Thursday, September 30, 2004

அரசியல் - அங்கேயும் இங்கேயும்

இன்று ஜார்ஜ் புஷ், ஜான் கெர்ரி இருவருக்கிடையிலான முதல் விவாதம் - யாருக்கு 2004 ல் அமெரிக்க ஜனாதிபதியாக அதிகத் தகுதி இருக்கிறதென்று தீர்மானிக்க நடத்தப்படும் மூன்று விவாதங்களில் முதல் விவாதம். பொதுவாக இந்த விவாதங்கள் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும் - இந்த முதல் விவாதம் மயாமி பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. எனக்கு என்னமோ இந்தமுறை ஜெயிக்கப்போவது புஷ்தான் என்று பட்சி சொல்கிறது - கெர்ரி ஜெயலலிதாவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய லட்சம் விஷயங்கள் உள்ளன. எப்படி ஒரு விஷயத்தைக் கிளிப்பிள்ளை மாதிரி ஆயிரம் தடவை சொல்லி ஜனங்களை மூளைச்சலவை செய்வது, எப்படித் தொண்டரடிப்பொடிகளை விட்டு சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்துவது போன்ற விஷயங்கள். முதல் விவாதம் இராக் போரைப்பற்றியது - இருந்தாலும், இந்தத் தேர்தல் முற்றிலும் அதைச்சுற்றியே அமைந்துள்ளதென்பது மறுக்கமுடியாத உண்மை. புஷ் தோற்கவேண்டுமென்று நான் நினைத்தாலும், கெர்ரி சவலைப்பிள்ளை மாதிரி 'நான் வியட்நாமில் மூன்று பதக்கங்கள் வாங்கினேன்' என்று வெறுமனே கத்திக்கொண்டிருந்ததுதான் மிச்சம். புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் இரண்டாம் மட்ட ஆசாமிகள் கெர்ரி ஒரு எடக்குமடக்கு ஆசாமி (flip-flopper) என்ற ரீதியில் ஆதௌ கீர்த்தனாரம்பத்தில் தொடங்கி, நேற்றுவரை அவரைத் துவைத்துத் தொங்கவிட்டுவிட்டார்கள். எந்த விஷயத்திலும் ஒரு நிலையான முடிவெடுக்க இயலாதவர் கெர்ரி, அதனால் ஜனாதிபதியாயிருக்க லாயக்கில்லாத ஆசாமி என்று ஜனங்களின் மூளைக்குள் சில மாதங்களுக்கு முன்பு அடிக்கத்தொடங்கிய டமாரத்தை அவர்கள் நிறுத்துவதாயில்லை. நான் மிகவும் ஆதரித்த டீன் ஒரு ஆவேசத்தில் தன் வாய்ப்பைக் கோட்டைவிட்டபிறகு, போனால் போகிறதென்று கெர்ரி ஏதாவது உருப்படியாகச் செய்யமாட்டாரா என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். இன்று பார்க்கலாம். நேற்று MSNBC சேனலில் பாட் புக்கநன், விவாதத்தின் முடிவு முதல் அரைமணி நேரத்தில் தெரிந்துபோய்விடும் என்றார் - புக்கனன் குடியரசிக்கட்சி சார்புடையவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இதை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள்.

1) என் அனுமானம் - புஷ், 'நீ என்னமும் சொல்லிக்கோ, நான் சொல்றதைத்தான் சொல்வேன் - இராக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது, நாம் ஜெயித்துக்கொண்டிருக்கிறோம் போன்ற பஜனைகளைத் தொடர்ந்து பாடுவார், கெர்ரி வாயைத் திறந்தால், ஜிம்மி கார்ட்டருக்கு ரீகன் 'There you go again' என்று ஆப்பு வைத்ததுபோல, 'பாருங்க சாமியோவ் கெர்ரி ஃப்ளிப்ஃப்ளாப்புகிறார்' என்று மடக்கப்போகிறார்! என் அமெரிக்க நண்பனொருவன், கெர்ரி தான் இதுவரை போட்டியிட்ட தேர்தல்கள் எதிலும் தோற்றதில்லை (பெரும்பாலும் என்றான் மறுநாள்) என்றான் - பொறுத்திருந்து பார்க்கலாம்.

2) இதுபோன்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்புண்டா? ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒரே மேடையில் சந்திப்பார்களா என்ன? ஜெயலலிதாவுக்கு எல்லாம் பச்சையாக இருக்கவேண்டும், நாத்திகவாதி கருணாநிதிக்கு எல்லாம் மஞ்சளாக இருக்கவேண்டும். அது போகிறது, அதற்குமேல் என்ன பேசுவார்கள்? போதாதகாலத்திற்கு கருணாநிதி தரையில் உட்காரவேண்டியிருக்கும். உடனே உடன்பிறப்பு சாதிவெறி என்று, வேறெந்தப் பண்ணிக்குட்டிகள் சாதிக்கட்சிகள் ஆரம்பித்திருக்கிறதென்று பார்த்து அவற்றிடம் ஆதரவு கோருவார். அம்மாவின் தொண்டரடிப்பொடிகள் கருணாநிதி காரை மறித்து கும்மாங்குத்து குத்த இரண்டு மைல் தள்ளி தயாராக நிற்கும் (மகளிரணி சேலையை வைத்து என்ன வித்தை காட்டும் என்பதை நாகரிகம் கருதிக் கூறாமல் தவிர்க்கிறேன்). அவ்வளவுதான். தமிழ்நாட்டு மக்கள்? கிடக்கிறான் மடப்பய. இந்தக் கோமாளிகள் ஆண்டும் தமிழ்நாடு பீகார் மாதிரி ஆகாமல், முன்னேறிய மாநிலமாக இருக்கிறதென்றால், அதே தமிழனின் சுய அறிவாலும் உழைப்பாலும்தான். எப்போது எம்ஜியார் 'அதிமுக பிரைவேட் லாரி கம்பெனி' தொடங்கினாரோ, எப்போது கருணாநிதிக்கு சாதிப் பேதி தொடங்கியதோ, அப்போதே அரசாங்கம் மேல் தமிழர்கள் ஆர்வம் இழந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் நானாவது இழந்துவிட்டேன். ஒவ்வொரு தடவை அமெரிக்க அரசியலைப் பார்க்கும்போதெல்லாம், எவ்வளவு தூரம் அரசியல்வாதிகளை மக்கள் accountable ஆக வைத்திருக்கிறார்கள், ஒரு சின்ன தவறைக்கூட மீடியாவும் பொதுஜனங்களும் பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டு, தவறு செய்தவனின் சிண்டைப் பிய்த்தெறிந்துவிடுகிறார்கள் என்பதைத்தான் மிக ஆச்சரியத்துடன் பார்ப்பேன் (விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு - மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி பணம்கொடுத்து இளமானபங்க வழக்குகளிலிருந்து தப்பிப்பதும் உண்டு, ஆனால் பத்திரிகைகளும் தொலைக்காட்சியும் குதறி எடுத்துவிடும்). தமிழ்நாட்டின் மிகப்பெரும் சேனல் சன் டிவி திமுகவின் வால், ஜெயா டிவி அதிமுகவின் கொம்பு, இடைப்பட்ட சேனல்கள் நடுநிலைமையுடன் இருக்க முயன்றால் அவற்றுக்கு இம்சை - இது வெறும் MHz பிரச்னையா என்ன? தினமலர், இன்னும் எம்ஜியார் உயிரோடு இருக்காரு என்று நினைக்கும் கனவுலக வியக்தி, மற்றப் பத்திரிகைகள் நடுநிலைமை எடுத்தால், அவற்றின்மேல் அம்மாவின் தாக்குதல் - தமிழ்நாடு ஜனநாயக மாநிலமா? சந்தேகந்தான். இவ்வளவுக்கும் கருணாநிதி? தன்னைக் கைதுசெய்தபோது கூப்பாடு போட்டுப் புலம்பியவர், ஜெயமோகன் அவரைப்பற்றிக் குறிப்பிட்டதும் முரசொலியில் மொட்டைக்கடுதாசி எழுதுகிறார்! இதிலும் பெரிய அசிங்கம் என்னவென்றால், அந்த விஷயம் ஆங்கில வலையில் பதிவாகவே இல்லை - link கொடுக்க கூகிளில் தேடு தேடென்று தேடினால், ம்கூம், nada. (09:01:2004 - பத்ரி அவர்களின் எதிர்வினையையும், இணைப்புகளையும் தொடர்க, நன்றி திரு. பத்ரி, மன்னியுங்கள்!) ஆங்கில ப்ளாக்கர்களாவது இதைப் பதிவுசெய்யுங்கள். கருணாநிதி யானையாம், ஜெயமோகன் ஏதோ ஒரு வானரமாம் - ஒரு பிரபல எழுத்தாளருக்கு இந்த மிரட்டல் விடப்படுகிறதென்றால், முருகனுக்கும் சுப்பனுக்கும் என்ன கதி?

Wednesday, September 29, 2004

கமலின் அந்தர்பல்டிகள்

ஏப்ரல் 10, 2004 குமுதம் இதழில் 'கமலை டென்ஷனாக்கிய கேள்வி' என்ற கட்டுரையைப் படிக்கவும். ஒருவேளை இதைத் தாமதமாகப் படித்தீர்களென்றால், 'சென்ற இதழ்' என்ற அடையாளத்தை உபயோகித்து, குறிப்பிட்ட இதழைத் தேர்ந்தெடுத்துப் படித்து, பின்பு அதே கமல் விட்டதாக 'தினமணி'யில் பதிவாகி இருக்கும் டயலாக்கையும் பார்க்கவும்! கேக்கறவன் கேனையன்னா கேப்பையில நெய் வடியுதாம்!

Tuesday, September 28, 2004

தினமலரும் டுபாகூரும்..

சீனாவில் ஓட்டலுக்குச்சென்ற ஒரு பெண் நூடுல்சில் ஈ இருப்பதைப் பார்த்தார். உடனே மானேஜரை அழைத்தார். அப்போது அங்குவந்த சர்வர் அந்த ஈயைப்பிடித்து விழுங்கினார். பின்னர் தங்கள் நூடுல்சில் ஈ இருக்கவே இருக்காது என்று ஓட்டல் நிர்வாகம் கூறிவிட்டது.

இது 09/28/2004 தினமலர் குட்டீஸ் கார்னரில் வந்த ஒரு துணுக்கு.எழுது சீனாக்காரனைப்பற்றி, யார் கேக்கப்போறா? இது நிஜ சம்பவமா, அப்படியென்றால் ஆதாரம் எங்கே? நிருபர் சீனா போய்வந்தார் போல! Desktop journalism என்பதற்கு புது அர்த்தம் கொடுத்த பெருமை தினமலரையே சாரும் -என்ன எழவை வேணும்னாலும் எழுது, எழுதிட்டு, 'இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்'னு முடிச்சிரு. அவ்வளவுதான். மேஜை நாற்காலியைவிட்டு நகரவே வேண்டாம்.

லொள் லொள் லொள்....

கடந்த மூன்று நாட்களாகப் படம் ஒன்றுகூடப் பார்க்கவில்லை. என்ன ஆச்சரியம்? சமீபகாலமாகப் படம் பார்ப்பது அளவுக்கதிகமாகப் போயிற்று - இப்போது சற்றுக் குறைந்திருக்கிறது. நேற்று lab லிருந்து தாமதமாக வீட்டுக்குப் போய் மூன்று டெக்கீலா ஷாட் அடித்துவிட்டு நன்றாக உறங்கிப்போனேன். நேற்று என்ன கடுப்பில் எழுதினேன் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு ஆதங்கம் தான். காஞ்சிபுரத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன்; கௌதம சித்தார்த்தனின் 'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுப்பு என்று நினைவு (அவர் அங்கு இல்லை). ஒரு நண்பன் தனது மதிப்புரையை வாசித்தான், அனைத்தும் முடிந்தபின்பு டி ஸிக்காவின் 'Bicycle thief' (இதை ஏன் இப்போதுவரை தமிழில் அடிக்கடி 'பைசைக்கிள் திருடர்கள்' என்று மொழிபெயர்க்கிறார்கள் என்று தெரியவில்லை) படம் போட்டார்கள். ஏற்கனவே சற்று அதிருப்தியில் இருந்தேன், அனைத்தும் முடிந்த பிறகு மெதுவாக பஸ் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன். வாசிக்கப்பட்ட கட்டுரை எனக்கு அபத்தமாகப் பட்டதா, அல்லது, இதைத்தானே நாம் அறிவியலில் செய்துகொண்டிருக்கிறோம், இப்படிக் கட்டுரை வாசித்து, விவாதித்து இலக்கியம் 'செய்ய' இதுவும் மற்றொரு '....logy' தானா என்று யோசிக்கையில், பரீட்சார்த்த எழுத்துக்கள் அனைத்தும் மேற்கத்தியக் கோட்டுகளுக்குள் கர்ச்சீப்புகள் போலத் தலைகவிழ்ந்து கிடக்க (உருவு போர்கேஸை (h ஐக் கண்டுபிடிக்க இயலவில்லை என் கம்ப்யூட்டரில்), உருவு கொர்த்தஸாரை, மிலோரட் பாவிக்கை, டோல்க்கீனை (இப்போது டோல்க்கீன் தூக்கியெறியப்பட்டிருப்பார், ஏனென்றால் Hollywood அவரது பெரும்படைப்பைப் படமாகஎடுத்து நிறையத் துட்டுப் பார்த்துவிட்டார்கள்!), மிலன் குந்தேராவை, JG பல்லார்டை, இத்யாதி இத்யாதி), தமிழில் நான் நாயாகத் தேடியலைந்த தனித்துவம் இறுதிவரை கிடைக்காமல் போனதில் எனக்குப் (என் invertebrateness க்கு) பெரும் பங்கு உண்டென்றாலும், கோணங்கி போன்ற அதீத மயக்கந்தரும் எழுத்துக்கள்கூட என்னைப் பிடித்துவைக்க இயலாமல்போனதற்குக் காரணம், அவை எழுப்பிய அனைத்துப் பிம்பங்களிலும் இருந்த வசீகரம், ஆச்சரியம், பிரமிப்பு ஆகியவை, அதன் உட்கட்டமைப்புச் சிக்கல் என்று ஒன்று முதலில் இருக்கிறதா என்ற சலிப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அப்படி ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்று நான் theorize செய்தால், என்னைவிடப் பெரிய மடையன் யாரும் இருக்க முடியாது - இங்கு நான் செய்ய முயல்வதெல்லாம், அவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்த நான் ஏன் இப்படி விலகிப் போனேன் என்று அலச முயல்வதே. இப்படிப்பட்டவர்களுக்கு, தன் கதை அல்லது புத்தகம் பிரசுரிக்கப்படாததும் ஒரு பெரிய காரணமாக இருக்கும், புலம்பித் தள்ளுவார்கள்; இங்கே எப்படிஎன்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டுவிடுகிறேன். ஏன் விலகினேன்? சுருக்கமாகச் சொல்லப்போனால், அப்போது இருந்த சூழல், hypersophisticated ஐரோப்பிய, அமெரிக்க சமுதாயங்கள் அவர்களது societal, psychological context ல் உருவாக்கிய இலக்கியங்களை மடத்தனமாக நமது வளர்ச்சிகுன்றிய (அடிரா சக்கை அமெரிக்க அடிவருடி!!) நில, மனப்பிரதேசத்தில் பொருத்த முயன்று மூக்குடைத்துக்கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். Hypersophisticated என்பதை 'அதிக துட்டு, பணக்கார சமுதாயம்' என்று அரைவேக்காட்டுத்தனமாகக் கொள்ளாமல், நிலைகெட்ட அரசியல் நிலவரம் எப்போதும் தாண்டவமாடும் தென்னமெரிக்க நாடுகளின் இலக்கியத்தையும், அதன் மனப்போக்கின் சிக்கல்களையும் உள்ளடக்கியதாக அர்த்தம் செய்துகொள்ளவேண்டும்; நம் நிலப்பிரதேசத்தில், உளச்சிக்கல்கள் என்று ஏதாவது உள்ளதா? தெரியவில்லை எனக்கு. நமது அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் துகள்களையும் வேற்றிடத்திலிருந்து பெறுகிறோம்; பேண்ட் சட்டை போட்டுக்கொண்டுதான் நமது கலாச்சாரத்தைப்பற்றி எழுதுகிறோம். நமது நோய்கள் மேற்கில் கண்டறியப்பட்டவை, நமது மருந்துகள் மேற்கில் கண்டறியப்பட்டவை.

இப்படித் திசைதவறிக் குரைப்பதற்குக் காரணம் என்னவென்றால், அறிவியலை இலக்கியவாதிகள் தவிர்ப்பதும், இலக்கியத்தை அறிவியலாளர்கள் புழு மாதிரிப் பார்ப்பதும்தான். நான் கல்லூரியில் படித்தபோது ஒரு பத்திரிகையை நடத்தி வந்தோம், நிர்வாகத்தரப்பிலிருந்து பொதுவாக நல்ல ஒத்துழைப்பு என்றாலும், ஒரு குறிப்பிட்ட ஆசாமி (எங்களது அப்போதைய துணைவேந்தர்), "கதை கவிதை எழுதறவனெல்லாம் திருடன் க்கிக் கிக் கீ" என்றார். நாசமாகப் போக என்று நினைத்துக் கொண்டேன் - அவரது எண்ணம் என்னவென்றால், 'சும்மாப் புத்தகத்தை மட்டும் படிடா வெண்ணெ, பத்துப் புழுவோட பதினொண்ணா இருந்தா போதாதா உனக்கு' என்பது. சரி தான். இலக்கியவாதிகளுக்கு அறிவியல் என்றால் அலர்ஜி. திரும்பக் கற்காலத்துக்குப் போனால் இப்போதைவிட இன்னும் நன்றாக எழுதலாம் என்று நினைப்பார்களோ தெரியவில்லை. எட்கர் ஆலன் போ, நபக்கவ், ஈக்கோ போன்றவர்களெல்லாம் இப்படித்தான் கற்காலத்துக்குப் போய், குகைகளுக்குள்ளிருந்து கொண்டு சுவற்றில் செதுக்கித் தள்ளினார்கள்!


Monday, September 27, 2004

சரோட் கச்சேரி

நேற்று பக்கத்து நகரமொன்றில் உஸ்தாத் அம்ஜத் அலி கானின் ஸரோட் கச்சேரிக்குப் போயிருந்தேன், நண்பன் ஒருவனுடன். அவரது இசையை ஆந்திராவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது கேட்டதுண்டு; நான் பெரிய சங்கீத மேதாவி இல்லையென்றாலும், ஆர்வத்தின்பேரில் random ஆகக் கேட்பதுண்டு - சைக்காவ்ஸ்கி, ச்சோப்பின், பார்தோக் போன்றவர்ளை இப்படித்தான் பிடித்தேன் - மொஸார்ட் மற்றும் பீத்தோவான் இருவரும் தாமே நம்மிடம் வந்து சேர்வார்கள்! இப்படி ஒருநாள் ஆந்திராவில் ஒரு கொளுத்தும் சாயங்காலத்தில் அம்ஜத் அலி கானைக் கேட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே வந்த என் நண்பன், என்னடா சாவு மியூசிக் கேட்டுட்டிருக்கே, DD யில போடற மாதிரி" என்றான் (தமிழ் பேட்ஸ்மேன்கள் பொறுக்க: என் நண்பனும் தமிழ்தான்!). ஆனாலும் மாணவ வாழ்க்கையில் (இப்போதும் மாணவன்தான் என்றாலும்) கச்சேரிகள் எதற்கும் போனதில்லை என்பதால், கச்சேரிக்குப் போகுமுன்பே கச்சேரி பிடித்துப்போகும் என்ற முடிவிற்கு வந்துவிட்டேனோ இல்லையோ தெரியவில்லை. இருந்தாலும், என் டுபாக்கூர் டேப்ரிக்கார்டரில் கேட்டதை நேரடிக் கச்சேரியுடன் ஒப்பிடக்கூடாதுதான் - அதுவும் ஒருவகையில் பிடித்திருந்தது. ராகம் கண்டுபிடிப்பது போன்ற சன்டிவி fancy shit அபத்தங்களையெல்லாம் உதறமுடிந்தால் சங்கீதத்தை யார்வேண்டுமானாலும் ரசிக்கலாம் தானே? தி.ஜானகிராமனுடைய கதை ஒன்று - பெயர் நினைவில் இல்லை -ஒரு வெள்ளைக்காரன் வந்து நாதஸ்வர வாசிப்பைக் கேட்டு, அவனுக்கு அந்த வாசிப்பு என்ன உணர்த்தியது என்று கூறுவதும், அந்த விவரிப்பு, வித்வானது ராகத்துடன் சரியாக ஒத்துப்போவதும்....யாருக்காவது நினைவிருக்கிறதா அந்தக் கதையின் பெயர்?

அதுபோல்தான் எனக்கும் இருந்தது. இரண்டரை மணி நேரம் கேட்டேன்; திரும்பி வரும்போது காரின் சிடி ப்ளேயரை அணைத்துவிட்டேன். அல்லது அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்து என் காதில்எதுவும் ஏறவில்லையா என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு எழுதியதுபோல, சில சந்தர்ப்பங்களில் மூளைக்குள் சிலீர் சிலீரென்று ஏதோ நொறுங்குவது போல - இல்லையில்லை, உருகுவது போல உணர்வு, பதறும் மூளை உடனே, எத்தனை neurotransmitterகள் அலைபாய்கின்றன என்ற குறுக்குவழியில் படீரென்று இட்டுச்சென்றுவிட்டது. இதுதான் வித்தியாசம் - சில வருடங்களுக்கு முன்பு இதை எழுதியிருந்தேனென்றால், மனது பதறுகிறதென்று எழுதியிருப்பேன், இப்போது மூளை பதறுகிறதென்று எழுதுகிறேன்! Manuscriptகள் எழுதப் பழகிக்கொண்டிருக்கும் கையைச் சற்று நிதானிக்கச்செய்தால் நன்றாயிருக்கும், ஆனால் அதை நிதானிக்கச்செய்ய நான் யார் அல்பன்! பிரம்மராஜனின் 'சித்ரூபிணி' என்ற நெடுங்கவிதையை முன்பு வாசித்தேன் - அது ஒரு ultimate காதல் கவிதையாகப் பட்டது - தமிழ்ப் புலவர்களால் அப்படி செத்தாலும் எழுதமுடியாது - அந்தவகையான urbanized psycheக்குத் தமிழில் வரவேற்புக் குறைவு. சுஜாதாவை விட்டால் பேண்ட் சட்டை போட்டவர்களைப்பற்றி தீவிர இலக்கியத்தில் எழுத யாருமில்லையென்ற ப்ரிதாபகர நிலைமைக்கு யார் காரணம்? முருகன் கந்தன் குசுக்குணசொரூபி என்று பெயர்களைமட்டும் வைத்து இத்தாலோ கால்வினோ மாதிரிக் கதைகள் எழுதி பிலிம் காட்டலாம், அல்லது சாரு நிவேதிதா மாதிரி இரண்டுங்கெட்டான் கதைகளை எழுதி தன்னை ஒரு சிதைந்த soul ஆகக் காட்டிக்கொள்ளலாம். அதுகூடஒரிஜினல் அக்மார்க் சிதைந்த soul கிடையாது; ஒத்துக்கொள்கிறேன் அவர் படைப்புக்கள் காப்பியடித்தது கிடையாது, அந்த சிதைந்த soul தான் அப்பட்டமான ப்ரெஞ்சு காப்பி! சீக்கிரமாக அவருக்கு யாராவது தமிழ்நாட்டின் Jean Genet என்று பட்டம் கொடுத்துவிட்டால் தேவலை. என் வாழ்க்கையிலேயே நான் செய்த கீழ்த்தரமான விஷயமாகக் கருதுவது காலச்சுவடு வாங்கி, வாரமலர் துணுக்கு மூட்டை மாதிரி அதன் 'எதிர்வினை' பகுதியை முதலில் படித்ததுதான் - அந்தப் பகுதியைக் குழாயடிச்சண்டை மாதிரிச் செய்ததில் சாருவுக்கும் 'பெரும் ஆக்கப் புலி' ஜெயமோகனுக்கும் பெரும் பங்குண்டு! நான் மிகவும் மதித்த ஜெயமோகன், 'விஷ்ணுபுர'த்தின் ஒவ்வொரு பக்க மூலையிலும் பேயாழ்வார் மாதிரி வந்து அமர்ந்துகொண்டு அறிவுப்பீற்றலடித்து என்னை இம்சைப்படுத்தியது என்ன, கடவுளே! தமிழர்களாகிய நாம் பாவம் அவரையும் ரஜினிகாந்த் மாதிரிச் செய்து நாறடித்துவிட்டோமே, கடவுள் நம்மை மன்னிப்பாரா?

Thursday, September 23, 2004


This is that photo...

ஆர்வ ஊற்றும் என் சிக்கலும்...

ஆங்கிலத்தில் சிலமுறை வலைப்பதிவுகள் செய்ய முயன்று பின்பு கைவிட்டாயிற்று, இப்போது இது எவ்வளவு நாட்கள் வருமென்று தெரியவில்லை. சில ப்ளாக்குகளை மேய்ந்தபோது எதிர்வினைகள் மிகமிகச் சொற்பமாகவே இருந்தன - என்ன எழுதுவது என்று ஒரு குழப்பம் வேறு - நான் இன்று எழுந்தேன், வந்தேன், போனேன் என்பதா இல்லை வேறு ஏதாவது எழுதுவதா என்ற நினைப்பு வேறு. ஓவியங்களில் ஆர்வம் உள்ளவர்கள் ஆர்ட்கைவ் என்ற வலைத்தளத்தை ஒருமுறை பாருங்கள் - மிக நல்ல தொகுப்பு. எனக்கு மிகவும் பிடித்த மேக்ஸ் எர்ன்ஸ்ட்டின் The entire City என்ற ஓவியத்தை எனது டெஸ்க்டாப்பில் வைத்திருக்கிறேன்; முதல் தடவை அதைப் பார்த்தபோது கிறுகிறு என்றது; இதைக் கற்பனை செய்துபாருங்கள் - அந்தப் படத்தைவிட்டு உங்கள் பார்வைப்பரப்பு ஒரு இம்மி கூட வெளியேற வாய்ப்பில்லாமல் இருந்தால் - அப்போது உங்கள் பார்வை அதில் குவிந்தால் - அதன் நிறங்கள் உங்களையும் தலைசுற்ற வைக்க வாய்ப்புண்டு. கணிப்பொறித் திரையில் பார்ப்பதும் லூவர் அருங்காட்சியகத்தில் பார்ப்பதும் ஒன்றாகாததுதான், இருந்தாலும்....


அவ்வப்போது இந்த மாதிரி ஆர்வங்கள் வருவதுண்டு, பின் சட்டென்று அவை மறைந்துபோவது வெறும் சோம்பேறித்தனத்தினால் மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன் - 'போகும்போது என்னத்தைக் கொண்டுபோகப்போறே' என்ற விட்டேத்தித் தத்துவ விசாரணைகளைச் சின்ன வயதில் கேட்காததுபோல் விட்டிருக்கலாம். கல்லூரி நாட்களில் இந்தமாதிரித் தத்துவ மோதல்களெல்லாம் பரீட்சைக்கு முந்தைய விடுமுறை நாட்களில்தான் வரும். இந்த dodgy போக்கு தேவைதான்; இல்லையென்றால் வாழ்க்கை சுரத்தில்லாமல் போய்விடும்.


Funes the memorious என்ற அற்புதமான கதையை சிலவருடங்களுக்கு முன்பு படித்தேன். அளவுக்கதிகமான ஞாபகசக்தியும் ஒரு சாபமே. ஆனாலும் அந்த விஷயத்தில் சபிக்கப்பட்டவர்களாக இருப்பதையே மனம் விரும்பும் என்று நினைக்கிறேன். மேலும் படிக்க விரும்பினால், இந்த கோனார் நோட்ஸ் படிக்கவும். எங்கோ சும்மா பிடித்தது. நல்ல கட்டுரைகள் வேறு இருக்கும்.

விட்டல விட்டல பாண்டுரங்க, இன்றைய பஜனை முடிந்தது....

Wednesday, September 22, 2004

Dogville

போதுமடா சாமீ இந்த இம்சை. முதலில் நன்றாகக் கம்ப்யூட்டர் தெரிந்திருக்கவேண்டும், அல்லது நன்றாக எழுதவாவது தெரிந்திருக்கவேண்டும். எப்படித் தமிழை கம்ப்யூட்டரில் எழுதுவது என்று தெரிந்துகொள்வதற்கு முன்னமே தாவு தீர்ந்துவிட்டது. பிரச்னை இன்னும் முடிந்தபாடில்லை. குறள் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதிலும், அதன் செயலியில் (word processor) தட்டச்சு செய்து, பின்பு அதை ப்ளாக்கரில் ஒட்டினால் font பிரச்னை. மைக்ரோசாப்ட் வர்டில் அடித்தால் தகராறு, கடைசியில் இந்த நோட்பேடில் அடித்து பின்பு ப்ளாக்கரில் ஒட்டுகிறேன். இதிலும், மெய்யெழுத்துக்கடுத்து இடைவெளி அடித்தால் அவ்வப்போது இடைவெளி விழுகிறது, அவ்வப்போது விழமாட்டேனென்கிறது. இருந்தாலும் பரவாயில்லை, நான் கணிப்பொறித் துறையில் இல்லை என்பதால் ஏதாவது பெரிய பிழை இருந்தாலும் தெரியாது, பொறுத்தருளவும். முக்கியமாக, Dogville என்றொரு படம் பார்த்தேன், அதைப்பற்றி அப்புறம் எழுதுகிறேன். லார்ஸ் வான் த்ரியெ (Lars Von Trier) என்ற டென்மார்க் நாட்டு இயக்குனரின் ஆங்கிலப் படம். படத்தில் பெரிய இம்சை யாரென்றால் நிக்கோல் கிட்மன் தான். மிக சமீபத்தில் அமெரிக்காவின் முக்கியமான திரைப்பட விமர்சகர்களில் ஒருவரான ரோஜர் ஈபர்ட்டின் அனைத்து விமர்சனங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. முன்பு ஒவ்வொரு முறையும் படத்தின் பெயரையும் ஈபர்ட்டின் பெயரையும் சேர்த்து கூகிளில் தேடவேண்டும், இப்போது அந்த இம்சை இல்லை. என்னதான் இருந்தாலும் அவரும் நம்ம ஊர் விமர்சனங்கள் போல எம்ஜியார் ரசிகர்களுக்கும் சேர்த்துத்தான் எழுதியாகவேண்டும்என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். Dogville விமர்சனத்தில் அவர் த்ரியெவின் அமெரிக்க எதிர்ப்பைப்பற்றி சலித்துக்கொள்ளவும் தவறவில்லை. த்ரியெ அமெரிக்கா வந்ததே இல்லை. அவருக்கு விமானப் பயணம் என்றால் அலர்ஜி. அது சரி. இருந்தாலும்...சரி ராமா, ஆரம்பித்தது ஆரம்பித்தாயிற்று, எழுதிவிடலாம். Dogville என்ற சிறிய நகரத்தில் (15 வீடுகள் - அமெரிக்காவில் கிராமம் என்ற விஷயமே காணாமல் போச்சு) புதிதாக வரும் க்ரேஸ் என்ற நி.கி (Nicole Kidman) ஐ சேர்த்துக்கொள்ள ஜனங்கள் எவ்வளவு சந்தேகப்படுகிறார்கள், சேர்ந்தபின்பு, ஏற்றுக்கொண்டபின்பு எப்படி சக்கையாகப் பிழிந்தெடுத்து இம்சைப்படுத்துகிறார்கள் என்பதை, வெறும் காட்சியமைப்புகளில் மட்டுமின்றி, காட்சிகளின் ஆமை வேகத்தின் துணையுடன் நம்மையும் பொறுமையிழக்க வைப்பதால், இறுதிக்காட்சியின் வன்முறையை நாம் அமைதியாகப் பார்க்க முடிகிறது. எனக்குப் படம் பிடித்திருந்தது. இது அனைத்து அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தைத் தாக்குவதாக ஒரு சில விமர்சனங்கள். இருக்கலாம், ஆனால் அது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் இல்லையா? கறைபடியாத கைகள் என்று உண்டா எங்கேயாவது?
பரவாயில்லை, இதைத் தட்டச்சு செய்ய முக்கால் மணி நேரம் ஆகியிருக்கிறது. இருந்தாலும், பலப்பல நாட்களுக்கடுத்து எழுதமுடிந்ததற்கு சந்தோஷமே.