Thursday, March 03, 2005

ஜோக்

ஜோக்

வெகுகாலமாய்த் தயாரானது
ஒரு ஜோக்.
ஒத்திகைகள் கணக்கற்று நீண்டன
இரும்பு நாற்காலிவிளிம்புகளில் தொங்கும் மழைத்துளி
பிரதிபலிக்கும் பச்சைகளிடம்
துளியின் கருவிழியின் பார்வைக்கடங்கா
பூட்ஸின் இறுக்குவார் முடிச்சுக்களில், அதன்
சிக்கல்களுக்குள் தோற்றிருந்த நனைந்த மண்துகளொன்றில்
கடந்துபோகும் புன்னகையில் தொங்கிக்கொண்டிருக்கும்
நீலக் கைப்பையின் உலோக ஒளிச்சிதறலில்.
ஒற்றை
வார்த்தையின் நெளிவுகள், புகைகக்கும் ஒற்றை ரயில்,
நூல்கயிறு இழுத்துச்செல்லும் தீப்பெட்டிச்சக்கரவண்டிக்குள் செத்திருக்கும்
பொன்வண்டின் கரும்பச்சைக்கருங் கொடுக்கென
ஜவுளிச் சேலைகள்சுற்றிய அட்டைகள் தானாக
எழுதிக்கொண்ட ஊர்ப்பெயர்தாங்கிய கட்டில்பேருந்துகளென,
சுக்கிலநாற்ற இருட்சந்துகளிலெனப்
பயணித்திருப்பது ஏராளம்.
மூளையில் பிதுங்கி அதிரும் அது இதுவரை
காணாதிருப்பது பிரயோகத்துக்கான கணம் மட்டுமே
ஈரச் சர்ப்பம் இழுத்துச்சென்ற மணல்போல்.

-மாண்ட்ரீஸர்; 03/03/05; 4:10PM

9 comments:

கறுப்பி said...

ரொம்ப சிக்கலான ஜோக்கா இருக்கே. வார்த்தைக் கோர்வை நன்றாக உள்ளது

Mookku Sundar said...

//ஈரச் சர்ப்பம் இழுத்துச்சென்ற மணல்போல்.
//
ஏயப்பா...?!!!

-/பெயரிலி. said...

ஆகா!

Thangamani said...

பிரயோகிக்கப்படவே இல்லையா?

சன்னாசி said...

ஆ! பதில்களே crypticஆகப் போட்டுக் கலக்குகிறீர்களே அனைவரும்!! நன்றி...

தங்கமணி: முடிவற்ற கர்ப்பம் எனில்?

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ம்ம்..இந்த ஜோக்கைப் போல உலகத்திலே எத்தனை விடயங்கள் முடிவில்லா கர்ப்பங்களில்?

சன்னாசி said...

அதல்ல விஷயம்....

ஈழநாதன்(Eelanathan) said...

பின்னூட்டங்கள்
இழுபடும்
கவிதை மாதிரி

arulselvan said...

good!