Saturday, December 04, 2004

மூன்றாவது அறிவியல் கதை - ஜெயமோகன்

ஜெயமோகனின் இந்த மூன்றாவது அறிவியல் கதை எனக்குப் பிடித்திருந்தது. பறவையியல போன்ற ஒரு out of the box விஷயம் குறித்து முதன்முதலாக (குறைந்தபட்சம் நானாவது) தமிழில், அதுவும் புனைகதையில் படிப்பதாலும், மற்றப்படி வசனம் எழுதி இம்சை பண்ணாததாலும் ஒரு மகிழ்ச்சி. பறவைகளைத் திசைமாற்றிவிட்டதாக நஞ்சுண்டராவ் மகிழ்ச்சிகொள்ளும் அதே வேளையில், 'திசைமாற்றம்' என்பதை அர்த்தமற்றுப் போகச்செய்யுமாறு நடப்பதாக விவரிக்கப்படும் பிற இடப்பெயர்வுகள், 'point of reference' என்பதை அர்த்தமற்றுப் போகச்செய்கின்றது என்பதாகக் கதை விவரிப்பதாக நான் கொள்கிறேன். நஞ்சுண்டராவின் point of reference எகிப்து, அவர் மட்டிலும் அது வெற்றியாக இருப்பினும், அது எந்தமட்டிலும் உண்மை? சிறுவயதில் வட்டமான பலூனைப் பலவிதமாக ஒடித்துத் தற்காலிக மிருக உருவங்கள் செய்யும் வித்தைக்காரன் கடைசியில் படக் என்று அதைக் காணாமல் போகச்செய்யும்போது மறுபடியும் வட்டமான பலூன் கிடைப்பது, நமது வட்டயோசனைகளை, முழுமை குறித்த சிந்தனைகளை எளிதில் விளக்கும் ஒரு சந்தர்ப்பம். நஞ்சுண்டராவின் point of reference அந்தத் தற்காலிக பலூன் மிருகத்தின் ஒரு இணைப்புக்கண்ணி (joint) தான். அந்த இடத்திலிருந்து பார்க்கும்போது தெரிவது மிருகம் மட்டுமே, அதன் பிற கண்ணிகளிலிருந்து பார்க்கும்போது தெரிவதும் (அல்லது நாம் காண விரும்புவதும்) மிருக உருவம் மட்டுமே, ஆனால் அவற்றின் அர்த்தங்கள் அனைத்தும் தற்காலிக அர்த்தங்களே.

1) சுருக்கமாகச் சொல்வதென்றால் - இதைக் கற்பனை செய்யுங்கள்: அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், வானம் தெரிகிறது, தொடுவானம் வரைதான் நம் பார்வை எட்டும் என்பதால், வானம் என்பதை ஒரு வட்டமான துணி என்று எடுத்துக்கொள்ளலாம். இதன் இரண்டு reference point களான சூரியனையும் சந்திரனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள். இப்போது நாம் அந்தத் துணியைப் பார்க்கிறோம், மறுபடி சற்று நேரம் கழித்தும் பார்க்கிறோம். அந்தத் துணி வலப்பக்கமோ இடப்பக்கமோ சுழன்றதா என்று நம்மால் கூற இயலாது.

2) ஆனால், சூரியனோ சந்திரனோ அதில் இருந்தால் (heliocentric theory யை மறந்துவிடுங்கள், சூரியன் சந்திரன் என்பதை, வானத்துடன் சேர்ந்து சுழலும் இரு புள்ளிகளாக மட்டுமே கொள்ளுங்கள்), வட்டத்துணி சுழன்றதா இல்லையா என்று கூறமுடியும்.

கதையைப் படித்து நான் ஊகித்துக்கொண்டது - கருணாகர ராவின் யோசனை முதலாவதை அடிப்படையாகக் கொண்டது, நஞ்சுண்ட ராவின் சிந்தனை இரண்டாவதை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில், முழுமை என்ற சாத்தியத்தை அறியமுயல்வதற்கு (அல்லது உருவாக்க முயல்வதற்கு!!) மேற்கண்ட இரண்டு சாத்தியங்களுடன் இதைப்போன்ற கணக்கற்ற சாத்தியங்களையும் உருவாக்கியே ஆகவேண்டும். அறிவியல் முறைப்படி சொல்லப்போனால், ஒரு infinitesimal and self-perpetuating hypothesis testing model. சமீபகால் அறிவியலில், எனக்குத்தெரிந்து உயிரியல் துறையில், இதேபோன்ற கருத்தாக்கங்கள், கட்டுப்படுத்தி வலைப்பின்னல்கள் (regulatory networks) என்ற அளவில், ஒரு உயிரினம் எந்தெந்த விதங்களில் கட்டுப்படுத்தப்படுகிறது, அக் கட்டுப்படுத்தல்கள் எந்தெந்த விதங்களில் வாழ்வின் இயக்கத்தை, வசதியை அல்லது வசதியின்மையைத் தீர்மானிக்கிறது என்று ஆராய உபயோகப்படுத்தப்படுகிறது. இதைப்பற்றி ஒரு சுருக்கமான சிறுகட்டுரையைக் காண இங்கே சுட்டவும். மேற்குறிப்பிட்ட infinitesimal model என்பது இயந்திரவியலில் வர வாய்ப்பிருப்பினும், உயிரியலில் வரச் சாத்தியமில்லை என்பது என் அபிப்ராயம். இயந்திரங்கள் உருவாகுமுன்பே அதன் பயன் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது (பெரும்பாலும், அவை தேவை சார்ந்தவை (need based) என்பதால்; அறிவியல் விபத்துக்களே பின்னால் பெரும் கண்டுபிடிப்புக்களாகியிருக்கின்றன என்பதையும் நாம் மறுக்கமுடியாது), ஆனால் உயிர் என்பதன் நோக்கம் குறித்து நமக்கு முன்னும் தெரியாது, பின்னும் தெரிய வாய்ப்பில்லை என்று நான் கருதுவதால் அந்த அபிப்ராயம்.

இதைப்பற்றி மேலும் விளக்கமாகக் கூற தற்போது சந்தர்ப்பமில்லை, மனமுமில்லை என்பதால், இந்தச் சுட்டியைத் தொடர்க - அது விளக்கமோ எதிர்ப்போ இல்லை, ஒரு தொடர்ச்சி, அவ்வளவுதான். நல்லவேளையாக இது இணையத்தில் முழுதாகக் கிடைக்கிறது, இல்லையெனில் லொங்கு லொங்கு என்று தட்டச்சு செய்யவேண்டியதாயிருந்திருக்கும்... ஜார்ஜ் பெர்க்லியின் 'ஹைலாஸ் அண்ட் ஃபிலொனஸ்' நான் விரும்பிப் படித்த ஒரு படைப்பு. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு மதுரை காந்திமண்டபம் நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தது. விருப்பமுள்ளவர்கள், நேரமுள்ளவர்கள் அதைத் தொடரவும்.....

No comments: