Tuesday, December 28, 2004

கரையும் கனவுகள்

சூனாமியின் கோரத்தாண்டவத்தைக்குறித்து எதுவும் எழுதக்கூடத் தோன்றவில்லை. காசி எழுதியதுபோல சிஎன்என்னில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பேட்டிகள், Phuketல் அவர்களது சங்கடங்கள் என்று தொடக்கத்தில் காட்டியது தாண்டிப் பிற பாதிப்புக்களையும் காண்பிக்கத்தொடங்கி, பின்பு, இதனால் அமெரிக்காவுக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று அலசி முடிக்கும்வரை எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகமாகிப்போவதை, பண உதவி செய்ததைத்தவிர, இயலாமையுடன் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க மட்டும்தான் முடிகிறது. இதனிடையில், கடல் பற்றிய மற்றொரு செய்தியையும் படிக்க நேர்ந்தது.

குற்றாலீஸ்வரன் என்னும் சிறுவனைப்பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். மாரத்தான் நீச்சலில் கைதேர்ந்த குற்றாலீஸ்வரன், ஆறு கடல்வழிகளை ஒரே வருடத்துக்குள் கடந்தபோது அவருக்கு வயது பன்னிரண்டு. நான் பள்ளியிறுதியில் இருந்தபோது, 1994ல் குற்றாலீஸ்வரன் அந்தச் சாதனையை நிகழ்த்தினார் - நம்மைவிட சின்னப் பையன், இந்த வயதில் என்ன சாகசம் செய்கிறான் பார் என்று அப்போது ஆச்சரியத்துடனும் பெருமையுடனும் நினைத்ததுண்டு. நாங்கள் திருட்டு தம் அடித்துக்கொண்டிருந்த நாட்களில், அந்த வயதில் குற்றாலீஸ்வரன் கின்னஸ் சாதனை செய்தது, அர்ஜூனா விருது பெற்றது எல்லாம் சாமானிய விஷயங்கள் அல்ல.

சமீபத்திய விகடனில் அவரது பேட்டியைப் படித்தேன், பின்பு இணையத்தில் தேடி, இந்து பத்திரிகை எடுத்த மின்னஞ்சல் பேட்டியையும், ரிடிஃப்பின் மற்றொரு பழைய செய்தியையும் படித்தேன். கனவுகளும் திறமையும் தவறான (அல்லது வாய்ப்பற்ற) இடங்களில் தோன்றிவிடுவதால் எப்படிச் சிரமப்பட்டுத் தேய்ந்துபோகின்றன என்பதை விகடன் பேட்டி துல்லியமாக விளக்குகிறது. ஹிந்து பேட்டியில் அவர் கூறுகிறார்: //In fact, when I was in Italy to compete, the Government offered to adopt me if I would swim for them. I declined. For, pride and satisfaction lie in representing one's own country. And let me tell you, the feeling is unparalleled.//
மேற்கொண்டு மாரத்தான் நீச்சலை அவர் தொடரவிரும்பாததற்குக் காரணம், விளையாட்டு குறித்த நமது சமுதாயத்தின் அசிரத்தை/போதாமைகள்தான் என்று அவர் கூறுவதிலிருந்து தோன்றுகிறது. அப்போதைய ஜெயலலிதா அரசாங்கம் அவருக்கு ஸ்பான்ஸர் செய்ததாக இணையத்தில் அறிகிறேன், அவரும் கூறியிருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நீச்சலுக்கும் ஸ்பான்ஸர்ஷிப் பெறுவதற்கு அவர்களது பெற்றோர் அலைந்த அலைச்சலைப் பார்க்கப் பொறுக்காமல், நீச்சலைவிடப் படிப்பில் கவனம் செலுத்துவது மேல் என்று அமெரிக்காவில் மேற்படிப்புப் படித்துக்கொண்டிருக்கிறார். "பின்பொருநாள் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க ஆர்வமுள்ளது" என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதே நீச்சற்பிரிவு அல்ல என்றாலும், ஒலிம்பிக்ஸில் சமீபத்தில் பட்டையைக் கிளப்பிய அமெரிக்க மைக்கேல் ஃபெல்ப்ஸூம், சென்ற, இந்த ஒலிம்பிக்ஸ்களின் நீச்சல் ஹீரோவான இயன் தார்ப்பும் ஒலிம்பிக்ஸில் பதக்கங்கள் பெற்றபோது அவர்களது வயதும் இருபதுக்குள்ளேயேதான் என்பதையும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் ஊக்கத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். அங்கேயெல்லாம் இல்லாமல், ஏன், சற்றுத் தள்ளி சீனாவில் பிறந்திருந்தால்கூட குற்றாலீஸ்வரனும், அவரைப்போன்ற எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடுமென்று நினைக்கிறேன். ஏழை நாடு, பணமில்லை என்றால், எத்தியோப்பியா, கானா போன்ற நாடுகளெல்லாம்? அதன் வீரர்கள்கூட மாரத்தான் ஓட்டத்தில் பதக்கங்கள் வாங்குவதில்லையா? கிரிக்கெட் கிரிக்கெட் என்கிறோம், ரஞ்சி ட்ராஃபி போன்ற நமது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டுக்களைக்கூட பெரியளவில் பணம் ஈட்டும் பந்தயங்களாக மாற்றமுடியவில்லை, பிறகு என்ன?

No comments: