Thursday, December 02, 2004

லேட்டஸ்ட் துண்டு சுழற்றல்...

'சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்று என்ன உபயோகம்' என்று ஒரு பழமொழி உண்டு. கருணாநிதிக்கு அது உபயோகமாகத்தான் இருக்கிறது என்பதால் பழமொழியை மறுபரிசீலனை செய்யவேண்டியதாயுமிருக்கிறது. சங்கரர் கைது, கொலைசெய்யப்பட்டதும் ஒரு சங்கரராமன் - ஆக, கருணாநிதி நாக்கில் சங்கர குடித்தனம்தான்; வாயைத் திறந்தாலே சங்கரா சங்கரா கூச்சல்தான் சமீபகாலமாக. ஜெயலலிதா அரசாங்கம் சங்கரராமன் குடும்பத்துக்குக் கொடுத்த ஐந்து லட்சம் போல கொலையாகும் பிற அனைவரின் உறவினர்களுக்கும் அரசு உதவி செய்யுமா என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்! சாத்தான் வேதம் ஓதுவது என்று இதைத்தான் சொல்வார்கள் போல.

முதலில்: கொலையான ஒருவர் குடும்பத்துக்கு நிதி உதவி அளிப்பது என்பதை, ஜெயலலிதாவோ கருணாநிதியோ யார் செய்துவந்திருந்தாலும், அதை அரசியலாக்கிப் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் பார்ப்பதே நாகரிகம். அந்த அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் உளறுவது கோபாலபுரத்து மடத்தலைவரால் மட்டுமே முடியும். மேலும், சங்கர மடம் போன்ற பெரும் ஸ்தாபனத்தை எதிர்த்ததால் கொலைசெய்யப்பட்டவரின் குடும்பம், அதே ஊரில் வசித்துக்கொண்டு பாதுகாப்பாக உணரமுடியுமா? பணத்தால் என்ன பாதுகாப்பு என்பார் மஞ்சத்துண்டு. சங்கரராமனின் குடும்பத்தார் என்ன சன் டிவி உரிமையாளர்களா வீட்டில் பணம் மரத்தில் காய்த்துத் தொங்க? சம்பாதித்துக்கொண்டிருந்த ஆசாமி இப்போது இல்லை. சோறு தின்னவேண்டாம்? ஒருவேளை காஞ்சிபுரத்தில் கஞ்சித்தொட்டி திறக்கலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ கருணாநிதி. கொலையானவர்களுக்கெல்லாம் கொடுப்பாரா பணத்தை என்றால்? வாய்க்கால் வரப்புத் தகராறில் கொலையாகிறவர்களைப்பற்றியா பத்திரிகைகளும் சன் டிவி போன்ற 'Fair and balanced' தொலைக்காட்சிகளும் நம்மைப்போன்ற இணையர்களும் எழுதி, காட்டிக் கிழிக்கிறார்கள்? இதை உதவி என்று கூறாமல், ஊடகங்கள் எழுதிக் கிழித்ததால் காணாமற்போன சங்கரராமன் குடும்பத்தின் நிம்மதிக்காக சமுதாயம் கொடுக்கும் நஷ்டஈடு என்று கூறலாமென்று நினைக்கிறேன்.

இந்து வெளியிட்டிருக்கும் செய்தியின் தலைப்பிலுள்ள poser என்ற வார்த்தையை மேலோட்டமாகப் பார்க்காமல், அதன் அகராதி அர்த்தத்தையும் சுட்டியைச்சுட்டித் தெரிந்துகொள்ளவும். வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் இந்துவுக்குள்ள அக்கறை நாம் அறிந்ததுதானே!

போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால், மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறது அரசு என்பார். உதவியேதும் செய்யாமல் நட்டாற்றில் விட்டால், என்ன மனிதாபிமானமற்ற அரசு என்பார். எதிர்க்கட்சியாக ஜெயலலிதா இருந்திருந்தாலும் இதேபோலக் கூவிக்கொண்டிருந்திருக்கச் சாத்தியமுள்ளது. ஆனால், அராஜகம், தான்தோன்றித்தனம், முரட்டுப் பிடிவாதம் போன்ற பிம்பங்களை உபயோகித்து ஜெயலலிதாவைத் தாக்கும் கருணாநிதிக்கு, அவையெல்லாம் அவரது ஜாதி அரசியல் வாழ்வைவிட எந்தவிதத்திலும் கேவலமானவை அல்ல என்ற உண்மை விளங்காமலா இருக்கும்? ஒருவேளை தா.கி குடும்பத்துக்கும் ஜெயலலிதா ஐந்து லட்சம் கொடுக்கவில்லை என்ற கோபமோ என்னவோ?

2 comments:

மீனாக்ஸ் | Meenaks said...

Are you referring to the meaning "baffling question" for the word 'poser'??

சன்னாசி said...

ஆமாம். ஏதோ பல்லைக் கடித்துக்கொண்டு எழுதிய தலைப்பு போல் பட்டது. அதனால்தான்...