலனமின்றி. குரல் நடுங்கியது. "ஓ..... தெரிகிறதெனக்கு". அசுரகர்ஜனைபோல் கடந்துபோனதொரு இடி. கிழவன், பின்பு பிணத்தைக் கிராமத்துக்கு எடுத்துச்செல்லுமாறு ஆட்களுக்கு ஆணையிட்டான்.

கிராமம் விழித்திருந்தது அந்த இரவில். படுக்கையிலிருந்து இழுத்துவரப்பட்ட சிறுவர்கள் ஹரிக்கேன் விளக்குப் பனிமூடிய கதிர்கள்நடுவில் காட்டுநடனமாடிக்கொண்டிருந்த மஞ்சள் நிழல்களின் மனிதர்களைத் தூக்கக்கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். கிராமத்து மத்தியிலிருந்த மேடையில் பொருத்தப்பட்டிருந்த பிணத்தைப்பார்க்க மக்கள் முண்டியடித்தனர். பிணத்தினருகில் நின்றிருந்த யுதிஷ்டிரனை வழிபாட்டுச் சல்லடைவழியர்கள் பார்த்தநேரம் அப்பிரதேசத்துக் காற்று களிப்புடனும் திகிலுடனும் ராட்சச அதிர்வுற்றது. சுற்றுப்புறத்தை மௌனமாகப் பார்த்து விழித்தவாறிருந்த குழந்தைகள் பிற்காலத்துக் குழந்தைகளின் உதடுகளுக்குள் அக் கொண்டாட்டத்துக் காற்றைத் தங்களுக்குள் மிச்சமிருப்பதை இறகொன்று இடம்பெயர்க்கும் காற்றுப்போலூதுவர். இரும்புப் பட்டியடித்த வண்டிச்சக்கரங்களூடாக நெரிசலான தெருக்களின் மனிதத்தாவர அடர்வுகளைப் பசுக்கள் வாலசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

கூர்மையான கண்களுடன் மேடையைப் பார்த்துக்கொண்டு அனைத்து கிராமமக்களும் நிற்க, யுதிஷ்டிரன் மேடைமேலே ஏறினான். பாதி மூடியிருந்தன அவனது கண்கள். குளிர்ந்த காற்றொன்று கூட்டத்தைக் கிழித்துச்செல்ல, பூக்கள்நிறைந்த முந்தானைகளால் குழந்தைகளின் தலையைமூடிப் பாதுகாத்த பெண்கள் அவனைக் கூர்ந்து கவனித்தனர். பாதங்களில் முன்பு வீழ்ந்த வயோதிகன் தன் நீள அகலங்கள்முழுவதும் அவன்முன் மறுபடித் தரையில்பரப்பி மணலின் சீரற்ற நுனிகளைத் தன்னுள் புதைத்தநேரம் ஹரிக்கேன்விளக்குகளின் பைசாச ஒளிகளூடே அவனைக் கருணையுடன் பார்த்தான் யுதிஷ்டிரன். வியர்த்திருந்த அவனது நெற்றியையும் புருவமுடிச்சுக்களையும் பெயர்க்கமுடியவில்லை எவராலும். பின்னால் பிணைந்த கைகளுடன் கல்குழம்புபுகுந்த உடல் இறுகத்தொடங்க இறுகத்தொடங்க அவன் பேசும்விதத்தை மெதுவாக உணர்ந்துகொண்டனர் கிராமமக்கள். அவனது உதடுகள் துடித்தன, நிதானமாக உருவெடுக்கத்தொடங்கிய நடுக்கம் அவனுள் பரவத்தொடங்க, உடல் அதிரத்தொடங்கியது. வியர்வைக்கசிவு, கால்சராயும் கசங்கிய சட்டையும் கழன்றன வெளுத்த உடல் அவிழ்ந்தது ரத்தமிழந்த தோலின்குறுக்காக நெளிந்திருந்த சவுக்கடித் தடங்களுடன்; கீழே உதிர்ந்தது கால்சராயின் ஆகாயநீலம். நிலைத்த பாவத்துடன் பதிந்திருந்த கிராமப்பார்வைகளின் நடுவில் யுதிஷ்டிரனின் உடலடைந்த நிலை முன்பெப்போதுமில்லாதபடி உலுக்கமடைந்தது. குரூரமான புன்னகையொன்றுதிர்த்த அவன் உதடுகளின் கீழிருந்து இறுகிய முஷ்டி துளைத்தேறியது காற்றில். தாளமுடியாமல் காற்றில் பரவிக்கொண்டிருந்த ஒத்திசைவைச் சிதைத்துக்கொண்டு வெடித்துச் சிதறின விளக்குகள். அவனைச்சுற்றிக் கசிந்த ஒளிவெள்ளத்தினூடாக நழுவி அவன்முன் பொருந்திய முகமூடியைக் கவனித்தது காலத்தைத் தூரங்களாலளக்கும் வித்தைக்காரனொருவன் மட்டுமே - அதன் இழைகளில் தன் நீண்ட நகங்களைநுழைத்து உதிர்க்கமுயன்றபோது மார்பைப் பிடித்துக்கொண்டதில் புழுதி கிளம்பியபின் வீழ்ந்து இறந்தான். அவனைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. இது தெரிந்திருக்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காமலிருக்கக்கூடிய யுதிஷ்டிரன் தன் இறுக்கமான இயக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான் சோர்வடையச் சாத்தியமற்ற கூட்டத்தின்மேலான பிடி தளர்ந்துவிடாமலிருக்குமாறு.

அவன் உறங்கிக்கொண்டிருக்க, குமைச்சலூட்டும் தெருக்களில் முழுவீச்சிலிருந்த முடிவற்ற பெருங்குழப்பத்தினுள் கரைந்துபோனது குறட்டை. சிகரெட் பற்றவைத்த ஒருவன் பின்பு அருகிலமர்ந்திருந்த யுதிஷ்டிரனின் முகத்தினுள் நேராகப் பார்க்கத் துணிச்சல்பெற்றுப் பின்பு சொன்னான்: "இன்னும் சாலைக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறதா பார்". தன் ஒளியனைத்தும் இழந்திருந்து அடிபட்ட பாதைகளின் மிச்சங்களாய்க் கண்களில் நிலைத்திருந்த திறந்த கருவிழிகளின்மேல் நேராகப் புகையை ஊதினான். மறுபடியும் கார் நெரிசலானெ தெருவொன்றுக்குள் பிரயாணித்துக்கொண்டிருக்க, கார்மனிதர்கள் பார்த்த நித்திரைமுகம் ஆபத்தற்றிருந்தது. தட்டைத்தன்மையொன்று தங்கிவிட்டிருந்தது அதில். திரும்பி அகன்று புன்னகைத்தான் டிரைவர். தெருக்கள் மிகவும் நெரிசலுடனும் திருகல்களுடனுமிருந்தன அதன் ஹாவர்ஷியன் சுழற்கால்வாய்கள் நகரத்தின் அடர்வுகளுக்குள் முடிவற்று நீண்டவாறு. தங்கள் இருப்பை உணர்த்தத்தொடங்கியிருந்தன வானுரசிக் கட்டிடங்களின் பாதங்களில் நடந்துகொண்டிருந்தவர்களின் கால்கள் கொன்ற தூரம் அக் கட்டிடங்களின் உயரங்களை வெகு எளிதில் துடைத்தெறியும். ஒருதரம் துப்பாக்கிமுனையில் இதுபோன்றதொரு நகரத்தில் அவனைக் கடத்திச்சென்றார்கள். அழுகிய மாமிச நாற்றம்வீசும் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுப் பின் அவன்முன் மாமிசத்துண்டங்கள் வைக்கப்பட்டன சுவையளக்க. இறந்த மிருகங்களின் சோகமான சதைகளால் சூழப்பட்ட அந்த அறையின் துர்நாற்றத்தினொரு கணத்தில் தன் நாக்கை இழந்தான். அப்போது தனது நாக்கில் வைத்த மாமிசத்துண்டமொன்று தனது நாக்கின் ஏதோவொரு பட்டியை உரித்தெடுத்தது என்றான் தனது நண்பர்களிடம், பிறிதொருநாள். கனக்கும் இதயத்துடன் கண்ணீர்விட்டு அழுதான். அவனது அந்தஸ்தும் சமூகநிலையும் இன்னும் சிறிதுநாட்களில் கேள்விக்குட்படுத்தப்படும். இறந்த சதைநிரம்பிய அந்த நரகத்தின் அறைக்குள்ளமர்ந்திருந்த யுதிஷ்டிரனின் நடுங்கும் கைகள்: உருகிவழிந்து கொதித்துப்பரவும் பயத்துடன் ஒரு துண்டத்தையெடுத்து அலுமினியத்தட்டிலிருந்து வாய்க்குச் செலுத்தின முடிவற்ற விரல்கள். வரிசைக்கிரமப்படி அவன் ஏதும் செய்திருக்கவே இல்லையென்று அவனுக்குணர்த்தியது எழுந்த உமிழ்நீர் அலை. பயப்பட ஏதுமில்லையென்று தேற்றிக்கொண்டான். கையில் பிடித்த தாளிலிருந்த அளவுகோல் வரிசைப்படித் தன் முடிவுகளைக் குறித்துக்கொள்ளத் தொடங்கினான். அந்தக் கணம் கலைந்து போனது.

அந்த நிகழ்வைப்பற்றி அதன்பிறகு கிராமத்தில் யாரும் அவ்வளவாகப் பேசவில்லை. தங்கள் மூளைகளின் புழக்கமற்ற மூலைகளில் அவற்றை ஒதுக்கினர். ஒற்றையிரவில் அதே மேடையில் கம்பீரமான நாற்காலியிலமர்ந்த சிறுவன் அவனது வெளிப்பாட்டில் மூச்சடைத்துப்போன மக்கள் நாற்காலியில் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவாறு. முடிவற்று நீண்டது இரவு. பின்பொழுதொன்றில் அவனது இமைகள் தாழத்தொடங்கி தூக்கம் அவனைத் தழுவத்தொடங்குவதை அவர்கள் கவனித்ததும் கூட்டத்தில் சிறிதாக எழுந்தன சலசலப்புக்கள். சிறிது தெளிவுற்றுத் தூக்கம்கலைத்த அவன் கண்கள் கூட்டத்தின் அகன்ற வாயை அடைத்தன. கம்பீரமான நாற்காலியில் பின்பு அவனது தூக்கம் ஆதிக்கம்பெற்றபோது அதனடுத்து நிகழ்ந்தவைகளை அவனது கூர்த்த பார்வைகள் கட்டுப்படுத்தவில்லை. மேடைமேல் ஏறினார்கள், யுதிஷ்டிரனின் கைகளைப்பிடித்திழுத்து தெருவுக்குக் கொண்டுசென்று உதைத்தார்கள். தன் பார்வைகளில் அவர்களை உறையவைக்கமுயன்றான் யுதிஷ்டிரன்.

பளாரென்று ஒருவன் யுதிஷ்டிரனைச் செவிட்டிலறைந்தான். "மூத்தவர்களை முறைக்காதே".

கால்சராயையும் சட்டையையும் அவன் முகத்தில் விட்டெறிந்து உறுமினார்கள். "ஒழிந்து போ. உன் பெற்றோர் செத்துவிட்டார்கள்".

அகன்றான். அதோர் இரவின் தனியான பயணம், கிராமத்தின் எல்லையை அவன் கடந்தபின்புதான் சூரியன் எழுந்தது உதயம். கிராமத்தின் வரலாற்று நினைவுகளிலிருந்து அவன் பெயர் அழித்தெறியப்படவில்லை, ஆனால் உள்ளும் வெளியும் அவனை வெறுத்தனர் அவனது சமகாலத்தவர். அவன் தனியாக நடந்தான், உடன்வர யத்தனித்த யாவரையும் மறுத்துக்கொண்டு; அவனது சகபயணிகள் ஒன்று அவனைப் பின் விட்டுச்சென்றார்கள் அல்லது மணல்நிரம்பிய நீண்ட பாதைகளில் அவனைப்பற்றி மறந்துசென்றார்கள்.

கனவிலிருந்து தன்னை உலுக்கியெடுத்தான், உணர்வுகளின் குழப்பச்சகதி சூழ்ந்தது.

எப்போதும்போல், கனவைப்பற்றிய எந்தக் கேள்விகளும், அர்த்தப்பெயர்ப்புக்களும், அவற்றின் முக்கியத்துவமும் உபயோகத்தன்மையும் கேட்கப்படாது. கனவு கனவாக விட்டுவிடப்படவேண்டும், கனவு நிஜமாக விட்டுவிடப்படவேண்டும், நிஜம் கனவாக, நிஜம் நிஜமாக விட்டுவிடப்படவேண்டும், கனவு நிஜமாக விட்டுவிடப்படவேண்டும். நெரிசலான தெருக்களூடாகக் கார் சீறிக்கொண்டிருந்தது, அதே தெருக்களூடாகத் திரும்பத்திரும்பப் பயணித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள், எந்தவொரு ஆட்டத்திலும் களைப்படையாத வார்த்தைகள் போல். முன்சீட்டில் அமர்ந்திருந்தவன் ஒரு கூர்மையான, எடைமிகுந்த குத்துவாளை உருவியெடுத்து பட்டுத்துணியால் துடைத்தான். அதே இரவில் கிராமத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த மிருகப்பிணம், விவசாயநிலங்களேதும் அருகிலற்ற ஊரின் ஒதுக்குப்புறமொன்றில் புதைக்கப்பட்டது.

இப்போதுவரை யுதிஷ்டிரனின் தூக்கம் தடைப்படவில்லை. நகரத்தின் இரவுவிளக்குகள் ஒளிவீசத்தொடங்கியிருந்தன. தங்களுக்கென்றொரு இதயம்கொண்ட மனிதர்களை அச்சுறுத்தத்தயங்காத இரவின் கவர்ச்சிகரமான குரூரங்களின் அசுரத்துள் மூழ்கிக்கொண்டிருந்தது சாயங்காலம். தூய வெள்ளை வேட்டியில் சொருகிய குத்துவாளுடையவனருகில் இறந்த நாக்குடனமர்ந்திருந்த யுதிஷ்டிரனுடன், உள்ளே பரவியிருந்த முடிவற்ற நிச்சயமின்மையுடன், புலனுக்குப் பிடிபடா இரண்டு பாகங்களாகச் சாலையைக் கிழித்தபடி விரைந்துகொண்டிருந்தது கார், சோதிக்கப்படவேண்டிய நல்ல அல்லது அழுகிய சதைக்கோளங்கள்நிரம்பிய தொட்டிகளில் மூழ்கிய பழக்கமற்ற இடமொன்றுக்கு. இன்னும் சாலைக்கு நான்கு விரற்கடை மேலாக ஓடிக்கொண்டிருந்தது கார்; அதைப் பார்ப்பதொரு அற்புதமான விஷயம்.

சென்ற பதிவு டுமீல்!!

நேற்று ஒரு பதிவைப் போட முயற்சித்துக்கொண்டிருந்தேன். பலமுறை முயன்றும் தண்ணிகாட்டியதால் பொறுமையிழந்து எழுந்து போய்விட்டேன்... இன்று காலை வந்து பார்த்தால், முந்தைய 'நெப்போலியன்' பதிவையும் புதிதாக இடமுயன்ற ஒரு பதிவையும் involuntary anastamosis செய்து ஒரு இரண்டுங்கெட்டான் hybrid பதிவு இருந்தது. அதைக் கத்திரித்து எறிந்தாயிற்று. பெரிய பதிவென்பதால் ப்ளாகர் மூச்சுத்திணறிவிட்டதென்று நினைக்கிறேன். ஒருவேளை அதை இடுவதில் கடவுளுக்கே இஷ்டமில்லையோ என்னமோ ;-)!! ப்ளாகர், வரவர, நழுவிக்கொண்டேயிருக்கும் கிழவனின் கோமணம் போல ஆகிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது. மறுபடி முயன்று பார்க்கிறேன். சே!

Saturday, March 12, 2005

நெப்போலியன்

நெப்போலியன்
-மிரொஸ்லாவ் ஹோலுப்

குழந்தைகளே
நெப்போலியன் போனபார்ட் எப்போது பிறந்தார்
ஆசிரியர் கேட்டார்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு என்றார்கள் சிறுவர்கள்
ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு என்றார்கள் சிறுவர்கள்
யாருக்கும் தெரியவில்லை

குழந்தைகளே, என்னசெய்தார்
நெப்போலியன் போனபார்ட்
என்று ஆசிரியர் கேட்டார்

ஒரு போரில் வென்றார் என்றார்கள் சிறுவர்கள்
ஒரு போரில் தோற்றார் என்றார் சிறுவர்கள்
யாருக்கும் தெரியவில்லை

என் கசாப்புக் கடைக்காரனிடம் ஒரு நாய் இருந்தது
என்றான் ஃப்ராங்க்கிஷெக்
அதன் பெயர் நெப்போலியன்
அதை அவன் அடிக்கடி அடிப்பான்
ஒரு வருடம் முன்பு
அந்த நாய் இறந்தது
பட்டினியால்

இப்போது சிறுவர்களெல்லாம் வருத்தப்பட்டார்கள்
நெப்போலியனுக்காக

தமிழில்: சில வருடங்களுக்கு முன்பு வெளியான "யாதுமாகி" பத்திரிகையின் ஒரு இதழில் படித்துக் குறித்துவைத்தது. மொழிபெயர்த்தது எவரென நினைவில்லை...

Czechகிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவத்தில்:
NAPOLEON (Miroslav Holub)

Children, when was
Napoleon Bonaparte born,
asks teacher.

A thousand years ago, the children say.
A hundred years ago, the children say.
Last year, the children say.
No-one knows.

Children, what did
Napoleon Bonaparte do?
asks teacher.

Won a war, the children say
Lost a war, the children say
No one knows.

Our butcher had a dog
Called Napoleon,
Says Frankisek
The butcher used to beat him and the dog died
of hunger
a year ago.

And all the children are now sorry
for Napoleon.