Wednesday, December 29, 2004

ஜாபர் அலியின் 'இரக்கமுள்ள' பதிவு

வெங்கட்டின் பதிவிலிருந்து ஜாபரின் வலைப்பதிவுக்குப் போய், அங்கிருந்து அவரது சிவப்பெழுத்திலிருக்கும் முந்தைய பதிவுக்குப் போய், அதனையும், எதிர்வினைகளையும், எதிர்வினைகளுக்கு ஜாபர் அளித்த பதிலையும் படித்ததில் தலைசுற்றிப் போனது, இத்தனை சாவுகள் நடந்திருக்கும் நேரத்தில் இப்படியும் ஈவிரக்கமின்றிப் பேசும் ஆட்கள் இருக்கிறார்களா என்று.

அந்த டிசம்பர் 28 பதிவில், சிவப்பு எழுத்தில், கீழ்க்கண்டவாறு கூறுகிறார்....

//11:102 அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும், மிகக் கடினமானதாகவும் இருக்கும்
அல் குர்ஆன்: சூரா - ஹூத்.//

என்கிறார். இப்படிப்பட்ட கோரங்களைச் செய்ய மனமுள்ள கடவுள் யாராயிருந்தாலும் சரி - விஷ்ணுவோ சிவனோ அல்லாவோ கிறிஸ்துவோ புத்தரோ யாராயிருந்தாலும் பாராட்டுவதற்கு என்ன மயிரு இருக்கிறது? இறைநம்பிக்கை என்பது வழிநடத்த உதவுவது என்பதை விடுத்து, அதை பயமுறுத்தும் கருவியாக உபயோகிக்கும் இவரைப் போன்றவர்களையும், சாமியாரை உள்ளே போட்டதால்தான் கடல் கொந்தளித்தது எனும் முட்டாள்களையும் முதலில் கடலுக்குள் எறியவேண்டும்.

//சுய ஆராய்ச்சி. இப்படி ஒட்டு மொத்த மனித உயிர்களின் இழப்புக்கு காரணம் என்ன? சிந்தியுங்கள். பூமியின் கால்வாசி கடலோர அழிவு சாதாரணமாக வந்து விடவில்லை. அங்கே வாழ்ந்த, அங்கே வந்து போய் கொண்டிருந்த மக்களின் கெட்ட நடத்தயால்தான் ஏற்பட்டு இருக்கிறது. தாய்லாந்தின் கடலோர ரிசார்ட்டுகளை அன்னிய நாட்டவர் அதிகமாக நாடி வருவதின் உள் நோக்கம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். விபசாரத்தை தொழிலாகவே கொண்ட கூட்டத்திற்கும், அதற்கு உடந்தையாக இருக்கும் சமூக அமைப்புக்கும் நீங்கள் வணங்கும் கடவுளிடமிருந்து என்ன தண்டனையை எதிர்பார்க்கிறீர்கள்.//

என்கிறார் அதே பின்னூட்டத்தின் தன் பதிலில். அன்னிய நாட்டவர் என்கிறார். தமிழில் எழுதும் இவர், எந்த நாட்டிலிருந்துகொண்டு எழுதுகிறார்? குவைத் இந்தியாவின் ஒரு மாநிலமா என்ன? அவர் அன்னியர் இல்லையா? இல்லையென்றால் குவைத் தான் அவரது சொந்த நாடா? விபச்சாரிகளை அழிக்கக் கடல் கொந்தளித்தது என்றால் பம்பாய் காமத்திபுராவிலும் கல்கத்தா சோனா கஞ்சிலும் டெல்லி ஜிபி ரோடிலும் புகுந்திருக்கவேண்டும். வாழ்க்கை நிர்ப்பந்தத்தால் இப்படிச் சீரழிந்த வாழ்க்கை வாழும் அவர்களைக் கருணையுடன் பாராமல் மூன்றாந்தரக் குடிமக்கள் போலப் பார்க்கும் இவருக்கு அடுத்தவர்களை விமர்சனம் செய்ய என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் பிறக்கும்போதே விபச்சாரம் செய்வதென்று முடிவெடுத்துக்கொண்டு பிறந்தார்களா என்ன? அப்படியென்றால், செத்த குழந்தைகள் கூட விபச்சாரம் செய்துகொண்டிருந்தார்களா? அதற்கும் அடுத்தாற்போல் விளக்கம் அளிக்கிறார்.

//உயிரிழந்த குழந்தைகள் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அநியாயக்காரர்களின் உலக உடைமைகள் இவ்வாறுதான் இறைவனால் கைப்பற்றப்படும். இன்னும் பிள்ளைகள் மட்டுமா? அவன் அடுத்தவரை ஏய்த்து சேர்த்த செல்வம், எவன் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன வந்தது எனக்கு கட்ட வேண்டிய வட்டியை கட்டு என்று மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைக்கும் கோர முகம் கொண்டவர்களின் அனைத்து உடைமைகளும்தான்.//

//ஒரு நம்பிக்கை கொண்டவனின் பார்வையில்...

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்;//

கடவுளே! எங்கே கொண்டுபோய் வைப்பது இவரை? இந்துமதம் கூட உலகமே மாயை என்கிறது. அதற்காக, குடும்பத்தினரும் மாயை தான் என்று அவர்களைக் கடலுக்குள் தள்ளிவிடவா முடியும்? ஆசையே துன்பத்துக்கு அடிப்படை என்றது புத்தமதம். ஜப்பானில் அனைவரும் தங்களது செல்வங்களையும் குழந்தைகளையும் கடலுக்குள்ளா வீசிவிட்டார்கள்? ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்றார் ஏசு. இந்தக் காலத்தில் கன்னத்தைக் காட்டினால் பழுக்கப் பழுக்க அறைந்துகொண்டேயிருப்பார்கள் என்பதல்லவா நிஜம்? Armageddon பற்றி பைபிளும் கல்கி அவதாரம், கலியுகம் பற்றி இந்து மதமும் பேசுகின்றன. அதற்காக, குஜராத் பூகம்பத்தில் செத்தவர்களும், சற்று வருடங்கள் முன்பு சூரத்தில் பிளேக் வந்து செத்தவர்கள் அனைவரும்கூட அநியாயம் செய்தவர்களா?

//இலங்கையின் சில முக்கிய இடங்களை குறிவைத்து ஹோமோசெக்ஸ் - ஓரிணபுணர்ச்சியாளர்கள் படையெடுப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர்களுக்காக சிறுவர்கள் விற்கப்படுவதும், இந்த முறைதவறிய செயலுக்கு சமூகம் துணை போவதும் இறைதண்டனையை பெற்றுதர போதுமானதல்லவா? வேதனை வந்த பின் கூக்குரலிட்டு என்ன பயன்? முன்னரே எம் சமூகம் குறித்து, அதனுடைய நடத்தைகள் குறித்து கவலை படாததின் விளைவுகளைதான் ஒட்டு மொத்த சமூகமும் அனுபவித்து வருகிறது.//

என்கிறார் ஜாபர். ஓரினச்சேர்க்கையை சட்டரீதியாக அங்கீகாரப்படுத்திய ஐரோப்பிய நாடுகளில் ஏன் கடல் புகவில்லை? ஒருவேளை அடுத்து ஏதாவது சுனாமி வருவது இவரின் ஞானதிருஷ்டியில் தெரிகிறதா?

//பொருளாதாரத்தை மட்டுமே நினைக்க தெரிந்த பணமுதலைகளும், கேடுகெட்ட அரசியல் வாதிகளும், அவர்களை ஜனநாயகம் என்ற பெயரால் தேர்ந்தெடுத்த மக்களும் என்றாவது ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டுமல்லவா?//

அடுத்து, ஜனநாயகம். ஜனநாயகம் என்ற பெயரால் தேர்ந்தெடுத்த மக்கள் என்று இவர் யாரைச் சொல்கிறார் என்று விவரம் தெரிந்தவர்கள் யாராவது எனக்குக் கொஞ்சம் விளக்குகிறீர்களா? என்னய்யா இது? சரி, அதை நான் விளக்கத் தேவையில்லை, மாயவரத்தான், //Rosavasanth..no tension...hez talking about Iraq..thatz all..!!// என்று கமெண்ட் எழுதியிருந்தார். அதை எதிர்கொள்ள ஜாபர் பின்வருமாறு தன் பதிலில் எழுதுகிறார்:

//இன்னும் ரோஸாவசந்தை சூடேற்றும் அதற்கு கீழுள்ள பின்னூட்டத்தைக் கவனியுங்கள். அவர் ஒன்றை அறிந்து கொள்ள தவறி விட்டார். ஈராக்குடைய முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறை நாம் நியாயப்படுத்துவோம் என்று எண்ணி கொண்டார் போலும். ஒருக்காலும் இல்லை. பக்கத்து நாட்டுடன் வலிய சண்டைக்குப் போய், அந்த நாட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு, அவர்களின் உடைமைகள் முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர்களாலேயே அபகரிக்கப்பட்டு, அங்கிருந்து ஏராளாமானவர்களை கைதிகளாக பிடித்துக் கொண்டு வந்து, தங்களுடைய சிறை கொட்டடிகளில் சொல்லொண்ணா சித்ரவதைகளுக்கு ஆட்படுத்தி கொலை செய்து, அந்த எழும்புகளையும் பத்திரப்படுத்தி வைத்தார்களே; இன்று வரை அந்த எழும்பு கூடுகளுடன் கூடிய சவப்பெட்டிகள் குவைத் வந்து கொண்டிருக்கிறதே! இது அநியாயம் இல்லையா? அந்த அநியாயத்துக்குதான் முந்தைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து அடாவடியில் ஈடுபட்ட மக்களுக்கும் இறைவனிடமிருந்து வரும் இறை வேதனை. விளங்கி கொள்ளுங்கள்.//

சதாம் உசேனைத்தான் குறிப்பிடுகிறார் என்று என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. முதலில் கேடுகெட்ட ஜனநாயகத்தைத் திட்டியாயிற்று, இப்போது சதாம் உசேனைக் கூறினால், அவரையும் திட்டியாயிற்று, ஆக, ஜனநாயகமும் வேண்டாம் சர்வாதிகாரமும் வேண்டாம். ஆக, இவர் சொல்வதுபடிப் பார்த்தால், ஜனநாயக நாட்டைக் கடல் கொந்தளிப்பு பார்த்துக்கொள்ளும். ஈராக் போன்ற சர்வாதிகார நாட்டை (அவர் சொற்படி) அமெரிக்கா கவனித்துக்கொள்ளும், இப்படியே போனால் அமெரிக்காவைப் பிறிதொருநாள் கடல் கவனித்துக்கொள்ளும், கடலைப் பிறிதொருநாள் வானம் விழுங்கும், ஆக மொத்தம், அனைத்தும் அழிந்துபோகும் என்ற nihilistic மனப்பான்மையுடன் துக்க வாழ்க்கை வாழவேண்டும் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது, அது எந்த மதம் சொல்வதாக இருந்தாலும். சரி, குவைத் என்ன பாவம் செய்ததென்று சதாம் உசேன் அதன்மேல் படையெடுத்தாராம்?

ஜாபரது வார்த்தைகள் எந்தளவு உண்மையாக இருக்கிறதென்று பார்க்க, பின்னூட்டங்களுக்கான தனது பதில் பின்னூட்டத்தில் அவரே கூறுவதை நான் இங்கே இடுகிறேன்:

//பார்வைகள் பேதப்படுவதால் தான் நீங்களும் நானும் வெவ்வேறு மதங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம்.இந்த தளத்தில் பின்னூட்டத்திற்கான கதவு திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது//

திறக்கப்பட்ட கதவு வழியாக இடப்பட்ட ஒரு கமெண்ட் உதைத்துத் தள்ளப்பட்டிருக்கிறது என்று கணேசன் சொல்கிறார். உண்மையா என்பதை ஜாபர் தான் சொல்லவேண்டும். தன் வார்த்தைகளுக்கே தன்னால் உண்மையாக இருக்கமுடியவில்லை, அதற்கு என்ன தண்டனை என்று அவரே நிர்ணயித்துக்கொள்ளட்டும்.

பெருமாளைக் கும்பிடு எனும் தினமலரும், ஜாபர் போன்றவர்களும் தானாக ஒருநாள் திருந்துவார்கள். ஆட்கள் செய்யாததை நாட்கள் செய்யும் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

எங்கள் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கம் நிதி உதவி திரட்டிக்கொண்டிருக்கிறது. திரு.ஜாபர், அதுபோல உங்கள் பக்கத்திலும் யாராவது இருப்பார்கள், கண்ணைத் திறந்து பாருங்கள். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே தங்களால் முடிந்ததைச் செய்யும்போது, இந்தமாதிரி எதையாவது உளறிக்கொண்டிருக்காமல் உருப்படியாக ஏதாவது செய்ய முயலுங்கள். Current trendக்குத் தகுந்தவாறு ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை.

இதே விஷயம் தொடர்பாக - ஈழநாதன்

No comments: