Saturday, January 29, 2005

சவுக்கு

சவுக்கு
-மாண்ட்ரீஸர்


படம் நன்றி: MC Escher Official website

என் பெயரைச் சொல்லிக்கொள்ளக் கூச்சமாக இருக்கிறது. உண்மையில், என்னை நானே விளக்கிக்கொள்வதும் எவ்வளவு சிரமப்பட்டுப் பின்வருபவற்றைச் சொல்கிறேன் என்பதையும் போகப்போகப் புரிந்துகொள்வீர்கள். என்னையும் என் உற்றார் உறவினர் கோடிக்கணக்கானவர்களையும் கண்ணாடி ஸ்லைடில் இட்டு, மைக்ராஸ்கோப்புக்குக் கீழாக வைத்து, நாங்கள் எவ்வளவுபேர் உயிரோடு இருக்கிறோம், எத்தனைபேர் செத்தோம், எங்களது நகர்வும் சுழற்சியும் எப்படி இருக்கிறதென்று பார்த்து, எங்களது தரம் எப்படியிருக்கிறதென்று தீர்மானிப்பார்கள். கண்ணாடி ஸ்லைடில் வெறிகொண்டவர்கள்போல அலைவோம், உங்களுக்கு அது புரியாது. கரையைக் கண்டாலும் இறங்கமுடியாத கடல் எங்களுடையது. அது எங்களைக் கட்டுப்படுத்தும். கூட்டம் கூட்டமாக இடித்துக்கொண்டும் கதறிக்கொண்டும் மூச்சுத்திணறலுடன் கடலில் நீந்தி அலைவோம். எங்கள் அனைவரையும் ஒரே பெயரைக்கொண்டுதான் மனிதர்கள் அழைக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் என்ன அவமானமென்றால், என் வாழ்வு பெரும்பாலும் கறுப்பு உடல்களுக்குள் இருந்துவிட்டிருந்தது. வெளியே மனிதர்களனைவரும், நிறங்கள் ஒன்றே உள்ளே என்கிறார்கள் என்று தொல்கதைகள் உள்ளன எங்கள் சமுதாயத்தில், ஆனால் அவர்களுக்கென்ன தெரியும் உள்ளே இருக்கிறதென்று. வாழ்க்கை முழுவதும் வெள்ளை உடல்களுக்குள் இருக்கவும் நுழைந்துசெல்லவுமே நானும், இன்னும் பலரும் விரும்பியிருக்கிறோம் - நாங்கள் வாழும் இடங்கள் கறுத்தவை, அதைக்குறித்து நான் அடைந்த அவமானம் சொல்லி மாளாது. வெளியுலகிலிருந்து வரும் வெள்ளை உடல்களின் மேன்மை பற்றிய கதைகளைப் பரப்பிக்கொண்டிருந்த எங்கள் சமுதாயக் கலகக்காரர்களுடன்தான் நான் எப்போதும் இருந்தேன். நான் சொல்கிறேன், எங்கள் உலகில் அனைத்தும் கறுத்தவை, எங்களை வாழ்விக்கும் நதிகள் உட்பட. நான் வாழ்ந்த, கடவுள் என்று எங்களால் அழைக்கப்பட்ட கறுத்த மனிதன் நேற்றுத்தான் கொலைசெய்யப்பட்டான். அவனுக்குள்ளிருந்து நாங்கள் வெளியே வரப் பிரயாணத்துக்குத் தயார் செய்துகொண்டிருக்கும்போதுதான் அவன் கொலைசெய்யப்பட்டானென்று நினைக்கிறேன். நானும் குடும்பத்தினரும் வெளியே வந்துகொண்டிருந்தோம். இந்தப் பிரயாணத்தைப்பற்றியும் ஏராளமான கதைகள் உள்ளன. போகும் பாதைகள், செய்யவேண்டிய விஷயங்கள், தங்கவேண்டிய இடங்கள், தாகந்தீர்த்துக்கொள்ளவேண்டிய ஸ்தலங்கள், அண்டத்தைச் சந்திக்கும்போது தயவுதாட்சண்யம் பாராமல் உற்றார் உறவினரைத் தாறுமாறாகக் கொலைசெய்து அண்டத்தைத் துளைக்கவேண்டிய விதி - அனைத்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. எங்களது வாழ்க்கைகள் கிட்டத்தட்ட நாகரீகமடையாத மிருகங்களின் வாழ்க்கைகள் என்று பிரயாணிக்காமலே இறந்துவிட்ட எங்கள் வம்சாவழியின் முதியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அண்டத்தைத் துளைப்பதற்காக உறவினர்களைக் கொலைசெய்ய நேர்வதைப்பற்றி பலருக்கு ஆழ்ந்த அருவருப்பு இருப்பினும், உடல்களுக்குள் தங்கி உபயோகமின்றி இறப்பதா அல்லது பிரயாணம் சென்று இரும்புக் கற்றாழைகளைக்கொண்டு எங்களுக்குள் தாக்கிக் கொலைசெய்துகொள்வதா என்பதைத் தீர்மானிக்கும் விதி எங்களது கடவுளான மனிதனின் விருப்பத்தின்படியே இருந்தது. அவனே அனைத்தையும் தீர்மானித்தான். அவனது சற்று வேறுபட்ட வடிவத்தினுள் - (பெண் என்கிறார்கள் அவர்களை) நாங்கள் செல்லும்போது எங்கள் புலன்கள் சிதைந்துவிடுகின்றன, எங்களது கடமையை நிறைவேற்ற நாங்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு கொன்றே தீரவேண்டுமென்ற மீளமுடியாத விதி எங்களை ஆட்கொள்கிறது. எங்கள் சமுதாயத்தின் பிரயாணங்கள் பலதரப்பட்டவை - சிலசமயம் பாதையின் குறுக்காக விரிந்து பரந்திருக்கும் வேற்றுக்கிரக இரும்புத்திரைகளில் மோதி இறந்த, பிரிந்து வழிவிடாத செங்கடலில் மூச்சுத்திணறி உயிரிழந்த (எங்களுக்குக் குரல்கள் கேட்குமென்பதால், எங்கள் உலகத்துக்கு வெளியிலிருந்து வந்த கதைகளையும் கேட்டிருக்கிறோம்), தேவையற்ற நேரங்களில் பிரயாணம்போய் காலாவதியாகி இறந்த மூதாதையர் என்று கணக்கற்றவர்களை இழந்திருக்கிறோம்.

வேறு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். நேற்று நாங்கள் எங்கள் கடவுளிடமிருந்து வெளிவந்தபோது நிலையிழந்தோம் - எங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பாதை இல்லை அது. எங்கள் படை 'அந்தரத்தில்' பாய்ந்துகொண்டிருந்திருக்கக்கூடுமென்று இப்போது எங்களை மைக்ராஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன் சொல்கிறான். நாங்கள் 'பெண்'ணின்மேல் வீழ்ந்தோம். வீழ்ந்த இடம் குறித்தும் எங்களுக்கு எதுவும் தெரியாததால், என்ன செய்வதென்ற நிச்சயமற்று அங்கேயே கிடந்தோம். நானும் என் நண்பர்களும் அண்ணாந்து பார்த்தோம். எங்களது கடவுளை வேறு சில கடவுள்கள் இழுத்தனர். இழுத்த கடவுள்களும் பெண்ணும் ஒரேபோலிருந்தனர். இழுத்த கடவுள்களில் ஒருவன், எனது வால் போல இருந்த ஒரு ஆயுதத்தை வேகமாக எங்களது கடவுளின் கழுத்தில் பாய்ச்சினான். எங்கள் கடவுள் தடுமாறித் தரையில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்துகொண்டிருந்ததை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். என் நண்பனொருவன், இந்த வீழ்ச்சி நேரம் மனிதர்களுக்கு வேறுபடும் என்றான். அதை எப்படி விவரிப்பது. எங்களது கடவுள் விழத்தொடங்கினான் - என் பார்வையை ஒரு புள்ளியில் நிறுத்தினெனென்றால், கடவுளின் வீழ்ச்சி முழுவதும் கறுப்பாக இருந்தது - அதாவது, கடவுள் விழுந்துகொண்டே இருந்ததால், என் பார்வையின் வீச்சுக்குள் அந்த வீழ்ச்சியை அடக்கமுடியாததால், இப்படித் தெளிவின்றிச் சித்தரிக்கவேண்டியதாயிருக்கிறது. இரண்டு வருடங்கள் கழித்து கருமை அகன்று, மேலும் சிலவருடங்கள் செலவழித்துப் பார்வையைத் திருப்பியதில் கீழே விழுந்துகிடந்த கடவுளைப் பார்க்கமுடிந்தது. வேறு கடவுள்களின் வால்க்கருவிகள் கடவுளின் உடலில் பலமுறை பதிந்தன. 'பெண்'ணை வேறு கடவுள்கள் தாக்கி, கூச்சலிட்டு, இழுத்துக்கொண்டு சென்றனர். 'பெண்' கூட ஒரு கடவுளாகத்தானிருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அண்டங்கள் அப்படித்தான் அவர்களை விளிக்கின்றன என்றும் எங்கள் சமுதாயத்தில் கூற்றுக்கள் இருக்கின்றன.

நாங்கள் "பெண்"ணுடன் பயணித்துக்கொண்டிருந்தோம். குரல்களையே வெகுகாலம் கேட்டுக்கொண்டிருந்தோம். மேலும் சில கடவுள்களைப் பார்க்கையில் பல யுகங்கள் கடந்துவிட்டிருந்தன. "இதைப் பார்" என்றான் ஒரு கடவுள், ஆச்சரியப்பட்ட குரலில். "எவ்வளவு தெள்ளத் தெளிவாக வடிவங்குலையாமல் நின்றிருக்கிறது பார்! எதுவும் இதில் சாகாமல் இருந்தால்கூட ஆச்சரியப்படமாட்டேன்" என்றான் ஒரு கடவுள். எங்கள் கடலைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறானென்று விளங்கிக்கொள்ளச் சில கணங்களே ஆயின. பின்பு பல கடவுள்கள் பல சந்தர்ப்பங்களில் எங்களைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். "வெளியே வைத்துவிட்டுப் போய்விட்டேன், அடுத்த நாள் வந்து பார்த்தாலும் சாகாமல் நிறைய இன்னும் நீந்திக்கொண்டிருக்கின்றன" என்றார்கள். அதன்பிறகுதான் நான் கடலிலிருந்து வெளிவந்து புது வாழ்க்கையைத் தொடங்கியது. வேறொரு கடவுள் என்னை எடுத்து வளர்த்தான். இன்னும் தாக்குப் பிடித்துக்கொண்டு உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருந்த என் நண்பர்களிடமும் சமுதாயத்திடமிருந்தும், நான் வாழ்ந்த கடலையும் அதில் கலந்துள்ள எண்ணற்ற ஜீவநதிகளிடமிருந்தும் கண்ணீருடன் விடைபெற்றேன்.

நான் உலகத்தைத் தெரிந்துகொள்ளத் தொடங்கினேன். கடவுள் என்னை ரகசியமாகக் கடத்தி வந்திருந்தார். அவ்வளவு பேரிலிருந்து நான் ஒருவன் காணாமற்போயிருப்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாதென்று நினைக்கிறேன். என்னை வேறு உபயோகத்துக்குக் கடவுள் உபயோகப்படுத்திக்கொண்டதால், என் பழம் வாழ்வுக்கு நான் திரும்பவேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. தேவைப்படும் அளவு எனக்கு உணவளித்தார் கடவுள். நான் அளவுக்கதிகமாக வளரத்தொடங்கினேன் - இப்போதெல்லாம் சில வினாடிகளில் கடவுளைத் தலைமுதல் கால்வரை பார்த்துவிடமுடிகிறது. எப்போதும் கடவுளின் உடலில் ஒட்டியே இருக்கிறேன் நான். பெரும்பாலும் அவர் என்னைக் கழுத்தில் சுற்றியே வைத்திருக்கிறார். என் தலை அவரது கழுத்தின் பின்புறம் தொங்கிக்கொண்டிருப்பின் அவரது பின்புற உலகத்தை மட்டும் பார்க்கமுடியும், முன்புறம் தொங்கிக்கொண்டிருப்பின் முன்புற உலகத்தைமட்டும் பார்க்கமுடியும். இதுகுறித்து நான் அவரிடம் எதுவும் சொன்னதில்லை. உண்மையில், அவரது மொழியையும் வேறு சில மொழிகளையும் இதற்குள் நான் அவர் பேச்சுக்கள் மூலமும், பிற கடவுள்கள் மூலமாகவும், அவர் படித்த புத்தகங்கள் பார்த்த திரைப்படங்களைக்கொண்டு கற்றுக்கொண்டுவிட்டிருந்தாலும், மொழியைக் கற்றுக்கொண்டேன் என்ற விஷயத்தை அவரிடமிருந்து மறைத்துவிட்டிருந்தேன். என்னை ஒருநாள் ஆதுரமாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார். "உன் பெயரை மாற்றப்போகிறேன். இன்றிலிருந்து உன் பெயர் சவுக்கு" என்றார்.

சவுக்கு. சவுக்கு. என் புதுப் பெயரை கடவுளுக்குக் கேட்டுவிடாமல் பலமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அதன் ஒலி நன்றாக இருந்தது. என் வடிவத்தைச் சரியாகச் சித்தரிப்பது போலப் பட்டது. அகலமாகத் தொடங்கி ஒடுங்கிப் பின் கூர்மையாக முடியும் என் வடிவம் போலவே அந்த ஒலியும் இருந்ததால், அதை எத்தனை தடவை திரும்பத்திரும்ப உச்சரித்து உச்சரித்து ஆனந்தப்பட்டேன் என்று தெரியாது. சவுக்கு. ச-வுக்கு. ச-வு-க்கு. சவுக்-கு, ச-வுக்-கு. நான்கே எழுத்துக்களாக இருப்பதால், இதைப் படிக்கும் நீங்கள் நான் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவீர்களென்று தெரியும், இருந்தாலும், நான் சொல்வதை நம்பிக்கொண்டும், என் மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டும் இருக்கிறீர்களென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ச-வுக்-கு என்பது எழுத்து ரீதியாக அவ்வளவு நேர்த்தியற்று இருப்பதுபோலத் தோன்றினும், அதை உச்சரித்துப் பார்க்கும்போது, என்னைக் கச்சிதமாகப் போர்த்தும் ஒரு உறை போலப் படுகிறது அந்த ஒலி. அந்த ஒலியைக்கொண்டு இரவில் குளிரடிக்கும் போதெல்லாம் என்னைப் போர்த்திக்கொண்டு திரிந்தேன். அவர் கழுத்தைச் சுற்றியே இருப்பதால், ஒலிகொண்டு போர்த்துவது சற்றுச் சிரமமாகவே இருந்தது. என்ன செய்வது. எல்லாம் என் நேரம்.

அடுத்த சில வாரங்கள் பித்துப் பிடித்தாற்போல என் பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டு திரிந்தேன். சிலசமயங்களில் பலமாகச் சொல்லிவிட்டிருப்பேன் போலிருக்கிறது - கடவுள் (அவன் பெயர் கறுப்பன்) திரும்பிப் புதிராகப் பார்ப்பதைக்கண்டு சுதாரித்து, பின் எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன். அதுவும் ஒருவகையில் பிடித்துப்போனதால், அடிக்கடி என் பெயரை உரக்கக் கூவ ஆரம்பித்தேன். கறுப்பன் மெதுவாகப் பொறுமையிழக்கத் தொடங்கினான் என்று நினைக்கிறேன். அவன் கழுத்தில் இருப்பதும் எனக்கு வரவரப் பிடிக்காமல் போய்விட்டது என்பதால், தினமும் தொடர்ந்து கூவத்தொடங்கினேன்! என்னிடமிருந்து அப்படி ஒரு கூச்சல் வரமுடியுமென்பதை கறுப்பன் போன்ற மடையர்களால் ஊகிக்க முடியுமா என்ன? நான் நினைத்தது சரியாகப் போயிற்று. பொதுவில், அவனை ஒரு மனநிலை பிறழ்ந்தவன் என்று மற்றவர்கள் கருதினார்களென முன்பே அறிந்திருந்தேன். தன் பைத்தியக்காரத்தன வெறியில் என்னை எங்கேயாவது எறிந்துவிடுவானோ என்று அஞ்சினாலும், சமாளித்துவிட முடியுமென்றே நம்பிக்கையிருந்தது. தொடர்ந்த என் கூச்சல்களின் இம்சை தாளாமல், சிறிதுநாட்களாகத் தன் கழுத்திலிருந்து என்னைக் கழற்றி மேஜைமீது வைக்கவோ, ஆணியில் தொங்கவிடவோ செய்துகொண்டிருந்தான். மேஜை பரவாயில்லை. ஆணி தான் எரிச்சல். மேஜையில் பேனாக்களும் பென்சில்களும் காகிதங்களும் சிகரெட் பாக்கெட்டுகளும் ஏகப்பட்ட சில்லறைகளும் பெரிய கண்ணாடியொன்றும் அழுக்குத் துணிகளும் கிடந்தன. துணிகளின் நாற்றம் சகிக்கமுடியாததாயிருந்தது. ஒருமுறை அவன் என்னை மேஜையில் வைத்தவிதத்தில் என் தலை அவனது கசங்கிக்கிடந்த சட்டையின் நனைந்த கஷ்கத்தில் விழுந்துவிட்டது. இரண்டுமணி நேரம் கழித்து அவன் மறுபடி என்னை எடுக்கும்வரையில் பல்லைக் கடித்துக்கொண்டு வியர்வை நாற்றத்தைச் சகித்துக்கொண்டிருந்தேன். தரித்திரம் பிடித்தவன். வரவர அவனது நடவடிக்கைகள் ஏதும் சரியில்லை.

ஒருமுறை என்னை ஆணியில் தொங்கவிட்டிருந்தபோது ஏதோ காகிதத்தில் எழுதிக்கொண்டிருந்தான். ஆணியில் தொங்கிக்கொண்டு என்ன எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. காதல் கடிதம். அட என்று நினைத்துக்கொண்டேன். கறுப்பன் மேல் மெலிதாக எனக்கு இரக்கம் பிறந்தது. சற்று நாட்களுக்குமுன்னால் தன் டையைத் தேடிக் கிடைக்காமல் போனதால் என்னை டை போலத் தனது சட்டையில் கட்டி அழகுபார்த்துக்கொண்டிருந்தான். அப்போதே நினைத்தேன் மறை கழன்றுவிட்டதென்று. என்னதான் இருந்தாலும் டைகளும் என்ன அழகு. எத்தனை நிறங்கள். என்னைவேறு இவன் பழுப்பு நிறத்தில் வைத்திருந்தான். வெள்ளைநிறச் சாயம் பூசு என்று கேட்டுவிடுவேன், பயந்துபோய் எங்காவது என்னைப் பிறகு எறிந்துவிடுவான். குப்பைத்தொட்டியிலெல்லாம் போட்டுவிட்டால் என்ன செய்வது நான். காதல் கடிதம்: எட்டிப் பார்த்தேன். மிகச் சாதாரணமாக இருந்தது. சலித்துக்கொண்டேன். இவன் படித்த எத்தனை புத்தகங்களை இவனது தொண்டைக்கருகில் என் தலை தொங்கிக்கொண்டிருந்தபோது படித்திருக்கிறேன் - இப்படித் திராபையாக எழுதுகிறானே என்று நினைத்துக்கொண்டேன். சற்றுநேரம் கழிந்தது. அ........க............ன்..............ற நாற்காலியில் அவனது அ...................க........................ன்.................................ற உடம்பு பிதுங்கி வழிந்திருந்தது. முன்னூற்று எண்பது கிலோ எடை. அவன் கழுத்தில் சுற்றிக்கொண்டு வெகுநாள் வாழ்ந்திருக்கிறேனென்றால் நானும் எவ்வளவு நீளமாக வளர்ந்திருக்கவேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு எழுத்து எழுதிமுடித்ததும் மூச்சுவாங்கினான். எரிச்சல் ததும்பியது. சரி போ என்று கவனிப்பதை விட்டுவிட்டேன். சற்று நேரம் கழித்துப் பார்த்தால் கறுப்பன் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தான். மூச்சு பயங்கரமாக இரைத்தது. காகிதத்தைப் பார்த்தேன். அன்புள்ள அது இது என்பதைத் தாண்டி வாக்கியம் முடிவடையாமல் நின்றிருந்தது. அவசரமாக சுதர்சனனைத் தொலைபேசியில் அழைத்தான்.

சுதர்சனன் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான். வெகு நேரம் கறுப்பன் தனது நிலையை விளக்க முயன்றும் முடியவில்லை, அவன் சொன்னதை வைத்து சுதர்சனனாலும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காகிதத்தையும் கறுப்பனின் உளறல்களையும் சுதர்சனனின் யூகங்களையும் கேட்டு, பார்த்து, சற்றுநேரம் கழித்து சுதர்சனன் கண்டுபிடித்த விஷயத்தை முன்பே கண்டுபிடித்துவிட்டிருந்தேன். பிரச்னையின்றிக் கடிதம் எழுதத்தொடங்கிய கறுப்பனுக்கு, காதல் என்று எழுதநினைக்கையில் 'க' என்ற எழுத்து நினைவிலிருந்து தப்பிவிட்டிருந்தது. அதனால்தான் சுதர்சனன் வரும்வரை தன் அறையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் வெறிகொண்டதுபோலப் புரட்டிக்கொண்டும் பாடல்களைக் கேட்டுக்கொண்டும், தன் கையைக்கொண்டு பேனாவைப் பிடித்து எழுதமுயன்றுகொண்டும், கணிப்பொறி விசைகளை வெறித்துக்கொண்டும் நிலையின்றி அறைக்குள் ஜூரவேகத்தில் அலைந்துகொண்டுமிருந்தான் போல. க என்று நான் சுவரிலிருந்து கூவினேன். சுதர்சனன் ஆச்சரியப்பட்டு சுற்றுமுற்றும் பார்த்து பின் கறுப்பனிடம் திரும்பி "விளையாடாதே" என்றான். இது ஆபத்தாக முடிந்துவிடும் போலிருக்கிறதே என்று அதற்குமேல் எதுவும் சொல்லாமல், இயலாமையுடன் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். "க, கறுப்பா. உன் பெயரிலேயே இருக்கிறது. க. அது ஒரு எழுத்து. அதை நீ மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். இதோ கொஞ்சம் தண்ணீர் குடி. க. க. சொல்லு, க. எழுது, இதோ பேனாவைப் பிடி. க. எழுது. எழுதுடா தடியா. க. க. க. க. க. க....."

சுதர்சனனுக்கு நிலைமை விளங்கவில்லை. அவசர அவசரமாகச் சிலரைத் தொலைபேசியில் அழைத்தான். ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த என் மனம் கலங்கியது. என்னை எடுத்துக் கழுத்தில் மாட்டு கறுப்பா, உன்னைத் தழுவிக்கொள்கிறேன், எப்படியாவது நீ இழந்த எழுத்தை உனக்குள் புகுத்திவிடுகிறேன் என்று இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தேன். சவுக்கு வாழ்வின் முதல் முறையாக என்னை நானே அசைத்துக்கொள்ள முயன்றேன். என் வால், என் தலைப் பிடி, என் உடல் - அசையுங்கள் அசையுங்கள் என்று கதறினேன். எனக்கு விதிக்கப்பட்ட அசைவின்மையின் குரூரக் கருணையின்மை அந்தக் கணங்களில் ஊழிப்பிரளயமாய்த் தாக்கி அழித்தது என்னை. கையைப்பிடித்து எழுதச்செய்தும், ககளைக் காட்டியும், ஒலிக்கச்செய்தும் சுதர்சனன் தானே எழுதிக்காட்டியும் கணிப்பொறியில் அடித்துக்காட்டியும் கறுப்பனுள் ஏறவில்லை. அவனது பெருத்த உடல் குலுங்க, கறுப்பன், திக்கும் மனதுடன், உறைந்துவிட்ட மொழியுடன், மூச்சுத்திணறலுடன் அறுத்த மரமாய்த் தரையில் சாய்ந்தான். அவனது கண்கள் அகன்றன, கன்னம் சிவப்பானது, தோளைவிட மூன்று அடிகள் அகலமான அவனது இடுப்பின் ஊளைச்சதைகள் அதிர்ந்து அதிர்ந்து வேதனையுடன் தரையில் புரண்டன. குழந்தை போன்று தடித்த தனது மெல்லிய விரல்களாலும் உள்ளங்கையாலும் தரையை அறைந்துகொண்டே தொடர்ந்து அழுதான் கறுப்பன். அறையும் ஒவ்வொரு கணமும் அவன் விரல்கள் காற்றில் எழுதமுயன்று மறுபடி வெறுமைக்குள் வீழ்ந்து கதறின. சுதர்சனன் தன் கைத்தொலைபேசியை வெறிகொண்டதுபோல் சுவற்றில் எறிந்து நொறுக்கினான். கழுத்துச்சதை பிதுங்கி வழிய, திறந்த கறுப்பனின் வாய், தொலைந்த எழுத்தின் காலடியில் வீழ்ந்து, அகலமாகத் திறந்து கரையில் விழுந்த மீன் போலத் திறந்து மூடித் திறந்து மூடித் துடித்தது.

அறைக்குள் பலர் வந்துவிட்டிருந்தார்கள். ராணி சொன்னாள்: "ஊருக்கு வெளியே மலைமேல் க முளைத்திருக்கிறது. இங்கே வருமுன் யாரோ எனக்குச் சொன்னார்கள். அருகில் போக பெரும்பாலானோர் பயப்படுகிறார்கள்".

அவர்கள் அனைவரும் சேர்ந்து மிகுந்த சிரமத்துக்கிடையில் கறுப்பனைத் தூக்கிப் பெரும் தள்ளுவண்டியொன்றில் கிடத்தினார்கள். அவனை நகர்த்துமுன் கறுப்பன் என்னைநோக்கிக் கைநீட்டினான். கடவுளே என்று அழுதேன். சுதர்சனன் என்னை அவசரமாக ஆணியிலிருந்து உருவி கறுப்பனின் தோளில் போட்டான். என் தலை கறுப்பனின் முதுகில் பதிந்து கிடந்தது. முடிந்தவரையில் அவனது தோளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள முயன்றேன், கறுப்பா, க - க - க சொல்லு என்று கிசுகிசுத்தேன். க. கண். காது, கிளி, கிளிகள், கிரீடம், குருவிகள், கொம்பு, கறுப்பா, கறுப்பன் - க - க - என்று உரக்கவே கூச்சலிட்டேன். அவனைத் தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்தவர்கள் என்னை வினோதமாகப் பார்த்து, கிச்கிச்சென்று என்ன ஒலி எழுப்பிக்கொண்டிருக்கிறது இது என்றனர், அசூயையுடன்.

மலைமேல் தூக்கிச்செல்ல வசதிகள் இல்லாததால் பல்லக்கு போன்ற ஒரு பெரிய பலகையில் வைத்து இருபது இருபத்தைந்து பேர் கறுப்பனைத் தூக்கிச்செல்ல, வழியெங்கும் க முளைத்த கதையைப்பற்றிப் பேசிக்கொண்டே சென்றனர். அவர்கள் அனைவருக்கும், ஏன், எனக்கும்கூட அது நினைவிருக்கிறதே... நான் கறுப்பனைப் பார்த்தேன். இன்னும் அவனது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. புரண்டு கீழே விழுந்துவிடாமலிருக்க, இடைவார்களைக்கொண்டு அவனைப் பலகையுடன் பிணைத்திருந்தார்கள். விடாமல் அசைந்துகொண்டிருந்தன அவனது விரல்கள். திடீரென்று என் உலகம் இருண்டுபோவதுபோல் இருந்தது. மலை மிகச் செங்குத்தாக இருந்தது. சிரமப்பட்டு அனைவரும் ஏறினார்கள். நான் கறுப்பனின் உடல்மேல் வழுக்கத்தொடங்கினேன். இல்லை இல்லை என்று கூச்சலிட்டேன். இல்லை, இல்லை, இல்லை.

கறுப்பனின் உடல்மேலிருந்து, காய்ந்துகிடந்த இலைகளும் சுள்ளிகளும் அடர்த்தியாக இறைந்துகிடந்து, நூற்றுக்கணக்கான பழுப்புநிறங்களும் பச்சைநிறங்களும் நிரம்பியிருந்த காட்டின் தரையில் வழுக்கி விழுந்தேன். என்னை எவரும் கவனிக்கவில்லை. திகிலுடன் சிறிதுநேரம் மூளை செயலற்றுப்போய்க் கிடந்தேன். பல்லக்கு ஊர்வலம் மெதுவாக என்னைவிட்டுத் தொலைவில் சென்றது. இரவு கவியத்தொடங்கியது. திரும்ப வருகையில் யாரேனும் என்னைக் கவனித்து மறுபடிக் கறுப்பனுடன் சேர்த்துவிடக்கூடுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தேன். இரவு முழுவதும் பெருத்த காற்று வீசிக்கொண்டிருக்க, காய்ந்த இலைகள் என்னை மூடிக்கொண்டன. இப்போதுவரை வெகுகாலத்துக்கு எந்த அரவமும் கேட்கவில்லை. இறங்குகையில் அவர்கள் வேறு திசையில் சென்றிருக்கவேண்டும். நான் நம்பிக்கை இழப்பதில்லை. எனக்கு இன்னொரு கழுத்து கிடைக்கும், நான் மறுபடி வாழ்வேன். க முளைத்தது பொன்ற விஷயம் குறித்த உணர்வுகளை அழித்துக்கொள்ளப் பழகிக்கொண்டிருப்பேன், அதுவரை.

Friday, January 28, 2005

ஆல் இன் ஆல் அழகுராசா...

பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையைப் படித்துவிட்டு, வாய்ப்பிருப்பின் அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு 'தலிவர்' கூறிய கருத்துக்களைப்பற்றி நான் கொடுத்த பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு, தோன்றுவதை அவரது பதிவிலேயே மறுமொழியாக இடவும், அதுதான் தொடங்கிய இடம், அதுதான் பொருத்தமாக இருக்கும். பேசிப் பேசித் தேய்ந்துபோன சமாச்சாரம். வாசகனைப் போதனைக் கடலில் மூழ்கடித்துச் சாகடிப்பது போதாதென்று இப்போது தமிழ் இணையத்தை apothecarize செய்வதுவேறு தொடங்கியுள்ளது போல. பயிற்சி எடுத்துக்கொண்டு போங்கள் அறிவுரை கேட்பதற்கு. பயிற்சி, ஈடுபாடு எல்லாம் தேவை சாமியோவ். நூறு தண்டால், நூறு புல்-அப், நூறு சிட்-அப், நூறு ஸ்டாண்டு-அப், ப்ளேடு கிக் இருபது, Mae Geri அம்பது, இருபத்தஞ்சு khatta, போதாவிட்டால் ஊறவைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டுவிட்டு நுன்ச்சாக்கு சுழற்றிக்கொண்டு, அல்லது களரிப்பயட்டு மாதிரி கேடயம் வாளுடன் உங்கள் வலைத்தளத்திலிருந்து வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு/புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு, ஜீன்ஸை மடித்துக்கொண்டு ஒரே குதியாகக் குதியுங்கள் பிரகாஷின் பதிவிற்கு....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....

Wednesday, January 26, 2005

மற்றொரு நீண்ட இரவு...


படம் நன்றி: யாஹூ

இரவில் மறுபடி ஏதும் எழுதவேண்டாமென்று பார்த்தேன் - ஆனால் சோமபானம் கொஞ்சம் அதிகமாகிப் போய்விட்டதால் (அப்ஸொல்யுட் சிட்ரோன் வோட்கா ;-)), பட்டென்று நினைவில் தோன்றிய ஒரு படத்தைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன். சினிமா பொன்னையா வலைப்பதிவு மாதிரி வரவர ஆகிக்கொண்டிருக்கிறது இது!! சமையல் குறிப்பு ஒன்றுதான் இதில் எழுதியதில்லை என்று தோன்றுவதால், அதையும் கடைசியில் எழுதிவைக்கிறேன். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸில் செரீனா இரண்டாவது செட்டில் நமது ஃபேவரிட் ஷரப்போவாவின் தலைமேல் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காமல் டிவி அருகில் நின்றுகொண்டு செரீனா பந்தை அடிக்க ஓடிவரும்போதெல்லாம் அவளைத் தள்ளிவிட முயன்றுகொண்டிருந்த என் புனிதமான முயற்சியை என் அறைத்தோழன் வன்மையாகக் கண்டித்ததால் அறைக்குள் வரவேண்டியதாகிவிட்டது. தற்போதைக்கு ஒலியை மட்டும் கேட்டுக்கொண்டு, deuce விழுந்தால் மட்டும் ஓடிப்போய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலியா என்றதால்...

பலகாலம் முன்பு சென்னையில் படித்துக்கொண்டுருந்தபோது The Shout என்ற ஒரு படம் பார்த்தேன். அப்போது அதை ஒரு ஆஸ்திரேலியப் படம் என்று நினைத்திருந்தேன், இப்போது IMDB யில் தேடியபோது இங்கிலாந்துப் படம் என்று தெரியவந்தது. கல்லூரி விடுதியில் டிவி அறையைக் காவல்காத்துக்கொண்டிருந்த நாட்களில் ஸ்டார் மூவீஸில் பார்த்த படம். நான், இப்போது ஸ்டாஃபோர்ட்ஷையரில் இருக்கும் எனது நண்பன்...

இரண்டாவது சுற்றில் ஸ்கோர் 4:4 (முதல் சுற்று ஷரப்போவாவுக்கு..)

...இரண்டே பேர்தான் பார்த்தோம் என்று நினைவு. நினைவிலிருப்பதை எழுதுகிறேன். ஒதுக்குப்புறமான ஒரு சிறு கிராமத்தில் தனியான வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி - ஒருநாள் தேவாலயத்துக்குப் போய்வரும் வழியில் தேவாலயத்துக்கு வெளியில் குறுகிக் கிடக்கும் பிச்சைக்காரன் போன்ற ஒரு ஆசாமியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்; சாதாரணமான ஆசாமியாக இல்லாமல், அவனிலுள்ள ஏதோவொரு வசீகரம், மனைவியை அவனைநோக்கி இழுக்கிறது, கணவனாலும் ஏதும் செய்ய முடிவதில்லை - அந்த நாடோடி ஒருமுறை கணவனை அழைத்துக்கொண்டு ஆளரவமற்ற தன்னந்தனியான ஒதுக்குப்புறமொன்றுக்குச் சென்று, தனது பிரத்யேக சக்தியைக் காட்டுகிறான். "காதுகளை இறுக மூடிக்கொள்" என்று கணவனை எச்சரித்துவிட்டு, முழுதாகத் தன் முதுகை வளைத்துப் பின்னால் சாய்ந்து...

deuce.....

deuce....

5:4 (ஷரப்போவா...)

ஓ.................................................................. என்று நீளமாக ஒரு கூச்சலை வெளிப்படுத்துகிறான் நாடோடி. காதைப் பொத்தியும் கணவனின் செவிப்பறைகள் கிழிந்துபோவதுபோல் அப்படியொரு அசுர ஒலி... சற்றுத்தூரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் செம்மறியாடுகளும், ஆட்டிடையனும் சடுதியில் உயிரை விடுகின்றனர். ஓலத்தின் அழுத்தத்தைத் தாங்காத கணவன், சப்தநாடியும் நொறுங்கிப்போக, மயங்கி வீழ்கிறான்.

5:5 (செரீனா...Grrrrrrrrrrrrrrrrr)

6:5 (செரீனா... :-( .............)

வீடு முழுவதும் கடைசியில் அந்த நாடோடி கைப்பிடிக்குள் வந்து சேர்கிறது. மனைவியைத் தன் வசியத்துக்குள் வைத்திருக்கும் அவனைக் கணவனால் ஏதும் செய்யமுடிவதில்லை, விடுவிக்க முயன்றுகொண்டாலும் மனைவியால்...

காலி...செரீனாவுக்கு இரண்டாம் செட்! :(

விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இறுதியில், எங்கோ மணலுக்குள் புதைந்துகிடக்கும் ஒரு கல்லுக்குள் அந்த நாடோடியின் ஆன்மா புதைந்திருக்கிறதென்று தெரிந்துகொண்டு, கணவன் அந்தக் கல்லைக் கண்டுபிடித்து இரண்டாகப் பிளக்கிறான், நாடோடி சாகிறான்.

சுவாரஸ்யம் என்னவெனில், இந்த விமர்சனத்தில் ஈபர்ட் சலித்துக்கொள்வதுபோல (அமெரிக்கர்களுக்கு எங்கே தெரியும் கிரிக்கெட்டின் மகிமை!!), இந்தப் படம் தொடங்குவது ஒரு கிரிக்கெட் விளையாட்டுடன். ஸ்கோர்கீப்பராக இருக்கும் ஆசாமிதான் கதையைச் சொல்கிறான்; இறுதியிலும் படம் கிரிக்கெட் மைதானத்திலேதான் முடிகிறது. இன்னும் படம்பார்க்கும் ஏதாவது ஆர்வம் மிச்சமிருக்கக்கூடுமென்று யோசிப்பதால், முடிவைச் (பெரிய பிரமாதமில்லை அது) சொல்லாமல் விடுகிறேன்.

பெரிய படம் என்று இல்லை - பெரும்பாலும் இதை யாரும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை; பார்க்கவேண்டிய படம் என்றும் சொல்லமாட்டேன் - ஆனால் என்னவோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது; சொல்லவேண்டுமென்று தோன்றியது. இப்போது மறுபடிப் பார்த்தால் பிடிக்குமா என்றும் தெரியவில்லை. சொல்வதைச் சொல்லிவைப்போமென்று சொல்லிவிடுவோம்....

மூன்றாவது செட்டைப் பார்க்கப் போகிறேன். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது; ஷரப்போவா தோற்றால் இந்தப் பதிவு எரிந்து சாம்பலாகக் கடவது:

அவசரமான இன்றைய சமையல் குறிப்பு (தண்ணியில இருந்தாலும் நாட்டாமைக்கு வாக்கு சுத்தம்ல.....)
எலும்பில்லா chicken வாங்கி சுமாராகப் பெரிதான துண்டுகளாக வெட்டிக்கொள்க...கிட்டத்தட்ட 2 இஞ்ச் துண்டுகளாக. ஆலிவ் எண்ணெய் ஊற்றி அடுப்பைத் திருகவும். எண்ணெய் கொதிக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி, சிலபல பூண்டுகளையும் துண்டுதுண்டாக நறுக்கி உள்ளே போட்டு வறுக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் பாவப்பட்ட கோழியை உள்ளே போடவும். அதன்மேல் Oregano leaves மற்றும் சில தூவல்கள் Chicken seasoning ஐ எறிந்து, பொன்னிறமாக வரும்வரை திருப்பித் திருப்பி வறுக்கவும். மறுபடிப் பொடிகளைத் தூவவும். பிறகு, திரும்ப மற்றொரு வெங்காயம் நறுக்கிப் போடவும். சிவப்பு ஒயின் இருப்பின் வாணலிக்குள் ஊற்றவும். மறுபடி வெங்காயத்தை நறுக்கிப் போடவும். வதக்கிக்கொண்டே இருக்கவும். போரடிக்கும்போதெல்லாம் சிறிது தண்ணீரைத் தெளித்துத் தெளித்து வதக்கவும். உப்பையும் எறியுங்கள் உள்ளே. (இதற்குள் சற்று சாதத்தையும் வடித்து வையுங்கள்). ஒரு ரகமாக சிவப்பு நிறத்தில் சிக்கனும் ஒயினும் கலந்து மின்னும்போது சாதத்தை உலர்த்தி உள்ளே போட்டு வதக்கவும். மறுபடி போரடிக்கும்போது நிப்பாட்டி விடவும். ஸ்ட்ரெயிட்டாக வோட்கா அல்லது டெக்கீலா அடிக்கும்போது சுவையான உணவு!! Chicken-wine fried rice என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்!! (நமது சமையல் போரடித்துவிட்டதால் ஒருவிதமான mixed தாக்குதல் இது...பிழையிருப்பின் பொறுத்தருள்க).

பாவி நண்பன் தூங்கப்போவதால் டிவியின் தொண்டையில் சதுராஸ்திரம் எய்து ம்யூட் ஆக்கிவிட்டான். போஸ்ட் செய்துவிட்டு போய் மீதி விளையாட்டைப் பார்க்கிறேன். நன்றி வணக்கம்!! மோனிகா செலஸின் முரட்டுக் கத்தலுக்கு ஷரப்போவாவின் கத்தல் எவ்வளவோ பரவாயில்லை, இப்போது அதையும் கேட்கமுடியாது முழு வால்யூமில் :(

3:3....

மரணம் பற்றிய இரண்டு படங்கள்



படங்கள் நன்றி: ஆமஸான்

சில வாரங்களுக்குமுன் பார்த்தது: 'இகிரு' (to live) என்று ஒரு படம் (குரோஸவா, 1952). முப்பது வருடங்களாகக் காகிதக் கடல்களில் மிதந்துகொண்டிருக்கும் வாத்தானபி என்ற டோக்கியோ நகரசபையில் ஒரு பிரிவுத் தலைவரைச் (section chief) சுற்றிச் சுழல்வது.

படத்தின் முதல் காட்சி, வாத்தானபியின் வயிற்றின் எக்ஸ்-ரே. பின்னணிக் குரல், இவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருக்கிறது, இன்னும் சிலகாலமே இவர் வாழ்வில் மிச்சமிருக்கிறது என்று தெரிவிக்கிறது. மருத்துவர், "நினைத்ததையெல்லாம் சாப்பிட்டுக்கொள்ளுங்கள்" என்கிறார். வாத்தானபிக்கு, தன் ஆயுள் ஆறு மாதமோ ஒரு வருடமோ என்று தெரிந்துபோகிறது. மனைவி இறந்துவிட, மறுமணம் செய்துகொள்ளாமல் மகனை வளர்த்தெடுக்கிறார்; திருமணமான மகனுக்கும் மருமகளுக்கும் அவரது ஓய்வூதியத்தின் மேலும், ஓய்வுப் பணத்தின் மேலும் ஒரு கண். அலுவலகத்தில், "இந்தப் பிரிவு இல்லை, அங்கே போ" என்று அனைத்துப் பொறுப்புக்களையும் வேறெங்காவது கைகாட்டித் திருப்பிவிட்டு, தொடர்ந்து காகிதங்களில் முத்திரை குத்தியவாறு காலத்தைக் கழிக்கும் ஒரு தீர்ந்துபோன அரசாங்க அதிகாரி. சாவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன என்று தெரிந்துபோனபின்பு வாழ்க்கையை வாழமுயலும், ஏதாவதொன்றைச் செய்யமுயலும் ஒரு யதார்த்தமான பாத்திரம்.

சாதாரணக் கதை போல இருந்தாலும், உத்திரீதியிலும் சற்று வேறுபட்ட படம். முதல் ஒன்றேகால், ஒன்றரை மணி நேரம் படம் வாத்தானபியைச் சுற்றிச் சுழல்கிறது, அதன்பின் வாத்தானபி சாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அவரைப்பற்றியும், கடைசிக்காலத்தில் அவர் செய்த நல்ல காரியத்தைப்பற்றி வெவ்வேறு கோணங்களில் விவாதிப்பதையும் சித்தரித்துப் படம் முடிகிறது. கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது, குழந்தைகளுக்கும் சுகாதாரத்துக்கும் கேடு, அதை அகற்றிவிட்டு ஒரு பூங்கா கட்டவேண்டும் என்று புகார்கொடுக்க நகரசபைக்கு வரும் பெண்களை, இந்தப் பிரிவில்லை அந்தப் பிரிவுக்குப் போ, அந்தப் பிரிவுமில்லை வேறொரு பிரிவிற்குப் போ என்று தொடர்ந்து விரட்டும் அரசாங்க அதிகாரிகள்நிறைந்த, காகிதக் கடல் சூழ்ந்த அலுவலகத்தில் வாத்தானபி, மற்றுமொரு குண்டூசி போல, மற்றுமொரு பேப்பர்வெயிட் போல, மற்றுமொரு நாற்காலி போல முப்பது வருடங்களைக் கழித்திருக்கிறார். சாவு நெருங்குகிறதெனத் தெரிந்ததும், அனுபவிக்காத அனைத்தையும் அனுபவித்துவிடவேண்டுமென்று தன் சேமிப்புப் பணத்தில் பாதியை (50,000 யென்) எடுத்துக்கொண்டு மதுக்கடைக்குப் போய் தொடர்ந்து குடிக்கிறார், ஆனால், பணத்தை எப்படிச் செலவழிக்கவேண்டுமென்று தெரியவில்லை. அதே மதுக்கடையில் இருக்கும் மற்றொரு எழுத்தாளன், அவரது அன்றைய இரவின் நண்பனாகவும், லோகாயத வழிகாட்டியாகவும் இருந்து, pin-ball விளையாட்டரங்கங்களுக்கும், கேளிக்கை அரங்கங்களுக்கும், சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கும் அவரை அழைத்துச் செல்கிறான். முப்பது வருடமாக அவரது தலையைத் தேய்த்த ஒரு தொப்பியை ஒரு பெண் பட்டென்று பிடுங்கிக்கொண்டு கூட்டத்தினுள் மறைந்துவிடுகிறாள். அத்தனை வருடங்களுக்குப்பின் அவரது தலையில் புத்தம்புதிதாக நவநாகரீகத் தொப்பி ஒன்று குடியேறுகிறது - ஆளுக்குப் பொருந்தாத தொப்பியா, தொப்பிக்குப் பொருந்தாத ஆளா என்று குழப்பமே. மேக்ஸ் எர்ன்ஸ்ட்டின் The hat makes the man ஓவியம்தான் நினைவுக்கு வந்தது. இருண்ட திரைக்காட்சிகளுக்கு நடுவில் வெள்ளைநிறத் தொப்பி மட்டும் மதுவின் போதையுடனும், இரவின் போதையுடனும், தனிமையின் போதையுடனும் குறுக்கும் நெடுக்குமாக அலைகிறது. இசையும் ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியும் பொங்கி வழியும் கேளிக்கைக்கூடமொன்றில், உதடுகள் அசையாமல், தகரத்தைக் கல்லில் தேய்க்கும் தனது குரலில் ஒரு சோகப் பாடலைப் பாடி, அந்தச் சூழல் முழுவதின் தலையிலும் ஒரு பெரும் பாறாங்கல்லைத் தூக்கி வைக்கிறார். ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத வாத்தானபி, தொடர்ந்து அலுவலகத்துக்கு மட்டம் போடுகிறார், அலுவலகத்திலுள்ள ஒரு ஏழை இளம்பெண்ணைச் சந்திக்கையில் அவளுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவளுடன் அடிக்கடி வெளியில் செல்லவும் பொழுதைக் கழிக்கவும் ஆரம்பிக்கிறார். அவரது முதுமையும் வாழ்வின்மையும் அப்பெண்ணின் இளமையின் வேகத்துக்கு இடங்கொடுக்கவியலாமல் இருவரையும் துன்பத்திலாழ்த்துகிறது.

பிறகு இறந்துவிடுகிறார்.

படத்தின் பின் பாதியில், அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு வரும் அலுவலக ஊழியர்கள் அவரைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். கடைசிக்காலத்தில் திடீரென்று அவருக்கு என்ன ஞானோதயம் ஏற்பட்டதென்று, எப்படி திடீரென்று அவ்வளவு வேகம்பெற்று வேலை செய்தார் என்று. நகரப் பெண்கள் அஞ்சலிசெலுத்த வருகின்றனர். வாசனைப்பத்திகளை ஏற்றிவைத்து, வாத்தானபி-சான் இல்லாவிட்டால் எப்படி அந்தக் கழிவுநீர்க் குட்டை அப்படியே இருந்திருக்கும், எப்படி உத்வேகத்துடன் அதைச் சுத்திகரித்து பூங்கா ஒன்றை இறப்பதற்குச் சற்று நாள் முன்பு பெரும் பிரயத்தனத்துக்கிடையில் கட்டி முடித்தார் என்று கண்ணீருடன், நன்றியுடன் நினைவுகூர்கின்றனர் பெண்கள். முந்தைய இரவு, அந்தப் பூங்காவின் ஊஞ்சலொன்றில் ஆடியவாறும் பாடலொன்றைப் பாடியவாறும் இருந்த அவரைப் பார்த்த, அஞ்சலி செலுத்த வந்த ஒரு போலீஸ்காரர், "ஏதோ குடிகாரன் என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். அவரைக் கைது செய்திருந்தால் இப்படிப் பனியில் உறைந்து இறந்திருக்க மாட்டார்" என்று வருத்தப்பட்டு நெகிழ்கிறார். மதுவைத் தொடர்ந்து குடித்தவாறும் வாத்தானபீ அந்தப் பூங்காவைக் கட்டிமுடிக்கப் பட்ட சிரமங்களை கண்ணீருடனும் நினைவுகூரும் சக ஊழியர்கள், தங்களது பொறுப்பில்லாத்தனத்தைக் கைவிடவும், வாத்தானபி காட்டிய பாதையில் பயணிக்கவும் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். பின்பு சற்று நேரத்தில் படம் முடிகிறது.

ஜப்பானிய, அதுவும் குரோஸவா படம் என்பதால், இதை முற்றுமுழுதாக மரணம்பற்றிய கிழக்கத்திய சிந்தனை என்று கூறிவிடச் சற்றுத் தயக்கமாக இருந்தாலும், வேறெங்கோ ஒரு பின்னூட்டத்தில் நான் இட்ட, வெகுகாலம் முன்பு பார்த்த இங்மார் பெர்க்மனின் The Seventh Seal படமும் நினைவுக்கு வந்தது. மரணம்குறித்த மேற்கத்திய சிந்தனையின் வெகு துல்லியமான பிரதிபலிப்பு என்று இந்தப் படத்தை நான் கருதுவதுண்டு. மரணத்தை அரூபமாகப் பார்க்காமல், ஒரு பௌதீக ரூபமாக மனிதனுடன் சேர்த்து இயங்கவைப்பதிலாகட்டும், மரணம் என்னைக் கொள்ளவேண்டுமாயின் அது என் ஒத்துழைப்போ, என் தோல்வியோ அன்றி முடியாது என்று கருதும் மனித மனத்தின் நிஷ்டூரப் பிடிவாதத்தைச் சித்தரிப்பதாக இருக்கட்டும், fate and free-will cannot coexist என்ற கருத்தாக்கத்தில் ஊறிப்போன தர்க்கரீதியான மேற்கத்தியச் சிந்தனையை மிகத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக இருக்கட்டும் - The Seventh Seal, கேள்விப்பட்டவரையிலான, படித்தவரையிலான அத்தனை க்ளிஷேக்களையும் தாண்டிய ஒரு மாஸ்டர்பீஸ். முதல் காட்சியில் கண்ணைக் கூசவைக்கும் ஒளியின் மத்தியில் அந்தரத்தில் நிலைத்து நிற்கும் கழுகும், படீரென்று வெடித்துச் சிதறும் இசையும் படத்தின் மனோநிலையை, ஆழ்கருமையை ஒற்றை வீச்சில் வெளிப்படுத்தும். மத்தியகாலங்களில், பல்வேறு போர்களில் போரிட்டுக் களைத்த ஒரு நைட் (Knight), தனது சேவகனுடன் வீடுநோக்கித் திரும்பிவருகிறான். திரும்பி வரும் வழியில், மரணத்தைச் சந்திக்கிறான்: அதாவது, மரணம் மனித ரூபத்தில் வந்து, உன்னையும் உன் சேவகனையும் அழைத்துப்போக வந்திருக்கிறேன் என்கிறது. விட்டுக்கொடுக்காத நைட், ஒரு யோசனை சொல்கிறான். ஒரு ஆட்டம் சதுரங்கம் விளையாடுவது. நைட் வென்றால், மரணம் திரும்பிப் போய்விடவேண்டும், மரணம் வென்றால் நைட், மரணத்துடன் செல்லவேண்டும். சதுரங்க விளையாட்டு பலநாட்கள் தொடர்கிறது, வழியெங்கும் பல்வேறு பாத்திரங்கள், இறுதியில் தன் குடும்பத்துடன் சேரும் நைட்டையும் அவர் குடும்பத்தினரையும் கொள்ளை நோய் (Plague) வெல்கிறது. இகிரு பார்த்து முடித்தபின் Seventh Seal ஐ அதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஸ்வீடிஷ் வலைத்தளங்களில் கூட "பெர்க்மனை விடுங்கள், வேறு இயக்குனர்களும் எங்களிடம் உள்ளனர்" என்று எரிச்சலாகக் கூறப்படுமளவு ஸ்வீடிஷ் சினிமா என்றால் பெர்க்மன் படங்கள் என்ற ரீதியில் உலகளவில் பிரபலமடைந்துவிட்டபிறகு, பிரபலமாகாததால் மட்டுமே இன்னும் தெரியவராத எத்தனை நல்ல படைப்புக்களை பார்க்காமல் இழந்துகொண்டிருக்கிறோம் என்றுகூடத் தோன்றும். அத்தனை பேரைக் கொன்றபிறகும் மரணத்தைச் சதுரங்கம் விளையாட அழைக்கும் நைட்டையும், மரணத்தேதியைத் தெரிந்துகொண்டதும் பதறிப்போய்த் திசையிழந்த பறவையாய்க் குழம்பும் வாத்தானபீயையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எத்தனையோ எண்ணங்கள் - வரிசையாக எழுதமுடியவில்லை. வாத்தானபி பாத்திரத்தில் நடித்த தக்காஷி ஷிமுரா, ஒரு குரோஸவா regular. பல குரோஸவா படங்களில் அவரைப் பார்த்த நினைவிருக்கிறது. "இந்தப் பாத்திரத்தில் நீ நடிக்கையில், இதுதான் நீ என்று நினைத்துக்கொண்டு நடி, பேசு" என்று ஒரு குரங்கின் படத்தைக் குரோஸவா தன்னிடம் காட்டியதாகப் படத்தின் பிந்தைய பேட்டியில் ஷிமுரா சொல்லியிருந்தார். அது உண்மைதான்.

தேர்தல் முடிவுகள்!!!

பழைய செய்திதான், இருந்தாலும்...

Indibloggiesல் நடந்த ஓட்டுப்பதிவில் நானும் ஓட்டுப்போட்டேன். சரி, முடிவுகள் எப்படியிருக்கிறதென்று பார்த்தால், ஆச்சரியம் - பொதுவான வலைப்பதிவுகளை (ஆங்கில வலைப்பதிவுகள்) விட, சிறந்த தமிழ் வலைப்பதிவுக்கான ஓட்டுப்பதிவில் விழுந்த ஓட்டுக்கள் எண்ணிக்கை அதிகம் (792 பேர் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள்). சிறந்த தமிழ் வலைப்பதிவராக வெற்றிபெற்றவர் பத்ரி.

ஓட்டுப்பதிவு நடக்கும்போது அவ்வப்போது போய்ப் பின்னூட்டங்களைப் பார்த்ததில் "ஏன் என் பதிவைத் தேர்ந்தெடுக்கவில்லை, ஏதோ அரசியல் நடக்கிறது" என்ற ரீதியில் சிலர் சண்டைக்கு வந்திருந்தனர். காசி கூட இதைப்பற்றி எங்கோ எழுதியிருந்ததாய் நினைவு. இருந்தாலும், அதிகம் யோசிக்காமல், ஓட்டுக்களைப் போட்ட தமிழ் வலைப்பதிவர்களுக்கும், வெற்றிபெற்ற பத்ரிக்கும் பிற அனைவருக்கும் ஒரு ஓ!

வெற்றிபெற்ற பதிவுகள்
ஓட்டு எண்ணிக்கை

Sunday, January 23, 2005

விமான நிலையம்

விமான நிலையம்: 1998
-மாண்ட்ரீஸர்

சிலுவை போட்டுப் பார்க்கமுயன்றுகொண்டிருந்த கைகளின் இடுக்குகளில் கட்டப்பட்டிருந்த சிலந்திவலைப் பின்னல்கள் அறுந்துவிடாமல் முன்னும் பின்னும் அசைந்துகொண்டிருக்க, விமானப் பயணத்துக்கு அவனை அழைத்துப்போக ஆட்கள் வந்தார்கள். நூலாம்படைகள் எங்கும் பரவிக் கிழிந்த பழந்திரைகளாய் வெளிச்சக் கற்றைகள் கிழித்துப் போட்ட கந்தல்துணிகளாய்ப் பரவியிருந்த வீட்டினுள்ளிருந்து மௌனச் சங்கிலிகளை ஓசையெழுப்பாமல் இழுத்துக்கொண்டு வெளிவந்தது அவன் கால். சந்தடி நிறைந்த விமான நிலையத்தில் அவர்கள் அமர்ந்தார்கள் வளைந்து கொடுக்கும் பாலிவினைல் நாற்காலிகளில். கண்ணாடித் தடுப்புகளினூடே தெரிந்த விமானதளத்தின் ஓடுதரையில் பிச்சைக்காரன் தன் திருவோட்டைத் தட்டிக்கொண்டிருந்ததன் சப்தம் இங்கு கேட்காமலிருக்க, போலீஸ் அதிகாரிகளின் மடிப்புக் கலையாத சீருடைகள் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. யாரோ ஒட்டிவிட்டுப் போன பபிள்கம் ஒரு வினாடியில் சடுதியில் நீண்டு மெல்லிய நூலாம்படைகளைப் பரப்ப, விமானநிலையம் முழுதும் பரவத்தொடங்கின நூலாம்படைகள். விரித்த வோக் பத்திரிகையுடன் கறுப்புத் தோல் மினிஸ்கர்ட்டைத் தாண்டித் தோல் காலணிகளணிந்து கோதுமை நாகங்கள் இரண்டு ஒன்றன் மேலொன்று சாய்ந்து படுத்திருக்க தேங்கிய மழையில் தேங்கிய எண்ணெய் மிச்சங்களின் வர்ணஜால நிறப்பிரிகைகள் படகுகளுக்காகக் காத்திருத்து மிதந்துகொண்டிருந்தன. சிலுவையிட்டுக் கொண்டிருந்த கைகள் இப்போது அமைதியாயிருக்க, ஜன்னலோர இருக்கை ஏற்பாடு செய்திருந்தால் நலம் என்றான். டையைத் தளர்த்திக்கொண்டு அவர்கள் அமைதியாக இருந்து, சேற்றில் புரண்டு எழுந்து வார் அறுந்துபோயிருந்த அவர்களது ரப்பர் செருப்புக்களைக் கழற்றி வைத்தார்கள். நூலாம்படைகள் மேலே பரவிக்கொண்டிருக்க, நிலையப் புத்தகக்கடை அருகில் படுத்திருந்த வெள்ளை மாடு தன் புட்டத்தைச் சோம்பலுடன் மெலிதாக உயர்த்து ஒரு சின்னப் பெருமூச்சுடன் கரும்பச்சையும் பழுப்புக் கலந்து சாணமிட்டது. கையில் தகரச் சட்டியுடன் வந்த அந்தப் பெண் அள்ளிக்கொண்டுபோய்ச் சுவர்களில் வட்டவட்டமாக அறையத் தொடங்க, நிலையத்துக்குள் நூலாம்படைகளுடன் கைவிரல் தடங்களும் வேகமாகப் பதியத்தொடங்கின.

என் மூளையின் பக்கங்களின்மேல் ராமபாணப்பூச்சிகள் ஊர்கின்றன என்று புகார்செய்தான் அவர்களிடம். செருப்பில் தங்கியிருந்த சேற்றை வழித்துக் காலியாயிருந்த நாற்காலிகளில் தடவிக்கொண்டிருந்தான் ஒருவன். அவர்களின் பொதுவான அமைதி பபிள்கம்மின் நூலாம்படைகளில் தங்கியிருந்தது. கண்ணாடிகளைத் தாண்டி, எரிந்துகொண்டே அந்த விமானம் தரையிறங்குவதைப் பார்க்கமுடிந்தது. கருகிப்போன தலைமுடிகளுடம், தீய்ந்து கருவளையங்கள் படிந்த கண்களுடன் பிரயாணிகள் மௌனமாகப் படிக்கட்டுகளில் இறங்கினர். எஸ்கலேட்டர்களில் கீழிறங்கித் தங்கள் கருகிப்போன பெட்டிகளையும் எலும்புத்துண்டுகளையும் பொறுக்கிக்கொள்ள, வெள்ளை மாட்டுக் கழிச்சல் தொடங்கியிருந்தது. வேதனையான முனகலுடன் தீய்ந்து பளிங்குத் தரையெங்கும் சாணியைப் பீய்ச்சியடிக்க, ஒலியெழுப்பும் காலணிகள் அணிந்த குழந்தை நேராக அதன்மேல் நடந்து பின் வழுக்கி விழுந்தது. அரையடி இடைவெளியில் இருவரும் எதிரெதிராக நின்று பேசிக்கொண்டிருக்க, அவன் கையிலிருந்த ரோஜாவினுள்ளிருந்து வெளிர்மஞ்சளில் புழுவொன்று எட்டிப் பார்த்தது. பின்னொரு காலத்தில் சுவருடன் அவன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னான்: அப்போது விமான நிலையச் சுவர்களெங்கும் தரையெங்கும் கரையெங்கும் இறங்கும் விமானச் சப்தங்கள், அறீவிப்புகள், மிதந்துவந்த வாசங்களினூடே கைவிரல் தடங்கள், பீதியூட்டும் வகையில் படிந்து கறூத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த வரட்டிகளும் நூலாம்படைகளும் நிறையத்தொடங்கியிருக்க, காஃபிக்கோப்பையில் விழுந்த நூலாம்படைகளை யாருக் தூக்கியெறியவில்லை. தூய மணத்துடன் அவை குடல்களில் தொண்டைகளில் ஆசனவாய்களில் தங்கள் கிளைகள் பரப்பி வலைபின்னவேண்டிப் பிரயாணம் செய்தன எதிர்ப்பேதுமில்லாமல். கோட் பாக்கெட்டிலிருந்து எடுத்து நுனியைக் கிள்ளிவிட்டுப் பீடி பற்றவைத்துக்கொண்டு அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். இன்னும் ஜன்னலருகில் உட்கார்ந்தால் ஜன்னல் கண்ணாடிகளின் நீர்மை உள்ளிழுத்து மேகங்களில் எறிந்துவிடும் என்றான் ஒருவன், வெகுநேரம் கழித்து. அனைத்துக் கண்ணாடிகளின் பின்னும் போய் நின்றுகொண்டு பாதரசம் பூசவேண்டும். கண்ணாடிகளுக்குள் உறைந்து போகலாம். விரிசல் விட்டுக்கொண்டிருந்த அவர்களின் வழியிலகப்பட்டுக்கொண்ட வரட்டிகளின் விரல்தடங்கள் சிதறத்தொடங்கின. பிச்சைக்காரனின் திருவோடு இப்போது நெளிந்துகிடக்க, விடாமல் தட்டிக்கொண்டிருந்தான். சீரான தாளகதியில் அவன் கைகள் மேலேறிக் கீழிறங்குமாறு கோதுமை நாகங்கள் புரண்டு இடம் மாறிக்கொண்டன. இறக்கும் இடத்தில் என்னைச் சுவர்களுக்குள் விட்டுவிடாதீர்கள், நான் போகவிரும்புவது கடற்கரை அருகிலுள்ள திறந்தவெளி என்றான். தீராத இருமலின்பிறகு மூக்கில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு அவர்களில் ஒருவன் சாயாத அமைதியுடன் இவனைப் பார்க்க, பச்சை வனங்கள் நடுவில் புடைத்த தொண்டைகளுடன் ஓணான்கள் மரநிழலில் கிளைமேலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருந்தன. விமானங்கள் வந்துபோய்க்கொண்டிருக்க, இவனை அழைத்துக்கொண்டு அவர்கள் எழுந்தார்கள். ரப்பர் செருப்புக்கள் பட்பட்டென்று ஒலியெழுப்பின. மறுபடி அமர்ந்துகொண்டார்கள்.

நேர்த்தியாகக் குடையப்பட்ட துவாரங்களுடைய முகமூடிகளைப் பயணிகள் அணிந்து இறங்கி வந்துகொண்டிருக்க, காப்பேறிப்போன விரல்கள் செதுக்கின கோர மொழிகளின் ஆழ்ந்த மௌனம் அவற்றின்மேல் படிந்திருந்தன நுண்ணிய வரிகளாய். நடக்க நடக்கக் காற்றில் கரைந்துகொண்டிருந்த முகமூடிகள் விமானநிலையக் கண்ணாடித் தடுப்புகள் தாண்டி உள்நுழைந்ததும் தன் மிச்சங்களை முகத்தினாழத்தில் புதைத்துக்கொண்டன வெளிவருதலுக்கான பின்னொரு தருணம் எதிர்பார்த்து. காக்கிச் சட்டைகளின் வளையத்தின் நடுவில் திருவோடு நெளியா ஓடுதளத்தின் தரை அசுரகதியில் தாக்கப்பட்டுக்கொண்டிருக்க, திருவோட்டின் நெளிசல்களிலிருந்து புறப்பட்டுவந்த சீரான ஒலிச்சுருள்கள் காக்கிச்சட்டையின் தையல்களுக்குள் நுழைந்து பரவி வெளிப்பட்டுக் கைகளையிழுத்துப் பின்புறமாய் இறுகப் பிணைத்திருந்தன அசைக்கமுடியாமல். எதனுடனும் தொடர்பற்ற எதனுடனும் தொடர்புள்ள பெருவெளியின் திரையில் நிரப்பப்படாமலிருக்கிறதெனப்பட்ட வெற்றிடங்கள் தவிர்த்து மற்றைய இடங்களில் கலந்து உருகி வழியும் வர்ணங்கள், அவற்றின் அனந்தகோடிச் சேர்க்கைகள் அழிவுகள். கோட்டும் டையும் செருப்புமணிந்து பீடி வலித்துக்கொண்டிருந்தவர்கள் சடுதியில் உருவாக்கிய அரைவட்டத்தின் வியூகத்தினூடே நகர்ந்து மேஜைகள் தாண்டிச்சென்று ஏறவேண்டியிருக்கும் விமானத்தின் படிகளில் அசைவற்று நின்றிருந்தது நிலப்பரப்பு. சென்றுகொண்டும் வந்துகொண்டும் வினோதக் கோணங்களில் தடயங்களில்லாப் பாதைகளை உருவாக்கிக் கொண்டிருந்த வாகன, மனிதர்களின் வேர்கள் நகராதவை என்றும்.

சிலந்திவலை ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டிருந்த சர்க்கஸ்காரர்கள் காலக்குறிகளின் குவியல்களுக்கடியில் எதிர்பின்றிப் புதைந்துபோன குற்றத்தின் நிகழ்பரப்பைப் பிடித்திழுத்துவந்து விமானத்தினுள்ளும் பரவியிருந்த பபிள்கம் நூலாம்படைகளின் மெல்லிய இழைகளில் பரப்பிக் காயவைக்கிறார்கள், எந்தவொரு கண்ணியும் அறுந்துவிடாதபடி. சுழன்றுகொண்டிருக்கும் ஒரு வியூகத்தில் அவர்கள் சுற்றி அமர்ந்திருக்க, பளிங்குத் தரையில் படுத்திருந்த மாடு வேதனைக்குரலெழுப்ப இப்போதைய அதன் கழிச்சல்களில் விரல்ரேகை பதியும் வரட்டிகள் உருவாகாது. இயந்திரங்களின் கட்டிட்டங்களின் மொசைக் கண்கள் காலங்காலமாய்ப் பார்த்துச் சலித்த மௌனப் பிரலாபிப்புகளின் விளைவாகக் கருவளையங்கள் போர்த்தியிருக்க, நூலாம்படைகள் தளர்ந்தன. இயக்கம் தளர்ந்த சிலந்திகள் செத்து விழ வேகம் குறைகிறது, நூலாம்படைகளின் பரவலில். தத்தித் தத்தித் தன் கறுப்புக் கால்களால் ஒருச்சாய்த்து நகர்ந்துவரும் காக்கை தன் ஈரக் கண்களால் பார்த்துப் பின் அமர்ந்துகொள்கிறது குற்றப் பரப்பின்மேல். ஜன்னி காணும் விமானநிலையக் கட்டிடச் சுவர்களில் நடுக்கம் உருவாகி அதிரத் தொடங்க, முகமூடிகளைப் புதைத்துக்கொண்டவர்களும் பெட்டிகளையும், எலும்புத்துண்டுகளையும் பொறுக்கிக்கொண்டவர்களும் சேற்றில் கால்கள் புதையப் புதைய நடந்துகொண்டிருக்கிறார்கள் வாசலைநோக்கி. தொப்புள்கொடிகள் துணியில் சுற்றித் தொங்கவிடப்பட்ட ஆலமரங்களின் சோக வர்ணங்களும் அரித்துச் சிதைக்கப்பட்டுப் பரவிக்கிடந்தன வாசலுக்கருகில். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும் விமானம் என்றான் வியூகத்தில் ஒருவன். ஜன்னலோர இருக்கை. சரி. கண்ணாடித் தடுப்புகளின் குளிர்.

முழுக்க நெளிந்து உருவற்றுப்போன திருவோட்டை இப்போது உயர்த்திப் பார்த்தான் பிச்சைக்காரன். வடிவமற்றிருந்தது, சுருக்கமாக. மௌனமாக ஓடுபாதையின் நடுவில் வைத்துப் பெருமிதம் தெறிக்க எழுந்தான்: அவனைக் கைது செய்தார்கள். திருவோட்டைக் கவனமாகத் துணி மூடி எடுத்துக்கொண்டு ஒரு பெட்டியினுள் வைத்தார்கள். பின்பு அழைத்துவரும் வழியில் எதிர்ப்பேதுமின்றி மௌனமாக இருந்தான். ஈரமான கண்களால் பார்த்தவாறு காக்கை அங்கேயே நின்றிருந்தது அசைவின்றி. சங்கடத்துடன் நெளிந்த கோதுமைநாகங்களின் மேலிருந்த கைப்பை நழுவிக் கீழே விழுந்திருக்கும்: பிழைத்தது. கதவைத் திறந்து அவனை விமான நிலையத்தினுள் அழைத்துவந்து வாசலைநோக்கி நடத்திச்செல்ல, தீட்சண்யமான கண்களைக்கொண்டிருந்த அந்தப் பிச்சைக்காரனது பார்வை நேர்க்கோட்டில் நிலைத்திருந்தது கூர்மையாய்.

நம் விமானம் வந்துவிட்டது என்றது வியூகம். பிரயாணத்துக்காக அவர்கள் எழ, அவனும் தளர்வுடன் எழுந்து நின்றான். கண்ணாடித் தடுப்புக்கப்பால் சப்தமின்றி வந்து நின்ற விமானத்துள்ளிருந்து தீய்ந்துபோன முகங்களை மறைத்துக்கொள்ள முகமூடியணிந்த பிரயாணிகள் பெட்டிகளுடனும் எலும்புத்துண்டுகளுடனும் வெளிப்பட, நீர்வண்டிகள் தண்ணீரைப் பீய்ச்சி எரிந்துகொண்டிருந்த விமானத்தை குளிர்வித்துக்கொண்டிருந்தனர். நாம் போகலாம் என்றது வியூகம். கண்ணாடிக் கதவுகள் திறக்கப்பட்டன. சிலுவை போட்டுக்கொள்ள ஆரம்பித்ததில் கைகளின் இடுக்குகளில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிலந்திவலைப் பின்னல்கள் அறுந்துவிடாமல் முன்னும் பின்னும் அசையத்தொடங்கின.

Friday, January 21, 2005

புஷ் 2, 2

இந்தியாவின் அரசியல் ரீதியான தோல்வியைக் (political failure) குறிக்கும் ஒரு பகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது, காந்தியின் ஒரு பத்தி மேற்கோள் காட்டப்பட்டிருந்தது: புஷ் இரண்டாம் முறை பதவியேற்றுப் பேசிய சூழலில் இந்த மேற்கோள் பொருந்திவரும் என்றே நினைக்கிறேன். அவசரமாக மொழிபெயர்ப்பு செய்தால் தவறுகள் வருமென்பதால், 'The Doctrine of the Sword' என்ற காந்தியின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட அந்தப் பத்தியை, ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன்:

"I do believe that when there is only a choice between cowardice and violence, I would advise violence... I would rather have India resort to arms in order to defend her honour than that she should in a cowardly manner become or remain a hapless victim to her own dishonour. But I helieve that non-violence is infinitely superior to violence, forgiveness more manly than punishment. க்ஷாமா வீரஸ்ய பூஷணம்... Non-violence is the law of our species as violence is the law of the brute. The spirit lies dormant in the brute and he knows no law but that of physical might. The dignity of man requires obedience to a higher law, to the strength of the spirit. The rishis who discovered the law of non-violence in the midst of violence, were greater geniuses than Newton. They were themselves greater warriors than Wellington. Having themselves known the use of arms, they realized their uselessness and taught a weary world that its salvation lay not through violence but through non-violence. Non-violence in its dynamic condition means conscious suffering. It does not mean meek submission to the will of the evildoer, but it means the putting of one's whole self against the will of the tyrant. Working under this law of our being, it is possible for a single individual to defy the whole might of an unjust empire, to save his honour, his religion, his soul and lay the foundation for that empire's fall or regeneration... And so I am not pleading for India to practise non-violence being conscious of her strength and power. I want India to recognize that she has a soul that cannot perish and that can rise triumphant above any physical weakness and defy the physical combination of a whole empire."

வேறு என்ன இருக்கிறது சொல்வதற்கு?

Tuesday, January 18, 2005

கோல்டன் குளோப் விருதுகள்

இந்த வருடம் தங்கக் கோளம் (அதுதாங்க Golden Globe award) வாங்கியவர்களின் பட்டியல் இங்கே. நாலைந்து படங்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். மீதியிருப்பவற்றில் Love song for Bobby Long மட்டும் பார்ப்பதாக உத்தேசம். காரணம் இங்கே ;). மற்றபடி, The Aviator படம் பார்த்தபோதே, தக்காளி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு நன்றாகச் செய்திருக்கிறானே என்று டிகாப்ரியோவைப் பற்றி நினைத்தேன் (எந்த மார்ட்டின் ஸ்கார்ஸீஸ் படம்தான் போரடித்திருக்கிறது சொல்லுங்கள்!). Hotel Rwanda மிகவும் தூக்கிவிடப்படும் இன்னொரு படம். பார்க்கலாம்.

Monday, January 17, 2005

ஆந்தை வாழ்வு!!

இந்தக் கதையின் விஷமத்தனமான சில பகுதிகளை இப்போதே நசுக்கித் தேய்க்காவிட்டால் வருங்காலங்களில், "தமிழில் முதலில் எழுதப்பட்ட அறிவியல் கதையான 'தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு' ஐப் பின்பற்றியே அனைத்துக் கதைகளும் மெட்டாஃபிக்-ஷன்களும் எழுதப்பட்டன" என்ற கூப்பாட்டைக் கேட்கும் துர்ப்பாக்கியத்துக்கு ஆளாகவேண்டிவரும் என்பதால் இதைப் பட்டபடி எழுதுகிறேன்: அறிவியல் புனைகதை என்பதில் அரசியலைக் கொண்டுவந்து, ஜே ஜே சில குறிப்புக்களை ஒரு condom மாதிரி உபயோகித்துத் (பெரியோர் மன்னிக்க...) தன்னை உருவியெடுத்துக்கொள்ளும் வாக்கியமான //தமிழைப் பொறுத்தவரை நாவல் வடிவின் சிதறலை நிகழ்த்த ஆரம்பித்த படைப்பு சுந்தர ராமசாமியின் 'ஜெ ஜெ சில குறிப்புகள்' அவ்வுடைசல்களை வைத்து காப்பியங்களின் வடிவை உருவாக்கிய ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' (1997) உண்மையில் அத்துண்டுகளை அதிகமான அகலத்துக்கு விசிறுவதன்மூலம் அவ்வுடைவை மேலும் அதிகமாக்கியது.// என்றும், அதைத் தொடரும் பத்திகளிலும், சில எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு, "நீ உக்காரு மச்சி அங்க, உனக்கு இடமில்லை இங்க" என்று ostraciஸித்து, பின் நவீனத்துவம் தமிழில் உருவாகவில்லை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டு....

இத்தனையையும் நிராகரிக்க, 'இது கதை' என்ற சாத்தியப்பாட்டைக் கேடயமாக வைப்பதாலேதான் இந்தக் கதைமீது அளவுகடந்த வெறுப்பும், அதன் அருவருப்புத்தரும் நேர்மையின்மையும் குமட்டவைக்கிறது.

சிறுகதைக்கு முன்னுரை எல்லாம் எழுதக்கூடாது என்று ஜெயமோகனுக்கு யாரும் சொல்லவில்லையோ என்னவோ! ஒருவேளை அதுவே ஒரு புரட்சிகரமான புதுக்கண்டுபிடிப்போ என்னவோ!! பின்நவீனத்துவம்! ஹிஹி!! மரத்தடியில் ஒருமுறை சுந்தர ராமசாமியைப்பற்றிக் குறிப்பிடும்போது "அவரது படைப்புக்களில் வார்த்தைகள்கூட சல்லடையில் ஏழுமுறை சலிக்கப்பட்டே பிறகு வெளிவரும்; அது நவீனத்துவம்" என்று கூறியிருந்தார் ஜெயமோகன். படிக்கக் காமெடியாகத்தான் இருந்தது. "சு.ரா சல்லடை ஏழு மைக்ரான் துளைகொண்டது, அது நவீனத்துவம், என் சல்லடை அதைவிடச் சிறிய துளைகள் கொண்டது, அது பின்நவீனத்துவம்" என்ற ரீதியில் கத்திகளைச் சுழற்றுவதை வாசகர்கள் சொன்னால், ரோஸாவசந்த் எங்கோ எழுதியது மாதிரி, ஒரு comprehensive நிராகரிப்பு காப்ஸ்யூல்தான் கிடைக்கும். இருந்தும், கதையின் பின்பகுதியில், அறிவியல் முன்னேற்றத்தின் அசாதாரண சாத்தியங்களுக்கு அப்புறமும், கல்லுக்குள் தேரை போல 'என் சரித்திர'மும், 'பின்தொடரும் நிழலின் குர'லும் அப்படியே படிக்கப்படுகின்றன!!!?!????!?!?!?!??!?!?!??!??? காலத்தால் அழியாத படைப்புக்களா என்ன? இருந்தால் நல்லதுதான்.

"கூகிள் தான் போதிமரம்" என்று ஏதோ ஒரு பதிலில் குறித்து ஜெயமோகன் திண்ணையில் எழுதியதும் நினைவுக்கு வருகிறது. இந்தக் கதை முழுதும் ஒரு பதட்டத் தொனி வியாபித்து நிற்பதாகத் தோன்றுவதற்கும் முந்தைய வாக்கியத்துக்கும் ஏதோ தொடர்புள்ளதாகத் தோன்றுவது நிஜமா என் கற்பனையா?

கதைக்குள் தன்னையே எழுத்தாளன் எழுதிக்கொள்வது என்னும் உத்தி, பழங்காலத்திலிருந்து (1001 அரேபிய இரவுகள்), சமீபகாலத்தில் போர்ஹேஸால் மிக அற்புதமாக உபயோகிக்கப்பட்டதிலிருந்து (அவரது Borges and I என்னும் இந்த அற்புதமான கட்டுரை/கதை/சிறுகுறிப்பை வாசித்துப்பாருங்கள்), லோலித்தா நாவலின் கற்பனையான முன்னுரையிலிருந்து, சமீபத்திய Adaptation படத்தில் சார்லீ காஃப்மேன் போன்ற திரைக்கதாசிரியர்கள் திரைக்கதைக்குள் தங்களையே எழுதிக்கொண்டது வரை பலவிதமாக உபயோகிக்கப்பட்டிருக்கிறது. (நிருபமா சேகர் என்ற சென்னைப் பெண் கூட 'I, unfortunately, am Borges' என்ற கட்டுரையை எழுதிப் பரிசு பெற்றிருக்கிறாள்.) நகுலனின் கதைகளின் நவீனன், சுசீலா கூட நகுலனின் பிளவு என்றே நினைத்துவந்திருக்கிறேன். இப்படி இருக்க, இவை அனைத்தையும் படிக்கும்போது கதைக்குள் தன்னை எழுதிக்கொள்ளும் எழுத்தாளர்கள் மேலான மரியாதையும் நம்பகத்தன்மையும் இந்தக் கதையைப் படிக்கும்போதும், //இருபத்தொன்றாம் நூற்றாண்டு புகழ்பெற்ற புனைகதையாளரான ஜெயமோகனின் என்ற பெயரை நான் சூட்டிக்கொண்டிருக்கிறேன். இக்கட்டுரையயும் அவரது மொழிநடையிலேயே அமைத்திருக்கிறேன்// என்ற வாக்கியத்தைப் படிக்கும்போதும் வராமற்போனது முதல் பகுதியின் அரசியலால் இருக்கலாம், அல்லது, அ-புனைவுக் கட்டமைப்பு கொண்ட கதை என்ற வடிவத்தை வெகு தட்டையாக உபயோகித்ததால் வந்த ஏமாற்றத்தினால் இருக்கலாம்.

//நண்பர்களே அக்கால திறனாய்வாளர்கள் சொல்லிவந்த 'ஆழம்' என்பது என்ன? ஒரு படைப்பு அது சொல்லியவற்றைவிட அதிகமாக ஊகிக்க வைக்கும்போது அது ஆழமானது என்று சொல்லப்பட்டது.//
இந்த வாக்கியத்தை, இரண்டு பக்கமும் சுருக்கைக் கொண்ட ஒரு கயிற்றுடன் ஒப்பிடலாம். இரண்டு சுருக்குகளுக்கும் இரண்டு தலைகள் இருந்தால் எவ்வளவு விபரீதமோ அவ்வளவு விபரீதமாகப் படுகிறது இந்த வாக்கியம். "சொல்லியவற்றைவிட" என்பதை, ஒரு quantifiable விஷயமாகப் பார்த்து "அதிகமாக" என்பதைக்கொண்டு ஆழத்தை அளக்கிறோமா என்று கேள்வி எழுப்பமுடியும் - இந்த வாக்கியம் ஒரு machine for interpretations ஆக இயங்கினால், இந்த வாக்கியத்தின் உண்மையாக இருக்கும். ஆனால், 'எந்தவொரு டுபாகூர் வாக்கியமுமோ படைப்போ இலக்கியம் ஆகிவிடமுடியாது' என்று நிரூபிப்பதற்கு கட்டுரையாசிரியர் (ஹிஹி) ரொம்பக் கஷ்டப்படுவதால் (//ஆனால், அவர்கள் சொல்வது போல இலக்கிய வடிவம் முற்றிலும் அகவயமானதா என்ன? அப்படி என்றால் எந்த ஒரு படைப்பிலும் ஒரு வாசகன் பேரிலக்கியத்தை வாசிக்க முடியுமே. அது இலக்கியம் என்ற இயக்கத்தையே மறுப்பதாகிவிடுமே. அது உண்மை இல்லை. இன்றைய நவீனப் படைப்புகளில் பேரிலக்கியமாகக்.....// என்று தொடரும் பத்தி), இந்த வாக்கியத்தையும், கதையிலுள்ள பிற வாக்கியங்களையும், கதாசிரியர் (அல்லது I within X, X within I என்ற இந்தக் கட்டுரையாளர்) எழுதிய வாக்கியங்களையுமே சற்றுச் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே அணுகலாம். ஏனென்றால், இந்தக் கதைக்குள் இருக்கும்வரை அது முக்கியமான வாக்கியமாகவே இருந்தாகவேண்டும் அல்லவா?

//2065ல் 'விஷ்ணுபுரம்' நாவலை ஆர்.ஜீவரத்தினம் சுட்டிகள் மூலம் செறிவுபடுத்து அதிநாவல்வடிவுக்குக் கொண்டுவந்தது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெரிய நாவல்கள் அனைத்துமே அப்படி உருவமாற்றம் பெற்றன. ஏறத்தாழ எல்லாச் சொற்களிலும் சுட்டிகளுடன் பல்லாயிரம் அடுக்குகள் திறந்துசெல்லும் மாபெரும் அதிநாவலான 'சின்னவெங்கடேசன்' எழுதிய 'பாய்விரிக் கடல்' (2072) அதிநாவல் என்ற வடிவின் உச்ச நிறைவுப்புள்ளி.//

html இணைப்புக்கள்தானா சொல்லமுயல்வது? இதற்குக் கதை எழுதவேண்டாம் என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் பக்கங்கள் gibberish எழுதித்தள்ளி, அனைத்து வார்த்தைகளுக்கும் தானாகவே சுட்டிகொடுக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கிவிட்டால் போதுமென்று நினைக்கிறேன். கணிப்பொறி வல்லுனர்கள் கருத்துச் சொல்லலாம் :). FYI, html கருத்தாக்கத்தை Garden of forking paths போன்ற கதைகள் முன்பே கணித்ததாகக் கூறப்படுகின்றன. அந்தக் கதையில், ஒரு சுழற்பாதையும் புத்தகமும் ஒன்றே என்று வரும்படியான ஒரு புதிர் இருக்கும். மேலோட்ட்டமாக ஒரு சாதாரணக் கதை என்று தோன்றி ஏமாற்றக்கூடிய இந்தக் கதையை சந்தர்ப்பம் வாய்ப்பின் படித்துப் பார்க்கவும்.

//....1982ல் லெஸ்லி ஃபீட்லர் என்பவரால் பின்நவீனத்துவக் கோட்பாடாக முன்வைக்கப்பட்ட அவதானிப்பின் மறுவடிவமே. அதாவது, எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. இனிமேல் கதைகளை மீண்டும் சொல்வதுமட்டுமே சாத்தியம் என்ற விதி. மின்கதை உண்மையில் கதை சொல்வதில்லை. சொல்லப்பட்ட கதைகளின் பேரடுக்கில் இருந்து துணுக்குகளை எடுத்து கதைகளைப் புதிது புதிதாகக் கோர்க்கிறது. கதைக்கூறுகளின் இணைவுகளினாலான ஆட்டமே மின்கதை எனலாம்.//

ஹிஹி, கதை போன போக்கில் லெஸ்லி ஃபீட்லர் என்பது ஒரு வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்ட பெயராகக் கொள்ளலாம். இருந்தாலும், Literature of exhaustion என்பதை அது குறிப்பதாக இருந்தால், அதை முதலில் மொழிந்தது அமெரிக்க எழுத்தாளரான ஜான் பார்த் (John Barth) என்றே நினைக்கிறேன்?!@!?@?? மேலும், சுட்டி குறிப்பிடும் போர்ஹேஸின் கதையான Pierre Menard, Author of the Quixote கதையும் மிக முக்கியமான ஒன்று. அந்தக் கதையைப் படித்துப் பார்த்தீர்களானால் //இக்காலகட்டத்தில் மீண்டும் தனிமனிதர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டன. மீண்டும் எழுத்தாளனும் வாசகனும் உருவாயினர். ஆனால் அச்சொற்களின் பொருள்களே முற்றாக மாறிவிட்டன.// என்ற வாக்கியத்தின் கருத்தாக்கம் எங்கேயிருந்து வருகிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். Pierre Menard கதையிலிருந்து அப்படியே அந்த வாக்கியத்தைத் தருகிறேன், வார்த்தை பிசகாமல்:
"The Cervantes text and the Menard text are verbally identical, but the second is almost infinitely richer. (More ambiguous, his detractors will say-but ambiguity is richness)"
-Collected Fictions, Jorge Luis Borges; Viking, 1998)
எப்படி இது பொருந்துகிறது என்று பார்க்க, கதையைப் படித்துப் பார்க்க முயலவும்.

தூக்கம் வருவதால், இத்தோடு நிறுத்திக்கொள்ளுகிறேன். தலைப்பு இதன் தொடர்புடையதுதான் :)

Saturday, January 15, 2005

பின்னூட்டம்...

வெங்கட் பதிவுக்கு எழுதிய பின்னூட்டம் இது: பின்னூட்டமாக எழுத ஆரம்பித்துவிட்டது ரொம்பக் கொழுத்துவிட்டதால், வெங்கட்டின் பதிவின் பின்னூட்டப் பெட்டியும், இதே விஷயம் தொடர்பான காசியின் பதிவின் பின்னூட்டப் பெட்டியும் திணறிப்போய் நிராகரித்துவிட்ட காரணத்தால், அதை இங்கே பதிவாக இடவேண்டியதாகிப் போயிற்று (இந்த விவரத்தைச் சொல்வதற்குக் காசியின் வலைப்பதிவில் ஒரு வரி எழுதிப் போட முயன்றால், பின்னூட்டப் பொட்டி என்னைப்பார்த்து ஏனோ, 'நீயே தின்னு அதை' என்று கலாய்க்கிறது :-) ?):......
வெங்கட்டின் பதிவு
காசியின் பதிவு
இரண்டையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு, பின்பு கொல்ல நிறைய நேரம் இருந்தால், தேவைப்பட்டால் மட்டும் இதைப் படிக்கவும்; பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்த்தபின் எழுதியது...

வெங்கட், நீங்கள் சொன்ன தசாவதார-பரிணாம ஒற்றுமைகளை நான்கூட பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன். இந்த வரிசை உருவானது, Origin of species ஐ டார்வின் எழுதியதற்குப்பின் தான் என்று யாரேனும் சொன்னால் அது அபத்தம். முதல் மழையில் நனையாதே, தலைவலி வரும் என்று என் பாட்டி சொல்வார். படிக்காத பாட்டி. பின்னால் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, காற்றில் தேங்கியுள்ள கார்பன் மோனாக்ஸைடு, சல்ஃபர் டையாக்ஸைடு போன்ற pollutants எல்லாம் முதல் மழையில் கரைந்து கீழே வரும் என்று படித்தபோது, சரி பழம் கருத்துக்களெல்லாம் ஏதோ மடத்தனமாகச் சொல்லப்பட்டதல்ல என்றுதான் நினைக்கத் தோன்றியது. வீட்டில் மின்சாரம் தடைப்படும்போது "இருட்டுல சாப்பிட்டா உன் சாப்பாட்டை பூதம் சாப்பிட்டுரும்" என்று பாட்டி சொன்னது பூதத்துக்காக அல்ல, இருட்டில் தட்டில் என்ன விழுந்ததென்று தெரியாமல் கரப்பான்பூச்சியையும் தேளையும் கடித்துத் தின்றுவிட்டால் என்ன ஆகும் என்ற முன்னெச்சரிக்கையை ஆறு வயதுச் சிறுவனுக்குச் சொல்வதுபோல் சொல்லும் நாசூக்குதான். அறிவியல் என்பது 'ஒரு' யோசனைமுறைதான். அறிவியல் என்பதுதான் 'ஒரே' யோசனை முறை என்று யோசிப்பது அபத்தம். மேலும், 'அறிவியல்' என்பதை எந்த நிர்ணயங்களைக்கொண்டு வரையறுக்க முடியும்? முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்த நிகழ்வு வெறும் உள்ளுணர்வா (intuition) அல்லது அதையும் அறிவியல் என்று கூறலாமா? எக்ஸ்-ரே கதிர்கள், ரூத்தர்ஃபோர்டு ஆல்ஃபா பீட்டா காமாக் கதிர்களைக் கண்டுபிடித்த கதை, ஆப்பிள் விழுந்ததால் புவியீர்ப்பு விசை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கதை, ஆர்க்கிமிடீஸ் - இவர்களது கண்டுபிடிப்புக்களெல்லாம் உபகரணங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. இவற்றை அடிப்படைக் கருத்தாக்கங்கள் (core findings) எனலாம். உள்ளுணர்வு, கவனிப்பு போன்றவற்றின் அடிப்படையில் உருவான கருத்தாக்கங்கள். தற்போதைய உயிரியலில் அடிப்படை உத்தியான PCR எனப்படும் Polymerase Chain Reactionன் இறுதி வடிவம், அதைக் கண்டுபிடித்த கேரி முல்லிஸுக்கு (Kary Mullis, 1984 Nobel-prizewinner) எங்கேயோ காட்டுக்குள் காரில் போய்க்கொண்டிருந்தபோதுதான் உதித்தது. அறிவியலிலேயே technology based research, hypothesis based research என்று இருக்கிறதே. அப்படியானால் technologyயில் hypothesis இல்லையா என்று கேட்டால், இதற்கு மேல் எனக்கு விளக்கத் தெரியவில்லை.

அப்போ இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கூடங்களை வைத்திருப்பவர்களெல்லாம் சும்மாவா என்றால், அதற்கும் எனக்குத் தோன்றிய பதிலைச் சொல்கிறேன். அப்படிப்பட்ட அடிப்படைக் கண்டுபிடிப்புக்களிலிருந்து கிளைத்துவரும் கருத்தாக்கங்களை சரியா தவறா என்று பரிசோதிக்கவும், அதிலிருந்து கிளைத்துவரும் முடிவுகளை மேற்கொண்டு ஆராய்ந்து பார்க்கவுமே அந்த ஆராய்ச்சிக்கூடங்கள் உபயோகப்படுகின்றன. அதிலிருந்து ஒரு 'பெரும் கண்டுபிடிப்பு' வரச் சாத்தியமுள்ளது என்பதை நான் உட்பட, அனைவரும் ஒத்துக்கொள்வோம். 'பெரும்' என்பதன் metaphysical intangibility தான் 'எவ்வளவு பெரும்' என்ற கேள்வியை விடையற்றதாக ஆக்குகிறது. ஆனால், reinventing the wheel என்பது தேவையில்லை என்பதே அறிவியலின் ஆதாரம் என்று நினைக்கிறேன். சக்கரம் என்ற கருத்தாக்கம் வடிவம்பெற்றபின், சக்கரத்துக்கு வேறு ஒரு வடிவம் தேவையில்லை, உபயோகப்படுத்திக்கொள்ள அதற்கு நாம் அளிக்கக்கூடியது பயன்கள் மட்டுமே என்ற அடிப்படைப் புரிதல்தான் அறிவியலின் உள்ளே இருப்பவர்களையும் வெளியே இருப்பவர்களையும் பிரிக்கிறது என்று நினைக்கிறேன்.

பழம் நம்பிக்கைகளைக் காரணமில்லாமல் குத்திக் குத்திக் கொண்டிருப்பவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ரிவர்ஸில் போய் யோசியுங்கள் - சக்கரம் என்ற கருத்தாக்கமே கிடையாது, சக்கரம் சம்பந்தப்பட்ட அத்தனை உபயோகங்களும் கிடையாது, சக்கரம் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோகங்களும், பாடல்களும், ஓவியங்களும், கவிதைகளும், ஏன், எந்த நிகழ்வுக்கான சாத்தியங்களும் கிடையாது என்றிருக்கும்போது, அக் காலகட்டத்தில் தன் வீட்டைவிட்டு (அல்லது குகையைவிட்டு) வெளியே வரும் ஒரு மனிதன் அல்லது குரங்கு இடத்தில் நம்மை வைத்து, 'ஐயோ நான் விரைவில் அங்கே போகவேண்டுமே, எப்படிப் போவது' என்று யோசித்தால் எப்படியிருக்குமென்று பாருங்கள். உடனே, டக்கென்று ஒரு சக்கரத்தை வடிவமைத்து, அதில் ஒரு வண்டியையும் கட்டி கடகடா கடகடா என்று பிரயாணம் கிளம்பிவிடமுடியுமா என்ன? Necessity is the mother of invention என்ற, உபயோகித்து உபயோகித்து overuse atrophy ஆகிவிட்ட வாக்கியம் தான் இப்போதும் உண்மை. Necessity என்பது physical shift அல்ல, அது ஒரு non-physical shift. ஜாதி, மத, மொழி, சமூக, தனிமனிதத்துவம் என்று எந்த முன்னிணைப்பையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். Physical shift என்பது ஒரு விண்கல் பூமியின்மேல் மோதி அனைத்தையும் சாகடிப்பது. அதைப்பற்றி நாம் (பிழைத்திருப்பின்) கற்கத்தொடங்குவோமானால், அச்செயலை மோதலுக்கு முன்பிருந்த மனோநிலையைவிட்டு நகர்ந்த ஒரு அ-பௌதீகப் பெயர்வு என்று அழைக்கலாம்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது அறிவிலித்தன்மையின் உச்சம் எனமுடியும், என்பவர்களும் உள்ளார்கள். அவ்வளவு கடவுள்கள் இருந்தால் வானம் இந்நேரம் இடிந்து நமது தலைமீது விழுந்திருக்காதா என்றும் கேட்கமுடியும், ஏனய்யா கடவுள் என்றால் மேலேதான் இருக்கமுடியுமா கீழே இருக்கமுடியாதா என்றும் கேட்கமுடியும். என்னய்யா இது விழுறதுக்கு ஒரு சாமி, எந்திரிக்கறதுக்கு ஒரு சாமி, தூங்கறதுக்கு ஒரு சாமி என்று எல்லா மாதிரியும் கேட்டு நமது அறிவைக் கூர்தீட்டிக்கொள்ளலாம், தப்பே இல்லை. ஆனால், Carl Linneaus பதினெட்டாம் நூற்றாண்டில் Taxonomy என்ற துறைக்கு வித்திட்டு, Systema Naturae பதிப்பித்தது முதல் இன்று நாம் வந்திருப்பது வரை அறிவியல் முன்னேறியிருக்கிறதா பின்னேறியிருக்கிறதா? இன்றைக்கு ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது என்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு ஆதர்சிக்கப்படவேண்டிய சாதனையே. அந்தக்காலத்திலும் நமது முன்னோர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற அடிப்படை, தீக்கு ஒரு கடவுள், நீருக்கொரு கடவுள், தொடங்குவதற்கொரு கடவுள், இறந்த மனிதர்களின் தெய்வீகப்படுத்தல் என்று அவர்கள் அனுமானித்ததன் பின்புலத்தின் அடிப்படையும் இதேதான் என்று நினைக்கிறேன். Divine taxonomy என்று இதற்கு ஒரு பெயரும் கொடுக்கலாம்; ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் அதை பால் தாக்கரே சொல்கிறாரா இல்லை நம்மைப்போன்ற சாமானியர்கள் சொல்கிறார்களா என்பதைப்பொறுத்து அதன் தாக்கம் வேறுபடவே செய்யும்.

Chaos is the ultimate order என்றும் வாதிடலாம். அதான் சொன்னேனே முன்னமே; ஆனால், ஒழுங்குபடுத்தல் என்பது அறிவியலில் முக்கியமான அம்சம். நாம் விரைவில் செத்துப்போகாமல் இருக்கவேண்டுமென்று மருந்துக்களைக் கண்டுபிடிக்கவேண்டும். மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அதற்குத் தொடர்பான உயிரினங்கள் குறித்துத் தெரியவேண்டும் - உதாரணத்துக்கு செடிகள் (மருந்தை extract செய்ய), சோதனை எலிகள் (சோதித்துப் பார்க்க) இத்யாதி. செடிக்கும் சோதனை எலிக்கும் ஒரே பெயரைக் கொடுத்தால், ஆராய்ச்சி செய்யும் ஆசாமி எலியிருந்து மருந்தை extract செய்யமுயன்று செடியில் அதைச் சோதிப்பதுபோன்ற மடத்தனமான விபத்துக்கள் நிகழும், நிகழ்வதால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமுமில்லை. கை, கால், தலை, காது, மூக்கு, வாய் அனைத்துக்கும் 'இ' என்ற ஒரே பெயர் இருக்குமானால், 'இ கொடு' என்று யாராவது சொன்னால் கையைக் கொடுப்பதா காலைக் கொடுப்பதா வாயைக் கொடுப்பதா? இதற்கெல்லாம் இருக்கும் அடிப்படைதான் முதலில் யோசிக்கத்தொடங்கிய குரங்குகளுக்கும் (ஏன் சாமி, அமீபா யோசிக்காதா? உனக்குத் தெரியுமா?) இருந்திருக்குமென்பது என் அனுமானம். மூளை வளர வளர, கடவுள்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்து வைத்திருப்பார்கள்.

கண் தெரியாத ஒருவனுக்கு ஒரு ஈட்டியைக் கொடுத்துத் தடவிப்பார்க்கச் சொன்னால், அதன் வடிவத்தை அவனால் ஒருவகையில் உணரமுடியும். அவனுக்குப் பார்வை கொடுத்து, ஈட்டி, அம்மா, ஆடு, இலை, ஈ, உடுக்கை, ஊஞ்சல் என்ற அனைத்துப் பொருட்களையும் அவன்முன் வைத்து இதில் நீ தடவி உணர்ந்த பொருள் என்ன என்று பார்த்து மட்டும் கண்டுபிடி என்றால் அவனால் கண்டுபிடிக்க இயலாது என்று நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதே நிஜம்.

பரிணாமம் (evolution) என்பதை நாம் ஒத்துக்கொண்டிருக்கும் காரணம், அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. பின்னொரு காலத்தில் வேறொரு கருத்தாக்கம் பரிணாமத்தை மறுத்து, தன்னை நிரூபிக்கவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் கூடும் என்பதும் உண்மையே. அந்தக் கருத்தாக்கத்தின் அணுகுமுறைகளும் இப்போதைய அறிவியல் அணுகுமுறைகளை ஒத்ததாயின், அது 2005ல் நின்று ஆராயாது. முடிவிலிக்கும் (அல்லது ஏதோ ஒரு வருடத்துக்கும்) 200005க்கும்(?) இடைப்பட்ட காலத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, 2005 ஐயும் அந்தக் காலகட்டத்தையும் வெறும் சில data-points ஆகவே எடுத்துக்கொண்டு ஆராயும். பரிணாம வளர்ச்சி என்பது இன்னும் 5000 வருடங்களில் காணாமற்போனால், அதற்கடுத்து வரும் உயிரினங்கள் (உயிர் என்றால் என்ன என்று இங்கே வரும் கேள்விக்கு இத்தனை வருட அறிவியல் பதிலளிக்க முடியவில்லை) பெருகுவது (பெருகுவதா, ஏன் சிறுகக்கூடாதா? ஒன்றிலிருந்துதான் பலது தோன்றவேண்டுமா, ஏன் பலது தோன்றி ஒன்றாகக் குறுகக்கூடாதா) எத்தன்மை கொண்டதாயிருக்க முடியும் என்று யாராலாவது யூகிக்க முடிகிறதா?

இதேபோல்தான், DNA வை விட்டால் வேறு மரபியல் எக்ஸ்பிரஸ் பஸ்ஸே கிடையாது என்றார்கள். டி.என்.ஏ தேவையே இன்றி வெறும் புரதங்கள் மட்டுமே Non-Mendelian மரபியல் ரீதியில் (non-mendelian inheritance) உருவாக்கும் நோய்களின் முடிவான காரணங்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை ஆதிக்கம் பெறும்போது (பெற்றால்), வாட்ஸனுக்கும் க்ரிக்குக்கும் டி.என்.ஏவுக்கும் இருக்கும் கவனிப்பு குறையும் என்றும் யூகிக்கலாம்.

ஏதோ ஒரு நினைப்பில் எழுதித்தள்ளிவிட்டதில் அங்கங்கே சுளுக்குப் பிடித்து என் காலை நானே மிதித்துக்கொண்டிருக்கலாம் - தோன்றியதைச் சொல்லுங்கள், தவறிருப்பின் சுட்டிக்காட்டுங்கள். கோர்வையாக இல்லாமலிருப்பின் மன்னிக்கவும். அவ்வளவுதான் இன்றைக்கு முடியும்.

Thursday, January 13, 2005

ஒழித்தெறிந்த இன்றைய பொழுது

//நான் சினிமாவுக்கு விரோதி அல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்

கலை, பண்பாட்டு இயக்கம் சார்பில் திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராமதாஸ் பேசியது:

அனைத்து வீடுகளிலும் டிவிடி வந்துவிட்டது. குறைந்த செலவில் விசிடியிலேயே திரைப்படங்களை பலர் பார்க்கலாம். எனவே நீங்கள் (திரையுலகினர்) ஏன் தியேட்டருக்கு போகச் சொல்கிறீர்கள்.

தியேட்டர்கள், திருமண மண்டபங்களாக மாறுவதாக ஒருவர் கூறினார். என்னைப் பொறுத்தவரை சினிமா தியேட்டர்கள் அனைத்தும் திருமண மண்டபங்களாக மாறவேண்டும் என்றுதான் சொல்வேன். திரைத்துறையைச் சேர்ந்தவர்களே சிடியை தயாரித்து மக்களுக்கு விற்கலாம்.//
(சிஃபி தமிழ் செய்திகளிலிருந்து...)

ராமதாஸ்!! கல்லூரிக்குப் போய் டாக்டருக்குப் படி என்றால், ஜாதிக்கட்சி நடத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டு வந்துவிட்டு, இப்போது சமூகநலப் போதனை வேறு!! அனைத்து வீடுகளிலும் டிவிடி இருக்கிறதென்றால், பிறகு இவர்களெல்லாம் எதற்கு ஊர் ஊராக அலைந்து கூட்டம் நடத்தவேண்டும், ஒரு டிவிடி படம் எடுத்து விநியோகித்துவிடலாம். ஆஸ்பத்திரிக்குப் போகாமல், நோயாளி வீட்டுக்கே ஒரு சுயவிளக்க அறுவைசிகிச்சை டிவிடி அனுப்பி, கூடவே கத்தி கபடாக்களையும் அனுப்பிவிடலாம், நீயே அறுத்துத் தைச்சுக்க கண்ணு என்று. ஓட்டுக்கேட்கப் போகும்போது எதற்கு தெருத்தெருவாக அலையவேண்டும்? ஆயிரம் டிவி பொட்டிகளையும் பிரச்சார டிவிடிக்களையும் தமிழ்நாடு முழுக்க அனுப்பிவிட்டால் போகிறது.

என்னதான் இருந்தாலும், அவரது அறிவுரையை ஒருமுறை பாருங்களேன்!! சினிமா எடுப்பதைவிட்டு டிவிடி எடுத்து விநியோகிக்கவேண்டுமாம். ஹிஹி, எல்லாம் நம்ம நேரம். காலச்சுவடைத் திறக்கலாம்னு சிஃபி தளத்துக்குப் போனால் இது கண்ணில் பட்டுத்தொலைகிறது. இன்னிக்குப் பொழுதை தண்டத்துக்கு ஒழித்தாயிற்று (அதான் தெரியுதே), போனாப் போகிறது போ.

ஸ்வஸ்திகா

தரையில் விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்பதுபோல, அரசகுடும்பத்தில் பிறப்பதால் மட்டும் தலையில் சரக்கிருக்கத் தேவையில்லை என்று நினைக்கவைக்கிறது இந்தச் செய்தி. பாவம் சின்னப்பையன் ஏதோ தெரியாமல் பண்ணிவிட்டான் என்று நினைக்கவும் தோன்றுகிறது, இல்லை உலகத்துக்கு நாஸிகள் செய்த கொடூர சமூகசேவை என்ன என்றுகூட சொல்லிக்கொடுக்காமலா வளர்த்தார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சைமன் வைஸந்தால் மையம், ஆஷ்விட்ஸுக்குப் போய் வருத்தந்தெரிவிக்கச் சொல்லியிருக்கிறது.

கலப்பையும் தமிழும் thamizum கையெழுத்தும்

எனக்குத் தெரிந்தவர் ஒருவரிடம் eKalappai பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். இங்கேயே தங்கிவிட்டவர்கள் அவரது குடும்பத்தினர். குழந்தை பள்ளிக்குச் செல்கிறது (மூன்றாம் வகுப்பு என்று நினைவு). மகளுக்கு ஆங்கிலத் தட்டச்சு தெரிந்தால் தமிழையும் கணிப்பொறியிலேயே அடித்துப் பழகலாம் என்றுகொண்டிருந்தேன். அவரது மகளுக்கும் அது அப்போது உபயோகமாயிருக்குமே என்று பொதுவாகச் சொன்னார். அவரது மகள் தமிழ் பேசுவாள், புரிந்துகொள்வாள் என்றாலும்கூட, எவ்வளவுதூரம் எழுதப்படிக்க வரும் என்று தெரியாது. நானே ஒலிசார்ந்த தமிழ்த் தட்டச்சு செய்ய ஆரம்பித்தபோது இதைப்பற்றி நினைத்திருக்கிறேன் - தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு சிறுவனோ சிறுமியோ புதிதாகத் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது, கையெழுத்துப் பயிற்சியின்றி தட்டச்சில் (அதுவும் ஆங்கில ஒலியியல் முறைப்படி) தமிழ் பழகுவது என்பதன் நிறை குறைகள் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். நான் முதலில் ஆரம்பித்தபோது, ஆங்கில ஒலியியல் முறைப்படித் தட்டச்சா என்று தயங்கினாலும், தமிழில் எழுதவாவது முடிகிறதே என்ற உற்சாகம்தான் பிற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முன்னின்றது. ஒருவேளை இதைப்பற்றி முன்பே தமிழ் வலைப்பதிவர்கள் பேசியிருக்கக்கூடும். ஒருவேளை இல்லையெனில், எனக்குத் தோன்றிய சில கேள்விகள்:

1) புதிதாகத் தமிழ் கற்கும் சிறார் நேரடியாக ஆங்கில ஒலியியல்வழியாகத் தட்டச்சு செய்தால் (கையெழுத்து கற்பிக்கப்படாதமட்டில்) அவர்களது தமிழ் எப்படியிருக்கும்? அவர்களது மொழிவளம் மற்றும் அவர்கள் மூலமான பொது மொழிவளம் எவ்வகையில் குறையும்/கூடும்?

2) கையெழுத்துத் தமிழ் பழகுவது அவசியமா, அல்லது அது தேவையே இல்லையா? (குட்டென்பெர்க் அச்சு யந்திரத்தில் பைபிள் அச்சிடப்பட்டபோது தொட்டு இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் இதேபோல எண்ணற்ற வாதங்களும் கேள்விகளும் இருந்திருக்குமென நினைக்கிறேன்.)

3) மேலிரண்டு கேள்விகளும், அந்நிய மொழிச் சூழலில் இருக்கும் தமிழ்ச் சிறாரைக் குறிப்பது எனினும், தமிழ்நாட்டிலேயே, ஆங்கிலக் கல்வி என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்ட சூழலில், அத்தகைய மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் தமிழைக் கணினி மூலமாவது பழக்கவைக்க முடியுமா?

இந்தக் கேள்விகளனைத்தும் அரதப்பழசு எனிலோ, ஏற்கனவே பதிலளிக்கப்பட்டுவிட்டன எனிலோ, சந்தர்ப்பப்படும்போது அது சம்பந்தப்பட்ட சுட்டிகளைப் பின்னூட்டத்தில் இடுங்கள், படித்துப் பார்த்துக்கொள்கிறேன்.

Wednesday, January 12, 2005

'சிலர்'

யார் அந்த 'சிலர்' என்றுதான் புரியவில்லை. ஜெயலலிதாவா, கருணாநிதியா, இல்லை வேறு யாராவது அரசியல்வாதியா, இல்லை சங்கரமடத்துடன் சம்பந்தமில்லாத பொதுஜனமா? என்னதான் சார்புநிலைப் பத்திரிகை என்றாலும், படிப்பவர்கள்மேல் சற்றாவது மரியாதை உள்ளதா இவர்களுக்கு? இதற்கு ஒரு 'நமது சிறப்பு நிருபர்' வேறு. அமெரிக்க ஸ்டைலில் 'embedded journalist' என்று சொல்லலாமென்று நினைக்கிறேன். அதுகூட, embedded to the field கிடையாது, embedded to the desk!!

Tuesday, January 11, 2005

முதிய முகங்கள்


புகைப்படம்: அமேசான் (ஆமஸான்?!!)

இரண்டு தாத்தாக்கள் ரயில்வே ஸ்டேஷனின் நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள். எதிரே உற்சாகமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு மூன்று இளம்பெண்கள். தாத்தாக்கள் பெண்களை நிறுத்துகிறார்கள்.
"டிக்கெட் இருக்கா?"
பெண்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். எங்கே இருக்கு டிக்கெட்டு? ஒரு தாத்தா, போனாப் போகுது போ விட்டுடு என்கிறார். மற்றொரு தாத்தா சிலவினாடிகள் யோசிக்கிறார்.
"விட்டுடலாம். ஆனா நீங்க மூணு பேரும் எங்களுக்கு ஆளுக்கொரு முத்தம் கொடுக்கணும்."
பெண்கள் குபீரெனச் சிரித்துவிடுகின்றனர். மூவரும் மெலிதாக தாத்தாக்களை முத்தமிட்டுவிட்டு பிளாட்ஃபாரத்தில் ஓடி மறைகின்றனர். தாத்தாக்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. ஒரு பெருமூச்சுடன், கடந்த காலங்களை அசைபோட்டுக்கொண்டு தொடர்ந்து நடக்கின்றனர்.

Autumn Spring என்ற செக் மொழிப் படத்தில் பார்த்த காட்சி இது. அற்புதமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது எனினும், வயதானாலும் கூட (இருவருக்கும் கிட்டத்தட்ட எண்பது வயது), பிள்ளையில்லா வீட்டில் துள்ளி விளையாடும், டுபாகூரைத் தொழிலாகக் கொண்ட இரண்டு தாத்தாக்களைப் பற்றிய கதைதான் அந்தப் படம். ஆபத்தற்ற தமாஷ்களைத் தொடர்ந்து செய்கின்றனர் இரண்டு தாத்தாக்களும். ஃபாண்டா என்ற தாத்தாதான் மூளை, எட் என்ற மற்றத் தாத்தா ஒரு கைத்தடி!! இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்திருக்கும் இசைவல்லுநர் அல்லது பெரும் பணக்காரர் என்று ரீல் சுற்றி மில்லியன் கணக்கில் விலைமதிப்புள்ள மாளிகைகளை விலைபேசுவதுதான் இவர்கள் பொழுதுபோக்கு. தனது ஓய்வூதியத்தையெல்லாம் டாம்பீகமாக ஃப்ரெஞ்சு உணவகங்களில் சாப்பிட்டும் டிப் அளித்தும் சிறுபிள்ளை மாதிரித் திரியும் தறுதலைத் தாத்தா ஃபாண்டா, தனது பொறுப்பான மனைவி தங்களது இறுதிச்சடங்குகளுக்குச் சேர்த்துக்கொண்டிருக்கும் பணத்திலும்கூட ஒருசமயத்தில் கைவைத்து விடுகிறார்.

அல்டிமேட்டாக, தாத்தா தன் நண்பர் வீட்டில் போய்ப் படுத்துக்கொண்டு, தன் மனைவிக்குத் தான் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவிக்கச்சொல்கிறார்! கறுப்புக் கோட்டையெல்லாம் எடுத்துக்கொண்டு சவ ஊர்தியையும் அழைத்துக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வரும் பாட்டியம்மா, கிழங்கு மாதிரி தாத்தா ஒயினைக் குடித்துவிட்டு போலியாகப் படுத்துக்கிடப்பதைப் பார்த்து வெறுத்துப் போய் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிடுகிறார். அதன்பிறகும் படம் இருக்கிறது...

எழுதநினைத்தது - ஃபாண்டா, அவரது மனைவி இருவரின் முகங்கள் பற்றி. குண்டான உருவம், ஒன்றரைக் கிலோவுக்கு தாடைச் சதை, கண்ணுக்குக் கீழே தொங்கும் பைகள், உருகி வழியும் கன்னம் என்று இருக்கும் அந்த முகங்கள் உருவாக்கும் பிம்பத்தைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற முகங்களை நமது படங்களில் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தேன். முதியவர்களை மையமாக வைத்து எத்தனை படங்கள் வந்திருக்கின்றன? எனக்குத் தெரிந்து தபரணகதவில் சாருஹாசனும் வீடு படத்தில் சொக்கலிங்க பாகவதரும்தான் நினைவுக்கு வருகிறார்கள். அதற்குமேல் முதியவர்கள் என்று சமீபகாலத்தில் யோசித்துப் பார்த்தால் விஜயகுமாரும், அவர் பட்டக் பட்டக் என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொள்வதும்தான் நினைவுக்கு வருகிறது. தப்பினால், சரத்குமார் அல்லது விஜயகாந்த் மூன்று தலைமுறைகளாக ஏதாவது படம் நடித்தால் அதில் வரும் ஒரு கிழவேசத்தைப் படம்பார்க்காமலே சொல்லிவிடலாம். வயிற்றுக்கு ஒரு தலையணை, வெள்ளை முடி, வெள்ளை மீசை, அடித்தொண்டை குரல் என்று ஒரு custom-made செயற்கைக் கிழட்டு முகம். இது தவிர தமிழ்ப்படங்களில், நினைவில் தங்கக்கூடிய பிற முதிய முகங்களைப் பார்த்திருக்கிறேனா? ம்ஹூம். முதல் மரியாதை, விடுகதை போன்றவை, midlife crisisல் சிக்கிக்கொள்ளும் மத்திம வயதுக்காரர்களைப் பற்றிய படங்கள் என்றுதான் நினைக்கிறேன். இந்தியன் என்று யாரும் சொல்லிவிடாதீர்கள்; நான் சொல்வது, மேக்கப் அற்ற அசல் முதிய முகங்களை. முதியவர்களைப் பற்றிய படங்கள்/அல்லது செயற்கைத்தனமற்ற அசல் முதிய பாத்திரங்கள் ஒன்றுகூட நினைவில் வராமல் போவது வெறுமனே படங்கள் என்ற ரீதியில் நின்றுவிடாமல், நமது நிஜ வாழ்வில் மூத்தோரின் பங்கே அவ்வளவுதானா என்று கேட்கத்தோன்றுகிறது. இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனினும், குடும்பக்கதைகள் தவிர்த்து வேறு கதைகள் முதியோரைப்பற்றி வரமுடியுமா என்று யோசித்துப் பார்க்கிறேன்... எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்'? அதிலிருந்து தொடங்கலாம் முதலில்!!

Friday, January 07, 2005

ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த கட்டுரையில் சில வரிகள்

டைம் பத்திரிகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கட்டுரை (சில வாரங்களில் இந்த இணைப்பு காலாவதியாகி, subscriptionக்குப் போய்விடுமென்று நினைக்கிறேன்). முன்பே பாலிவுட் பற்றிய கட்டுரை ஒன்று டைம் வாரப்பத்திரிகையில் வந்தது. அதிலும் ரஹ்மான் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அதில் சில வரிகள் படித்து நெளிந்தேன். ரஹ்மானே இதைச் சொன்னாரா இல்லை சற்று உப்பு மிளகு சேர்த்து கட்டுரையாளரே (ரிச்சர்டு கார்லிஸ்) எழுதிவிட்டாரா என்று எனக்கு விளங்கவில்லை. இப்போது ரஹ்மானைப்பற்றிய தனித்த இந்தக் கட்டுரையிலும் அதே வரிகளை மறுபடி உபயோகப்படுத்தியிருப்பதால், இங்கே இடுகிறேன். இவைதான் அந்த வரிகள்:

Tamil soundtracks sell probably half a million, Telegu sells probably 1 million, Hindi is like more than 6 or 7 million." He added: “In India, we don’t get royalties. Otherwise I’d be a very rich man. I wouldn’t have to come to America!
(ஆதாரம்: டைம் இணையப் பதிப்பு, கட்டுரையின் தலைப்பு: That Old Feeling: Isn't It Rahmantic? ஜனவரி 1, 2005; கட்டுரையாசிரியர்: Richard Corliss)

அனைத்து இந்திய மொழிகளிலும் விற்ற காசெட்டுகள், இசைத்தட்டுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், மைக்கேல் ஜாக்ஸன், பீட்டில்ஸ் போன்றவர்களைவிட அதிகமாகவே ரஹ்மான் இசைத்தட்டுக்கள் விற்றிருக்கும் என்ற கூற்றைத் தொடர்ந்து மேற்கண்ட வாக்கியங்கள் கூறப்பட்டுள்ளன. இதே வாக்கியங்களை, இதற்கு முன்பே பாலிவுட்டைப் பற்றி ரிச்சர்டு கார்லிஸ் எழுதிய A Cultural Grand Salaam கட்டுரையிலும் படித்திருக்கிறேன் என்பதால், ஏதோ இடறியது. உண்மையாக இருக்குமா பொய்யாக இருக்குமா என்று ஒரு ஆர்வம்.

அமெரிக்காவுக்கு ரஹ்மான் வந்ததே ஏதோ பணத்துக்காகத்தான் என்பதுபோல் தொனிக்கும் இந்த வாக்கியத்தை ரஹ்மான் சொன்னாரா என்று தெரியவில்லை. சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைத்துக்கொள்கிறேன். இருந்தாலும்...

முன்னொரு காலத்தில் நமது ஜே.எம்.லிங்டோ பிபிசி மைக் கிடைத்ததென்று ஓய்வுபெறும் சமயத்தில் திடீரென்று முதுகெலும்பு முளைத்து இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்று கமெண்ட் விட்டது போல உணர்ச்சிவசப்பட்டு இதுமாதிரி ஏதும் ரஹ்மான் சொல்லியிராமலிருந்திருந்தால் நல்லது.

அறிவியல் புனைகதை - நாக்கு

இதை எவ்வளவு தூரம் அறிவியல் புனைகதை என்று கூறமுடியுமென்று தெரியவில்லை. ஆனாலும், பரவாயில்லை நல்ல கதை என்றே நினைக்கத் தோன்றுகிறது. புலன்களைப்பற்றிய கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. இத்தாலோ கால்வினோவின் ஒரு சின்ன குறுநாவல் தொகுப்பு உண்டு - Under the Jaguar Sun. அதில் முதல் கதை (அதன் பேர்தான் தொகுப்பின் தலைப்பும் - Under the Jaguar Sun), கிட்டத்தட்ட இதே மாதிரியான கதைதான். அதில் எனக்குப் பிடித்ததெனில் A King listens கதையைச் சொல்லலாம். நாக்கில் மது எங்கே பாய்கிறது என்று தீர்மானிக்கும் மதுக்கோப்பைகள் போலத்தான் கதைகளும்! என்னதான் இருந்தாலும், பிளாஸ்டிக் தம்ளரில் ஊற்றிக்குடித்த காலங்களே வேறு. ஸ்படிகக் கோப்பைகளில் குடித்தால்கூட அப்படி வராதென்று நினைக்கிறேன். ஹூம்... பழைய நினைவுகள்!!

Wednesday, January 05, 2005

க்ளிம்ட், விமர்சனங்கள்

எங்கள் ஆய்வுக்கூடத்தை வேறு தளத்துக்கு மாற்றவேண்டியிருந்ததால் சில நாட்களாக பொருட்களை எடுத்தல், நகர்த்தல், மேலும் கீழுமாகத் தள்ளுவண்டி ஓட்டுதல், அடுக்குதல், மாற்றி அடுக்குதல் என்றே நேரம் போய்விட்டது. புது வருஷத்தின் முதல் நாளில் விடியற்காலையில் கோணல்மாணலாகப் போய்க்கொண்டிருந்த எனது காரை நிறுத்தி, ஓட்டுனர் உரிமம் கேட்டு, என்ன நல்ல மூடோ, உர்ரென்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்த என்னை, 'ஒழுங்காக பக்கத்திலிருக்கும் உன் நண்பன் வீட்டில் போய்த் தூங்கிவிட்டுப் பிறகு உன் வீட்டுக்குப் போ' என்றதுடன் விட்டுவிட்ட போலீஸ்காரருக்கு ஆயிரம் வந்தனங்கள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பன் மூச்சை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். கடவுள் காப்பாற்றினார்!!

சி.என்.என்னில் நேற்று செய்திகளுக்கடியில் சின்னதாக ஒரு வரி ஓடிக்கொண்டிருந்தது - "ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட்டாக (Gustav Klimt) ஜான் மால்க்கோவிச் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வியன்னாவில் தொடங்கியது". முன்பு ஒரு பதிவில் கூட க்ளிம்ட் பற்றிப் போகிறபோக்கில் குறிப்பிட்டிருந்தேன். The Kiss என்பது, வாழ்த்து அட்டைகள்வரை வந்துவிட்ட க்ளிம்ட்டின் மிகப் பிரபலமான ஓவியம். அதைத் தாண்டியும் க்ளிம்ட்டின் ஓவியப் பரப்பு விரிந்திருப்பதாலும், என்னை மிகவும் வசீகரித்த ஓவியர்களில் க்ளிம்ட்டும் ஒருவர் என்பதாலும், மால்க்கோவிச் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவர் என்பதாலும் படத்தைப்பற்றி ஒரு சுவாரஸ்யம். 2005ல் திரைப்படம் வெளிவரும் என்று IMDB சொல்கிறது.

க்ளிம்ட்டின் ஓவியங்களில் பலவற்றின் வசீகரத்துக்குக் காரணம் அவற்றின் அதி அபரிமிதமான ஆடை, ஆபரண அலங்காரங்கள். தங்க நிறமும், அவரது விரல்களின் நீளம் ஒரு அங்குலம் தானோ என்று எண்ணவைக்குமளவு அதிநுணுக்கமாக வரையப்பட்ட வேலைப்பாடுகள் கொண்ட ஓவியங்கள், மீயதார்த்தத்தின் விளிம்பில் கைகட்டி நிற்கும் உருவச்சித்திரங்கள் (portraits), உள்-வெளியாகத் தலைகீழாக உருவப்பட்ட சாக்ஸ் போல வித்தியாசமான பார்வைக்கோணத்துடனான Auditorium in the Old Burgtheater போன்ற கட்டிட ஓவியங்கள், பிற்காலத்தில் கிழக்கத்திய நிறங்கள் நிரம்பிய கலைடாஸ்கோப் போன்ற ஆடையாபரணங்களைக்கொண்ட ஓவியங்கள் என்று விரிந்திருக்கும் அவரது ஓவியப்பரப்பின் மைய இழைகள் பெண்களும், உடற்கிளர்ச்சியும் (எரோட்டிசிஸம்). முதன்முதலில் க்ளிம்ட்டின் ஓவியங்களைப் புத்தகங்களில் பார்த்தபோது பளீரென்று தனித்துத் தெரிந்தது, அவற்றின் செதுக்கு திறன். Portrait of Adele Bloch-Bauer I என்னும் ஓவியம்தான் முதலில் பார்த்த சில ஓவியங்களில் நன்றாக நினைவிருப்பது.


Mark Harden

தங்கத் துகள்கள் சிதறிப் பக்கமெல்லாம் பறந்து குவிந்து கிடப்பது போலவும், அதன் மத்தியில் அவற்றின் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு எழும் பெண் முகமும் மேற்புற உடலும் எண்ணற்ற வெவ்வேறு சருகுகளாகப் பிரிந்து ஓவியப்பரப்பு முழுதும் பரவியலைந்தன. பிற்காலத்து ஓவியங்கள் இந்தளவு நிறஆழ வேறுபாடுகள் (contrast) இன்றி, ஆபரணங்களின் ஆழம் குறைந்து, பிற நிறங்களின் பின்னணியில் உடலின் ஒத்திசைவை, அழகின் வெளிப்பாட்டைச் சித்திரிக்கின்றன. Portrait of Mada Primavesi என்னும் படத்தில் இடுப்பில் கைவைத்துக்கொண்டு நளினம் பற்றிய அக்கறையின்றி யதார்த்தமாக நிற்கும் வெளிறிய பெண்ணும் (கர்ப்பிணியா அவள்?) அவளது உடையும் சுற்றுப்புறங்களும், Water serpents போன்ற சில ஓவியங்களின் நிறப்பிரகாசங்கள் க்ளிம்ட்டின் பிற ஓவியங்களின் நிறப்பிரகாசங்களிலிருந்து சற்றே வேறுபட்டவை, மென்மையானவை. பழைய மறுமலர்ச்சி (Renaissance) ஓவியங்களிலும் அதற்கு முந்தைய ஓவியங்களிலுமிருந்த நிர்வாணம் பற்றிய, அதன் மென்மை பற்றிய கருத்தாக்கங்களை, உருவச்சித்திரங்கள் மூலம்கூட இடித்துப் பார்த்திருக்கிறார் அவர்.

இதை எழுதும்போது நடுநடுவில் வலைப்பதிவுகளைச் சற்றுநேரம் மேய்ந்துகொண்டிருந்தபோது ரோசாவசந்த்தின் 'குமட்டல் வாரங்கள்' பதிவு சிக்கியது. பதிவுகள் சுட்டியைச் சுட்டியதும், சரி, ஏதாவது திட்டல் கடிதமாக இருக்கும், அல்லது நமக்குப் பழக்கமான வசைபாடலாக இருக்கும் என்று நினைத்தால்!! வக்கீல் நோட்டீஸ். கிழிஞ்சது லம்பாடி லுங்கி. நல்லவேளை, காலச்சுவடு விட்ட வக்கீல் நோட்டீஸ் ஏதும் எக்ஸிஸ்டென்ஷியலிஸ ஜூமாக்ஸுகளுடனும் அல்பேர் கம்யூ மேற்கோள்களுடனும் இல்லை. சரி, இதேபோன்ற விஷயங்கள் பலருக்கும், ஏன், நமது க்ளிம்ட்டுக்கும் நிகழ்ந்திருக்கிறதே, சும்மா சும்மா ஏகப்பட்ட மயிரோட அம்மணமாப் படம் வரைஞ்சு நாறடிக்கிறாயே என்று அவரையும் குற்றம் சாட்டியிருக்கிறார்களே அந்தக்காலத்துப் பண்டித சிரோன்மணிகள், அதற்கு அவர் எப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் என்று பார்த்தேன். க்ளிம்ட் செய்தது என்ன? தங்கமீன் (Goldfish) என்று ஒரு ஓவியம் வரைந்திருக்கிறார். இதே பெயரில் பால் க்ளீயின் (Paul Klee) ஒரு ஓவியமும் இருக்கிறது. அது வேறு. க்ளிம்ட்டின் Goldfish aka To my critics ஓவியத்தைச் சுட்டியைச் சுட்டிக் கண்டுகளிக்கவும்! அதுதான் க்ளிம்ட்டின் மீதான விமர்சனங்களுக்கு அவரது பதிலடி.

யார் கண்டது, அந்தக்காலத்தில் க்ளிம்ட் கூட வக்கீல் நோட்டீஸ் விட்டாரா, தண்ணியடித்துவிட்டுக் கூவினாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இருந்தாலும், விமர்சனங்களைக் கலையால் எதிர்ப்பவர்களின் உரம் எங்கே, இது எங்கே. பேசாமல், க்ளிம்ட் சொன்னதைச் செய்யவேண்டியதுதான். நோட்டீசு அனுப்பியவர்கள் இதுவரை யாரையும் விமர்சித்ததில்லை என்றால், தலைக்கு நேர் மேலாக இந்தப் படத்தை மாட்டிக்கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.